வெள்ளி, 12 ஜூலை, 2013

பொறியியல்/மருத்துவ கல்லூரி நன்கொடைகள் வாங்கிய பின் இல்லை என்றால் எங்கு போவது ?

TY04-APPLICATION2_113540f
இன்று தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேரவேண்டும் என்றால் வரையறுக்கப்பட்ட கட்டணத்துக்கு மேலாகப் பணம் தரவேண்டும் என்பது கிட்டத்தட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது இவ்வாறு பணம் தருவதை சமுதாயம் முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டது. சட்டம் மட்டும்தான் இதெல்லாம் தவறு என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. எங்காவது ஓரிடத்தில் ஒரு நாள் ரெய்டு நடக்கிறது. அதையும் யாரும் கண்டுகொள்வதில்லை.
ஆனால் இப்படி இலை மறைவு காய் மறைவாக இந்த விஷயம் நடப்பதால் உண்மையில் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் குழப்பமே ஏற்படுகிறது. எஞ்சினியரிங்கை எடுத்துக்கொண்டால் எந்த காலேஜில் எந்த பிராஞ்சுக்கு எத்தனை ரூபாய் கேட்கிறார்கள்? அவ்வாறு கேட்பதை இன்னொரு காலேஜில் அதே பிராஞ்சுக்குக் கேட்கும் பணத்துடன் ஒப்பிடலாமா?
இந்தப் பணத்தை ‘கருப்பில்’ கொடுக்கவேண்டும் என்பதால் கேஷாகக் கொடுக்கவேண்டும் அல்லவா? அதனை யாரிடம் எங்கே கொடுக்கிறார்கள்? கட்டுக் கட்டாகப் பணம் கைமாறும்போது பணம் திருடுபோய்விட வாய்ப்பு இருக்கிறதல்லவா?
பொதுவாக ஒரு கல்லூரிக்குச் சென்று பேசும்போது யாரிடம் இந்தப் பணம் பற்றிய விவாதம் நடக்கும்? பிரின்சிபாலே இதைப் பற்றிப் பேசுவாரா அல்லது அதற்கென்று தனியாக ஆட்கள் இருப்பார்களா?

இடைத்தரகர்கள் உண்டா? அவர்களை எப்படி நம்புவது? நம்பி அவர்களிடம் பணம் கொடுத்துவிட்டு, அவர்களால் சீட் பெற்றுத் தரமுடியாது என்றால் அவர்கள் பணத்தைத் திருப்பித் தந்திருக்கிறார்களா?
பணம் கொடுத்தாலும் சீட் கட்டாயமாகக் கிடைத்துவிடுமா? சீட் தரமுடியாது என்று நிறுவனம் சொன்னால் யாரிடம் போய் முறையிடுவது?
இதைப்பற்றி நேரடி அனுபவம் உள்ளவர்கள் எழுதினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறோம். அவற்றை தமிழ்பேப்பரில் வெளியிட விரும்புகிறோம். நீங்கள் உங்கள் பெயர், கல்லூரியின் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் அனானிமஸாக வெளியிடலாம்.
இங்கே நோக்கம் என்ன என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பணம் கொடுத்தால்தான் தனியார் கல்லூரிகளில் professional seat கிடைக்கும் என்றாகிவிட்ட நிலையில் இந்தப் பணம் கொடுக்கும் நிகழ்வு எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது மட்டும்தான் வாசகர்களிடம் இது குறித்துக் கேட்பதன் நோக்கம். இந்தக் கல்லூரி மோசம், அந்தக் கல்லூரி நல்லது என்பதை நிறுவுவதற்கு அல்ல. நீங்கள் எழுதி அனுப்பும் அனுபவங்களில் சுவாரஸ்மானவற்றைத் தேர்ந்தெடுத்து பிரசுரிக்க விரும்புகிறோம். மிகவும் சிறியதாக எழுதி அனுப்பினால் அவை சிலவற்றை ஒன்றுதிரட்டி ஒரே பதிவாக வெளியிடுவோம்.
உங்களுக்கு நேரடி அனுபவம் இருந்தால் மட்டும் எழுதுங்கள். என் நண்பர் சொன்னார், அல்லது நண்பருக்கு நண்பர் சொன்னார் என்று எழுதவேண்டாம்.
நீங்கள் எழுதி அனுப்பவேண்டிய முகவரி: editor@tamilpaper.net

கருத்துகள் இல்லை: