சனி, 13 ஜூலை, 2013

நரேந்திர மோடி: குஜராத் கலவரத்தில் நான் செய்தது சரிதான் ! நான் குற்றமற்றவன் ????

 கோத்ரா ரயில் எரிப்பு:குஜராத்தில், 2002ல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை
தொடர்ந்து, பெரும் கலவரம் வெடித்தது. ஏராளமான சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, அம்மாநில முதல்வர், நரேந்திர மோடிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, புகார் கூறி வருகின்றன.தற்போது அவர், பா.ஜ.,வின் பிரசார குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ., பிரதமர் வேட்பாளராகவும், அவர் அறிவிக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்த, ஐக்கிய ஜனதா தளம், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்நிலையில், "குஜராத்தில் நடந்த கலவரம், நரேந்திர மோடி, பிரதமராவதற்கு தடையாக இருக்குமா' என்ற ரீதியில், அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ளது.இது தொடர்பாக, இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வந்த நரேந்திர மோடி, தற்போது முதல் முறையாக, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். மதத்தின் பெயரை வைத்தே நான் தேசிவாதி என்று சொல்வது இந்தியாவை சீர் குலைத்து விடும்...... நான் இந்திய தேசியவாதி என்று நீங்கள் கூறியிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்..... ஆனால் உங்களது பேட்டியின் மூலம் மடியில் இருந்த பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது......

தனியார் செய்தி நிறுவனத்துக்கு, நேற்று, அவர் அளித்துள்ள பேட்டி:குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து, தொடர்ந்து என் மீது புகார்கள் கூறப்படுகின்றன. ஒரு தவறு செய்திருந்து அல்லது திருடியிருந்து, அதற்காக கையும், களவுமாக பிடிபட்டால், கவலைப்பட வேண்டும். என்னுடைய விஷயம் அப்படிப்பட்டதல்ல.குஜராத்தில், 2002ல், நடந்த கலவரத்தின்போது, நான் செய்ததெல்லாம் சரியானது தான். இந்த கலவரம் தொடர்பாக விசாரிப்பதற்காக, சுப்ரீம் கோர்ட் சார்பில், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, என்னை குற்றமற்றவன் என, அறிவித்துள்ளது. இதை, யாரும் நினைவுபடுத்தி பார்ப்பது இல்லை.


நாய்க்குட்டி விவகாரம்:


நாம் காரின், பின் சீட்டில் பயணிக்கும்போது, ஒரு நாய்க்குட்டி, காரில் விழுந்து அடிபட்டால், நமக்கு வருத்தம் ஏற்படுமா, இல்லையா... வருத்தம் இருக்கத் தானே செய்யும்! அதேபோன்ற வருத்தம் எனக்கும் இருந்தது.நான், முதல்வரா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால், மனித நேயமிக்கவன். உலகில் எங்காவது ஒரு தவறான செயல் நடந்தால், அதற்காக வருத்தப்படுவது இயற்கை தானே! சர்ச்சைக்குரிய நபராக, என்னை சித்தரிக்கின்றனர். அமெரிக்காவில் கூட, வேறுபட்ட கருத்துக்களை கூறுவது, ஜனநாயகத்தில் இயற்கையான விஷயம் என, கூறப்படுகிறதே!நான், தேசியவாதி; நாட்டுப் பற்றுள்ளவன். இதில் என்ன தவறு இருக்கிறது? நான், இந்துவாக பிறந்திருக்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இந்துவாக பிறந்ததால், இந்து தேசியவாதி என, கூறுகின்றனர்."முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பவர், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுபவர், வேலையே குறியாக இருப்பவர்' என, என்னைப் பற்றி, பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. இவை, ஒன்றோடு ஒன்று தொடர்புடையது தான். இதில், எந்த முரண்பாடும் இல்லை.இவ்வாறு, நரேந்திர மோடி கூறினார்.

சஞ்சய் ராவத்,சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர்: குஜராத் கலவரம் தொடர்பாக, நரேந்திர மோடி கூறியுள்ளதை வரவேற்கிறோம். நாட்டின் தலைமைப் பொறுப்பு, இந்துத்வா தலைவர் ஒருவரிடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே, எங்களின் உறுதியான நம்பிக்கை. எங்கள் கட்சியின் நிறுவனரான, பாலாசாகிப் தாக்கரே, இதைத் தான் விரும்பினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்:சமாஜ்வாதி கட்சி கோரிக்கை:

குஜராத் முதல்வரின் இந்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாதி கட்சி செய்தி தொடர்பாளர், கமல் பரூக்கி, ""நரேந்திர மோடி, என்ன நினைக்கிறார் என்றே தெரியவில்லை. குஜராத் கலவரத்துக்கு, காரில், நாய்க்குட்டி அடிபடுவதை உதாரணமாக கூறியுள்ளார். அப்படியானால், நாய்க்குட்டிகளை விட, முஸ்லிம்கள் மோசமானவர்களா? தான் தெரிவித்த கருத்துக்கு, நரேந்திர மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.

மத்திய சட்ட அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சல்மான் குர்ஷித் கூறுகையில், ""நரேந்திர மோடி, இந்திய மக்களை குறைவாக மதிப்பிட்டுள்ளார். மதம் தொடர்பான விஷயங்களில், மிக குறுகிய மனப்பான்மையுடன், அவர் செயல்படுகிறார். இந்த சர்ச்சைக்குரிய கருத்தின் மூலம், அவரே, அவரின் மிகப் பெரிய எதிராகியுள்ளார்,'' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் பிருந்தா கராத், இந்திய கம்யூ., மூத்த தலைவர் டி.ராஜா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின், சிவானந்த் திவாரி ஆகியோரும், மோடியின் பேச்சுக்கு, கண்டனம் தெரிவித்துள்ளனர். dinamalar.com

கருத்துகள் இல்லை: