வெள்ளி, 12 ஜூலை, 2013

வவ்வால் பசங்க கதாநாயகி சோலார் விவகாரத்தில் சிக்குகிறாரா ?

திருவனந்தபுரம் : கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில்,
மேலும் ஒரு இளம் நடிகைக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
சோலார் பேனல் மோசடி விவகாரத்தால் கடந்த சில வாரங்களாக கேரள அரசியல் பரபரப்பு நிலவுகிறது. முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலக வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட புகாரின் பேரில் பிரபல நடிகை சாலுமேனன் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், இந்த மோசடியில் பிரபல மலையாள நடிகை உத்தரா உண்ணிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திரம் மற்றும் தாய் வேடங்களில் நடித்துள்ள ஊர்மிளா உண்ணியின் மகள். மலையாளத்தில் ‘இடவப்பாடி’ உள்ளிட்ட படத்திலும், தமிழில் ‘வவ்வால் பசங்க’ படத்திலும் நடித்துள்ளார். சோலார் பேனல் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள சரிதா நாயருடன் சென்னை, டெல்லிக்கு உத்தரா உண்ணி பலமுறை விமானத்தில் சென்றுள்ளார். இவருக்கான செலவுகளை சரிதா நாயர் செய்துள்ளார். மேலும், சரிதா நாயரின் ‘டீம் சோலார்’ நிறுவனத்துக்கு விளம்பர தூதுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உத்தரா உண்ணி தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.


சரிதா நாயருடன் உத்தராவுக்கு தொடர்பு இருந்ததற்கான தகவல் வெளியானதை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். மோசடியில் உத்தராவுக்கு தொடர்பு இருப்பதாக  தெரியவந்தால், அவரையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஊர்மிளா உண்ணி கூறுகையில், ‘எனது மகள் உத்தரா, சோலார் நிறுவனத்துக்கு மாடலாக மட்டுமே நடித்துள்ளார். அவருக்கு மோசடியில் எந்த தொடர்பும் இல்லை’ என்றார்.

கருத்துகள் இல்லை: