வியாழன், 11 ஜூலை, 2013

மோடியை அம்பலப்படுத்தியதற்காகக் கொல்லப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியா.

மோடி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட குஜராத் முசுலீம் படுகொலை குறித்த வழக்கு-விசாரணைகள் ஒருபுறமிருக்க, முன்னாள் நீதிபதி ஹெச்.எஸ். பேடி என்பவர் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்று அம்மாநிலத்தில் 2003-க்கும் 2006-க்கும் இடைபட்ட காலத்தில் நடந்த 16 ‘மோதல்’ கொலைகள் பற்றி விசாரணை நடத்தி வருகிறது. 2004-ம் ஆண்டு நடந்த இஷ்ரத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உள்ளிட்ட நான்கு முசுலீம்கள் படுகொலை, 2005-ம் ஆண்டு நடந்த சோராபுதீன் படுகொலை, 2006-ம் ஆண்டு நடந்த துளசிராம் பிரஜாபதி படுகொலை ஆகியவை போலிமோதல் கொலைகள் என்பது நிரூபணமாகி, இவை தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றமும் குஜராத் உயர் நீதிமன்றமும் கண்காணித்து வருகின்றன. குஜராத் முசுலீம் படுகொலையின்பொழுது மோடி அரசில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவின் கொலைக்கும், சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி போலிமோதல் கொலைகளுக்கும் இடையே உள்ள தொடர்போ மர்மங்கள் நிறைந்த துப்பறியும் நாவலைப் போல விரிகிறது.

போலி மோதல் கொலைகள்
போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள். (உள்படம்) இஷ்ரத் ஜஹான். (கோப்புப் படம்)
சோராபுதீன் போலிமோதல் கொலைவழக்கு தொடர்பாக குஜராத் அரசின் தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த போலீசு அதிகாரிகள் மட்டுமின்றி, மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும் அவரது அரசில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவருமான அமித் ஷாவும் கைது செய்யப்பட்டு, தற்பொழுது அவர் பிணையில் விடப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் போலிமோதல் படுகொலையில் 21 உயர் போலீசு அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது, சி.பி.ஐ. இப்படுகொலையில் தொடர்புடைய போலீசு அதிகாரிகளைக் காப்பாற்றுவது தொடர்பாக விவாதிப்பதற்கு மோடி அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்த பிரபுல் படேல் தலைமையில் நவம்பர் 2011-ல் இரகசியக் கூட்டமொன்று நடந்துள்ளது. இப்படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் கிரிஷ் லஷ்மண் சிங்கால் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவற்றை இரகசியமாக ஒலிப்பதிவு செய்து வைத்திருந்ததை, தற்பொழுது சி.பி.ஐ.-யிடம் சாட்சியமாக அளித்திருக்கிறார்.
ஏதோ ஒரு சில போலீசு அதிகாரிகள் மட்டுமல்ல, மோடி அரசு முழுவதுமே கிரிமினல் கும்பலைப் போலச் செயல்பட்டு வருவதை இப்போலி மோதல் கொலை வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. நரோடா பாட்டியா படுகொலைக்குத் தலைமை தாங்கிய மாயாபென் கோத்நானிக்கு, மோடி தனது அரசில் அமைச்சர் பதவி கொடுத்து வைத்திருந்ததும்; சோராபுதீன் கொலைவழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டு பதவி விலகியுள்ள அமித் ஷாவை மோடி உ.பி.யின் பொறுப்பாளராக நியமித்திருப்பதும் அரசு மற்றும் அரசியல் அமைப்புகளை மோடி எந்தளவிற்கு கிரிமினல்மயமாக்கி வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இக்கிரிமினல்மயம்தான் மோடியின் நிர்வாகத் திறமை போலும்!
ராஜேந்தர் குமார்
குஜராத் போலீசு நடத்திய இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலைக்கு உடந்தையாக இருந்த மத்திய உளவுத் துறையின் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார்.
ஓட்டுப் பொறுக்குவதில் எலியும் பூனையும் போல நிற்கும் மோடியும் காங்கிரசும் முசுலீம் தீவிரவாத எதிர்ப்பு அரசியலில் நெருங்கிய தோழர்களாகச் செயல்பட்டுவருவதை இஷ்ரத் ஜஹான் மற்றும் சோராபுதீன் போலிமோதல் கொலை வழக்குகளில் காணமுடியும். சோராபுதீனை ஆந்திராவிலிருந்து குஜராத்திற்குக் கடத்தி வருவதில் குஜராத் போலீசுக்கு, காங்கிரசு ஆட்சியிலுள்ள ஆந்திரா போலீசார் உதவியுள்ளனர். இஷ்ரத் ஜஹான் போலிமோதல் கொலை வழக்கிலோ, மத்திய காங்கிரசு அரசு மோடியின் பங்காளியாகச் செயல்பட்டிருப்பது நிரூபணமாகி வருகிறது.
“இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு குஜராத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்” என்ற “பிட்டை” – போலீசு மொழியில் உளவுத் தகவலை – மோடி அரசிடம் போட்டதே மைய அரசின் உளவுத்துறைதான் என்பது ஏற்கெனவே மைய அரசாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. வெறும் உளவுத் தகவலை அளித்ததோடு மட்டும் உளவுத் துறையின் பங்கு முடிந்து விடவில்லை என்பது இப்பொழுது அம்பலமாகி இருக்கிறது. அச்சமயத்தில் உளவுத் துறையின் குஜராத் மாநிலத் தலைமை அதிகாரியாக இருந்த ராஜேந்தர் குமார் (தற்பொழுது இவர் உளவுத்துறையின் சிறப்பு இயக்குநர்) இந்த உளவுத் தகவலை அளித்ததோடு, அந்த நால்வரையும் சட்டவிரோதமாகக் கொலை செய்வதில் குஜராத் போலீசு அதிகாரிகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் சி.பி.ஐ. குற்றஞ்சுமத்துகிறது.
“அவர்கள் நால்வரும் குஜராத் போலீசின் சட்ட விரோதக் காவலில் இருந்த பொழுது ராஜேந்தர் குமார் நேரடியாக வந்து அவர்களைச் சந்தித்தார்; ஏ.கே. 56 இரகத் துப்பாக்கி ஒன்றை குஜராத் போலீசிடம் கொடுத்து, அத்துப்பாக்கியை அத்தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறும்படித் திட்டம் போட்டுக் கொடுத்ததே ராஜேந்தர் குமார்தான்” என இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசு அதிகாரிகள் சி.பி.ஐ.-யிடம் சாட்சியம் அளித்திருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இது மட்டுமின்றி, ராஜேந்தர் குமார் அவர்கள் நால்வரையும் தீவிரவாதிகளாகச் சித்தரித்து அளித்த உளவுத் தகவலையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது, சி.பி.ஐ. இந்த வழக்கு விசாரணை புலி வாலைப் பிடித்த கதையைப் போலாகிவிட்டதால், காங்கிரசு அரசு வேறுவழியின்றித் தனது உளவுத் துறையின் மானம் மரியாதையைக் காப்பாற்ற குறுக்கு வழியில் இறங்கியிருக்கிறது.
சி.பி.ஐ., ராஜேந்தர் குமாரை இரண்டாம் முறையாக விசாரணைக்கு அழைத்தவுடனேயே, மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங், சி.பி.ஐ., மற்றும் உளவுத் துறை இயக்குநர்களை அழைத்து ஒரு பஞ்சாயத்தை நடத்தி வைத்தார். இதன் காரணமாக ராஜேந்தர் குமாருக்கு எதிராக வலுவான குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவரை விசாரிப்பதற்கே ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் விதித்த மைய அரசு, இவரது பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெறுவதை அனுமதிக்குமா என்பது கோடி ரூபாய் பெறுமானமுள்ள கேள்வியாக எழுந்து நிற்கிறது. மேலும், இவ்வழக்கில் தற்பொழுது தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் குற்றப்பிரிவு போலீசு அதிகாரி பி.பி.பாண்டேவிற்கு காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மைய அமைச்சர்கள்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹரேன் பாண்டியா
குஜராத் முசுலீம் படுகொலையில் மோடிக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியதற்காகக் கொல்லப்பட்ட குஜராத் மாநில முன்னாள் வருவாய்த்துறை இணை அமைச்சர் ஹரேன் பாண்டியா.
இதுவொருபுறமிருக்க, இஷ்ரத் ஜஹானோடு சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவரான ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளைக்கும் லஷ்கர் அமைப்பின் கமாண்டர் ஒருவருக்கும் இடையே நடந்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்களை ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் தொலைக்காட்சியின் வழியாக இப்பொழுது கசியவிட்டு, அதன் மூலம் “அந்நால்வரும் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள்தான்; மோடியைக் கொல்ல வந்தவர்கள்தான்” என்ற தனது பொயை முட்டுக் கொடுத்து நிறுத்த முயன்றது, உளவுத்துறை. “இந்த ஒலிநாடாவை இத்தனை நாட்களாக நீதிமன்றத்தில் கொடுக்காமல் இருந்தது ஏன்?” என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அம்பலப்பட்டும் போனது.
போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்நால்வரையும் உளவுத்துறை கீழ்த்தரமான முறையில் குற்றஞ்சாட்டுவதும் அதற்கு முதலாளித்துவப் பத்திரிகைகள் கூஜாவாகச் செயல்படுவதும் புதியதல்ல. மும்பய்த் தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்படும் டேவிட் ஹெட்லி, “இஷ்ரத் ஜஹான் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்தான்” என அமெரிக்க போலீசிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாக ஒரு செய்தியை சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிக்கைகளில் கசியவிட்டது, உளவுத் துறை. இதனைப் பின்னர் மைய அரசின் தேசியப் புலனாய்வு ஏஜென்சி மறுத்து, டேவிட் ஹெட்லி அப்படியெல்லாம் வாக்குமூலம் அளிக்கவில்லை என விளக்கம் அளித்தது. ஆனாலும், மோடியின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, பிரபலமான முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட உளவுத் துறை கசியவிட்ட இப்பொய்ச் செய்தியை இன்றும்கூட திரும்பத்திரும்ப வெளியிட்டு, இப்படுகொலையை நியாயப்படுத்த முயன்று வருகிறார்கள்.
இதைவிடக் கேவலமாக இப்பிரச்சினையில் நடந்துகொண்டார், மைய அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை. சிறப்புப் புலனாய்வுக் குழு, இது போலிமோதல் கொலைதான் என்பதை உறுதிசெய்து குஜராத் உயர் நீதிமன்றத்திடம் அறிக்கை அளித்த சமயத்தில், “இஷ்ரத் ஜஹான் வெவ்வேறு விடுதிகளில் பல ஆண்களோடு சேர்ந்து தங்கியிருந்ததாக”க் கூறி, அவ்விளம் பெண்ணின் நடத்தையை அசிங்கப்படுத்த முயன்றார், அவர். இந்த அவதூறை தேசியப் பத்திரிகைகள் ஏதோ அரிய கண்டுபிடிப்பைப் போல வெளியிட்டு, உளவுத் துறைக்கு முட்டுக் கொடுத்தன.
கோட்னானி, அமித்ஷாஇஷ்ரத் ஜஹான் மட்டுமல்ல, மோடியின் ஆட்சியில் போலிமோதலில் கொல்லப்பட்ட அனைவருமே தீவிரவாதிகளாகவும், இக்கொலைகள் அனைத்துமே நாட்டைப் பாதுகாக்கும் முசுலீம் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளாகவும் சித்தரிக்கப்படுகின்றன. “பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்படும் தீவிரவாதிகளால் மோடிக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும், எனினும் மோடி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாகவும்” பில்ட்-அப் கொடுக்கப்பட்டு, இப்போலிமோதல் கொலைகள் பச்சையாக நியாயப்படுத்தப்படுகின்றன.
ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிராகவே இருக்கிறது. ஹரேன் பாண்டியாவை முசுலீம் தீவிரவாதிகள்தான் கொலை செய்ததாகக் கூறியது மோடி அரசு. ஆனால், இவ்வழக்கில் கைது செயப்பட்ட 12 முசுலீம்களும் குஜராத் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். சாதிக் ஜமால் என்ற முசுலீம் இளைஞரை ஜனவரி 2003-ல் ‘மோதலில்’ சுட்டுக் கொன்ற குஜராத் போலீசு, “சாதிக், மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு குஜராத்திற்கு வந்த லஷ்கர் தீவிரவாதி” எனக் கூறியது. ஆனால், இது பற்றி சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், சாதிக் குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சாதாரண முசுலீம் வாலிபர் என்பது அம்பலமாகியிருக்கிறது.
சோராபுதீன் உள்ளூர் தாதா என்பதும், அவனுக்கும் அமித் ஷாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததும் ஊரறிந்த உண்மை. குஜராத் முசுலீம் படுகொலையில் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து ஹரேன் பாண்டியா சாட்சியம் அளித்த பிறகுதான் கொலை செயப்பட்டார். இக்கொலையில் சோராபுதீன் கும்பலுக்குத் தொடர்பு இருப்பது அம்பலமாகியதையடுத்து, சோராபுதீனும் அவனது அடியாளான துளசிராம் பிரஜாபதியும் போலி மோதலில் கொல்லப்பட்டனர். மேலும், சோராபுதீன் கொலை ராஜஸ்தானின் மார்பிள் சுரங்க முதலாளிகள் மற்றும் குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நடத்தப்பட்ட சுபாரி கொலை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. மோடியும் அவரது அரசும் தமது கிரிமினல் குற்றங்கள் அனைத்தையும் மறைப்பதற்கு முசுலீம் தீவிரவாத பூச்சாண்டி அரசியலைப் பயன்படுத்தி வருவதை இவை எடுத்துக் காட்டுகின்றன.
இப்படிபட்ட நிலையில் இஷ்ரத் ஜஹான் போலிமோதல் கொலையை விசாரித்து வரும் குஜராத் உயர் நீதிமன்றம், “அவர்கள் தீவிரவாதிகளா, இல்லையா என்பது குறித்து எங்களுக்கு அக்கறையில்லை; அவர்கள் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டது உண்மையானதா, போலியானதா என்பதில் மட்டும் கவனம் செலுத்தி, குற்றப் பத்திரிகையை ஜூலை 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு” சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டதை விசாரிக்கத் தொடங்கினால், அது மோடியின் கிரிமினல்தனத்தை மட்டுமல்ல, காங்கிரசு அரசு, அதன் உளவுத்துறையின் யோக்கியதையை மட்டுமல்ல, முசுலீம் தீவிரவாத எதிர்ப்பு அரசியலின் கிரிமினல்தனத்தையே பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிடும். அப்படிபட்ட விசாரணை கண்ணாடி வீட்டிற்குள் இருந்துகொண்டு கல்லெறிவதைப் போலாகிவிடும் என்பதாலேயே, அடக்கி வாசிக்குமாறு சி.பி.ஐ.-க்குக் கட்டளையிடுகிறார்கள் நீதிபதிகள்.
- குப்பன். vinavu.com

கருத்துகள் இல்லை: