செவ்வாய், 17 ஏப்ரல், 2012

பெரியாரின் உழைப்பால்தான் தமிழ்நாட்டில் ஜாதிப் பாகுபாடு ஒழிக்கப்பட்டது

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பெருமிதம்
சென்னை, ஏப்.17- தந்தை பெரியாரின் அயராத உழைப்பால்தான் தமிழ்நாட்டில் ஜாதிப் பாகுபாடு ஒழிக்கப்பட்டது என்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்  உரையாற்றினார்.
தமிழ்நாடு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், சட்ட மேதை அம்பேத்கரின் 121 ஆவது பிறந்தநாள் விழா, அந்த சங்கத்தின் தலைவர் உதயபானு தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசியதாவது:-நீதிமன்ற வளாகத்துக்குள் அரசியல் கட்சி ரீதியான நடவடிக்கைகளில் இறங்க வேண்டாம் என்று இங்குள்ள வழக்கறிஞர் சங்கங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் கட்சியாக பிளவுபட்டால், அது நீதித்துறைக்கு நல்ல பயனைத் தராது.

நீதிமன்றத்திற்கு வெளியே நீங்கள் எந்தக் கட்சியையும் ஆதரிக்கலாம். அந்தக் கட்சிக்காக உழைக்கலாம். ஆனால் நீதிமன்றத்திற்கு உள்ளே அரசியல் கட்சிகளின் கோணத்தில் பிரச்சினையை அணுக வேண்டாம். அதனால் அந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.

கடந்த காலங்களில் ஜாதி ரீதியான பாகுபாட்டை மிக அதிகமாக கண்டிருக்கிறோம். அவையெல்லாம் இந்திய வரலாற்றின் கருப்பு நாள்கள்.

தமிழகத்தில் பெரியாரின் அயராத உழைப்பின் காரணமாகத்தான் இன்று ஒரு சில குக்கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ஜாதி பாகுபாடு துடைத்தெறியப்பட்டது.

பெரியாரின் குரலை அடுத்துதான், இடஒதுக்கீட்டு கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கத் தொடங்கியது.

தமிழகத்தில் இன்று பல்வேறு துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்ற ஜாதியினருக்கு வேலை கிடைப்பதற்கான வழியை அமைத்துக் கொடுத்தவர் அந்த பெரியார்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் தர்மாராவ், டி.முருகேசன், சி.நாகப்பன், ஆர்.பானுமதி, பி.ஜோதிமணி, கே.என்.பாஷா, கே.கே.சசீதரன், பி.தேவதாஸ் மற்றும் பல நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: