புதன், 18 ஏப்ரல், 2012

ராசா: சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டு சதி தான் '2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்':

Raja
டெல்லி: தொலைத் தொடர்பு சேவையில் புதிய நிறுவனங்கள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டு சதி தான் (telecom cartel's conspiracy) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று முன்னாள் அமைச்சர் ராசா குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கடந்த சில நாட்களாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் டி.எஸ்.மாத்தூரிடம் (இந்த வழக்கில் முக்கிய சாட்சியான இவர் ராசாவுக்கு எதிராக வாக்குமூலம் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராசா கைது செய்யப்பட்டதற்கு 2011ம் ஆண்டில் சிபிஐயிடம் இவர் தந்த வாக்குமூலமும் முக்கிய காரணம்) குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.இன்றும் தனது குறுக்கு விசாரணையைத் தொடர்ந்த சுஷில் குமார், ராசாவின் சார்பில் டி.எஸ்.மாத்தூரிடம் சில அதிரடி கேள்விகளை எழுப்பினார்.

ராசாவின் மீதான இந்த 2ஜி வழக்கே சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டு சதி தான் என்ற சுஷில் குமார், டி.எஸ்.மாத்தூரைப் பார்த்து, நீங்கள் Cellular Operators Association of India (COAI) அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். (இந்த அமைப்பில் ஏர்டெல், வோடபோன், ஏர்செல் உள்ளிட்ட ஜிஎஸ்எம் செல்போன் நிறுவனங்கள் உள்ளன). நீங்கள் பதவியில் இருந்தபோது இந்த அமைப்பைச் சேர்ந்த செல்போன் நிறுவனங்களுக்கு 2ஜி லைசென்ஸ் தந்தபோது அதை நீங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், புதிதாக இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்கும் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் தரப்பட்டபோது மட்டும், அதற்கு எதிராக குறிப்புகளை எழுதினீர்கள் என்றார்.

ஆனால் இதை டி.எஸ்.மாத்தூர் மறுத்தார். அவர் கூறுகையில், நான் COAI அமைப்பில் உள்ள செல்போன் நிறுவனங்களுக்கு ஆதரவாக சாட்சியளிப்பதாகக் கூறுவது தவறு. ஏற்கனவே இந்தத் துறையில் உள்ள செல்போன் நிறுவனங்களுக்கு லைசென்ஸை தந்தபோது அதை நான் எதிர்க்கவில்லை என்பது உண்மை தான். காரணம், அப்போது மிகக் குறைவான விண்ணப்பங்களே வந்தன. இதனால் ஸ்பெக்ட்ரம் தட்டுப்பாடு என்ற பிரச்சனையே எழவில்லை. ஆனால், புதிதாக இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்க பல நிறுவனங்களும் போட்டி போட ஆரம்பித்த பின்னர் தான் ஸ்பெக்ட்ரம் தட்டுப்பாடு குறித்து நான் எனது கருத்துக்களை பதிவு செய்தேன் என்றார்.

இதையடுத்துப் பேசிய ராசாவின் வழக்கறிஞர், ராசா மீது சிபிஐ விசாரணை தொடங்கி பல மாதங்கள் வரை மாத்தூர் அமைதி காத்தது ஏன்?. தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட தொலைத் தொடர்பு ஒப்பந்தங்கள் தொடர்பாக விசாரித்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷன், அப்போதும் செயலாளராக இருந்த மாத்தூர் மீதும் குற்றம் சாட்டியுள்ளது என்றார்.

மேலும் சிபிஐ நெருக்கியதாலும், இந்த வழக்கில் சிபிஐ தன்னையும் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துவிடும் என்று பயந்து தான் ராசாவுக்கு எதிராக மாத்தூர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளையும் மாத்தூர் மறுத்தார்.

இந்த வழக்கில் 6 நிறுவனங்கள், 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் ராசா மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரா தவிர அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். பெகுராவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ராசா இதுவரை ஜாமீனே கோரவில்லை.

ராசாவிடம் விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு முடிவு:

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் ராசாவிடம் விரைவில் விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு திட்டமிட்டுள்ளது.

இத் தகவலை 2ஜி குறித்து விசாரணை நடத்தி வரும் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்தார். மேலும் 2ஜி வழக்கு தொடர்பான விசாரணை முடிவடையாததால் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை: