வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

ஜெயாவால் கைவிடப்பட்ட அபலை சசிகலா பெங்களூரு கோட்டில் ஆஜார்

சசிகலா தனது சொந்த பந்தங்கள் சகிதம் தமிழக அதிகார மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபின், அவரை அநேகர் நேரில் கண்டதில்லை. சுமார் ஒன்றரை மாதங்கள் வெளியே தலை காட்டாமல் இருந்த சசிகலா, நேற்று சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக, பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு நேரில் வந்திருந்தார்.
நேற்றைய வாய்தாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வரப்போவதில்லை என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தது. ஜெயலலிதா சார்பில் அவரது வக்கீல் கந்தசாமி ஆஜராகியிருந்தார். மாநிலத்தில் முதல்வர் பணிகளை கவனிக்க வேண்டியிருந்த காரணத்தால் ஜெயலலிதாவால் வரமுடியவில்லை என்று வக்கீல் கந்தசாமி மனு தாக்கல் செய்தார்.

கோர்ட்டில் இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விஷயமாக தெரிந்தது. முன்கூட்டியே நீதிபதிக்கும், புரொசிகியூஷன் தரப்புக்கும் ஜெயலலிதா வரமாட்டார் என்று சொல்லப்பட்டு விட்டதாக தெரிகிறது. எனவே அவர் வரமாட்டார் என்பது எதிர்பார்க்கப்பட்ட விஷயமாக இருந்ததில், அவரது மனுவுக்கு புரொசிகியூஷன் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்த மற்றொரு நபரான சுதாகரனும் ஆஜராகவில்லை. என்ன முக்கிய பணி காரணமாக இவர் சமூகமளிக்கவில்லை என்று கோர்ட் விசாரித்தபோது, சுதாகரன் சார்பில் ஆஜரான அவரது வக்கீல் சரவணகுமார், “எனது கட்சிக்காரருக்கு கால் வலி” என்று ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (முன்பு பாதயாத்திரை செய்த காரணத்தால் இப்போது கால் வலியா?)
முதல்வரின் முன்னாள் உடன்பிறவா சகோதரி சசிகலாவும், இளவரசியும்தான் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
கடந்த, டிசம்பர் 19ம் தேதி சசிகலா, ஜெயலலிதாவின் பவர் சென்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த 50 நாட்களில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்களை, கோர்ட்டில் அவர் ஆஜரானபோது நன்றாகவே காண முடிந்தது. இதோ நீங்களே படித்துப் பாருங்கள்:
முன்பெல்லாம் பெங்களூரு விசாரணைக்காக ஜெயலலிதாவுடன் வரும்போது விமானத்தில், அதுவும் தனி விமானத்தில் வந்து போய்க்கொண்டிருந்த சசிகலா, இம்முறை சென்னையில் இருந்து காரில் வந்திருந்தார். விமானம் என்றால் காலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு, விசாரணையில் கலந்து கொண்டிருக்க முடியும்.
இம்முறை கார் பயணம் என்பதால், முதல்நாள் இரவே சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு வந்துவிட்டனர்.
இருவரும் முதல்நாள் இரவு பெங்களூரு அட்ரியா நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். இதே ஹோட்டலில் கடந்தமுறை தங்கியபோதுதான், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதியாலோசனை செய்தார் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஹோட்டலில் தங்கிவிட்டு சென்னை திரும்பியபோதுதான் சசிகலா தனது பரிவாரங்களுடன் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அப்படியொரு சென்டிமென்ட் இருந்தும், அதே அட்ரியா நட்சத்திர ஹோட்டலில்தான் இம்முறையும் தங்கினார் சசிகலா.
விசாரணை தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னரே சசிகலாவும் இளவரசியும் கோர்ட் வளாகத்துக்கு வந்துவிட்டனர். முன்புபோல இவர்கள் வருகைக்காக ட்ராஃபிக்கை நிறுத்தி, வழி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை கர்நாடகா போலீஸ். அதனால், ட்ராபிக்கில் சிக்கிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் ஹோட்டலில் இருந்து நேரத்துடன் புறப்பட்டு வந்திருக்கலாம்.
கோர்ட் படிகளில் சசிகலா ஏறுவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. முன்பெல்லாம் அவர் வரும்போது கூட்டத்தை விலக்க இருவர், பாதுகாப்பாக நால்வர் என்று, பந்தாவாக இதே படிகளில் ஏறுவார். இம்முறை ஆள், அம்பு, சேனை எதுவுமில்லாமல், மன்னார்குடியில் இருந்து வரும் சாதாரண குற்றவாளி போல கோர்ட் படிகளில் ஏறி வந்தார்.
கோர்ட் தொடங்கும்வரை சுமார் 1 மணி நேரம் சசிகலாவும், இளவரசியும் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் பின்னரே கோர்ட் ஹாலுக்குள் அனுமதிக்கப்பட்டார்.
கோர்ட் ஹாலுக்குள் அவர் சென்றபோது காணப்பட்ட காட்சி, அவரது தற்போதைய நிலை எப்படியுள்ளது என்று கிளியராக காட்டியது. இதற்கு முன்பெல்லாம் கோர்ட் ஹாலுக்குள் சசிகலா கால் வைக்கும்போது, உள்ளேயிருக்கும் அனைத்து வக்கீல்களும் எழுந்து மரியாதை செலுத்துவது வழக்கம். இதுவரை காலமும் சசிகலாவுக்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்காத ஒரேயொருவர், சீனியர் வக்கீல் கோபால் மட்டுமே. சசிகலா தனது சீட்டில் உட்காரும்வரை காத்திருந்து, அதன் பின்னரே மற்றைய வக்கீல்கள் உட்கார்வது வழக்கம்.
இம்முறை… ம்..ம்.. சசிகலா என்று ஒருவர் அந்த ஹாலுக்குள் வந்ததையே யாரும் கண்டுகொள்ளவில்லை. சசிகலாவும், இளவரசியும் அம்போன்று சிறிது நேரம் ஹாலின் ஓரமாக நின்றிருந்தனர். பின்பு மெதுவாக நகர்ந்துபோய், தமக்குரிய ஆசனமான குற்றவாளிக் கூண்டில் அமர்ந்து கொண்டனர்.
11 மணிக்கு நீதிபதி வந்தபோது, சசிகலாவும், இளவரசியும் சோர்வாக காணப்பட்டனர். நீதிபதியைக் கண்டதும் இருவரும் பவ்வியமாக எழுந்து நின்று வணக்கம் போட்டனர். அது பரவாயில்லை. கோர்ட் கிளார்க் இவர்களது பெயர்களை உரக்கப் படித்தபோது, ‘உள்ளேன் ஐயா’ பாணியில் மீண்டும் ஒருமுறை எழுந்து வணக்கம் போட்டுவிட்டு அமர்ந்தனர்.
நீதிபதி மல்லிகார்ஜுனையா தயாரானதும், வழக்கு ஆரம்பமாகியது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆச்சார்யா மிக உற்சாகமாக காணப்பட்டார். அவருடன், வழக்கறிஞர் சவுட்டாவும் அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்தார்.
சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், “எனது கட்சிக்காரருக்கு கேள்விகளை தமிழில் மொழிபெயர்த்து கொடுக்க வேண்டும் என்று கோரி, டில்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இன்று (நேற்று) ஹியரிங்குக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எப்படியும் அந்த மனு மீது தீர்ப்பு வழங்க சில நாட்கள் எடுக்கும். அதுவரை இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். (சுப்பீம் கோர்ட் உடனடியாகவே தீர்ப்பு கொடுத்துவிட்டது வேறு விஷயம்)
இவர்கள் அதிக நாட்கள் இழுக்கப் பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட ஆச்சார்யா, “அதிக நாட்கள் கொடுக்கக்கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.
நீதிபதி மல்லிகார்ஜுனையா, “வழக்கு விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன். அன்றைய தினம் சசிகலாவிடம் கேள்விகளை மொழிபெயர்த்துச் சொல்ல மொழிபெயர்ப்பாளரும் கண்டிப்பாக வரவேண்டும்” என்று உத்தரவிட்டார். அத்துடன் விசாரணை முடிவுக்கு வந்தது. சசிகலாவும், இளவரசியும் மீண்டும் எழுந்து வணக்கம் போட்டனர்.
அதன்பின் பாதுகாவலர் யாருமின்றி இருவரும் கோர்ட்டில் இருந்து வெளியேறினர்.
அடுத்த வாய்தாவுக்கு இவர்கள் மீண்டும் சாதாரண மன்னார்குடி குற்றவாளிகள் போல வரும்போது, தனி விமானத்தில் ஜெயலலிதாவும் வந்தால்தான் பார்க்க தமாஷாக இருக்கும்!

www/viruviruppu.com-பெங்களூருவிலிருந்து ஷமா தத்தின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: