வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

தொண்டர்களிடம் ஜெ. கேட்கும் பிறந்த நாள் பரிசு.. 40க்கு 40!

தனது பிறந்தநாளின்போது ஆடம்பர நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும், பிறந்தநாளையொட்டி தன்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி ஒன்றுதான் தொண்டர்கள் எனக்கு அளிக்கும் இணையில்லா பரிசாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில் தான் இருக்கிறது என்பதில் பூரண நம்பிக்கை கொண்டே எனது பொதுவாழ்வை மேற்கொண்டு வருகிறேன் என்பதை தமிழக மக்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் தொண்டர்களும் நன்கு அறிவீர்கள்.ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை, அவர் தன்னுடைய பிறந்த நாளை ஒரு போதும் கொண்டாடியது கிடையாது. அன்றைய தினம் யாரையும் அவர் சந்திக்கவும் மாட்டார்.

புரட்சித் தலைவரால், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக நான் நியமிக்கப்பட்ட பிறகு தான் புரட்சித் தலைவரிடம் அனுமதி பெற்று, அவரது பிறந்த நாள் பொதுக்கூட்டங்களை நடத்தும் வழக்கத்தை முதன் முதலாகத் தொடங்கினேன். அப்போதும் கூட, அந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு போதும் கலந்து கொண்டது கிடையாது.

அது போலவே உங்கள் அன்புச் சகோதரியாகிய நானும் அவர் நடந்த பாதையில், அவரின் பாதச் சுவட்டில் பயணிப்பதிலேயே எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எனவே, என்னுடைய பிறந்த நாளன்று யாரும் என்னை சந்திக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதே வேளையில், எனது பிறந்த நாளையொட்டி ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கட்சி தொண்டர்கள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும், இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திடும் பெரு வாய்ப்பு பெற்ற என்னையும் அது மேலும் உற்சாகப்படுத்தும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு மாறாக, கட்சி தொண்டர்கள் யாரேனும் பிரம்மாண்ட விழாக்களையோ, அவசியமற்ற ஆடம்பரத்தையோ கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினால் அது என்னை வருத்தப்படுத்துமே தவிர ஒரு போதும் திருப்திபடுத்தாது.

எளிமையோடும், எளியோருக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் என் அன்புக்குரிய கட்சி கண்மணிகளால் பயன்பெறும் வறியவர்களின் முகத்தில் படரும் புன்னகை ஒன்றே நம்மையும், நம் ஒப்பில்லா இயக்கத்தையும் ஆராதிக்கின்ற நிகழ்வாக அமையும் என்பதை கட்சி தொண்டர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் அலைவரிசை பணத்தை களம் இறக்கி நாள்தோறும் அவர்கள் நடத்திய ஆடம்பர விழாக்களும், அவசியமற்ற படாடோபங்களும் மக்களை முகம் சுளிக்க வைத்ததோடு, கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவின் படுதோல்விக்கு அவர்களின் அந்த ஆடம்பரங்களும் ஒரு காரணமாயின என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சி அமைந்து ஏறத்தாழ ஒன்பது மாதங்களை தொட்டு விட்ட நிலையிலும் இன்று வரை எந்த ஒரு ஆடம்பர நிகழ்ச்சிகளையும் நடத்தாமல், அரசு திட்டங்களைக் கூட காணொளிக் காட்சிகளின் மூலமே துவக்கி வைத்தும், மக்களின் வரிப் பணத்தை துளியும் வீணடிக்காத நம் கழக அரசின் எளிமையையே, கழக கண்மணிகளாகிய நீங்களும் முன் மாதிரியாகக் கொண்டு எனது பிறந்த நாள் நிகழ்ச்சிகளை இல்லார்க்கு உதவுகின்ற நன்னாளாக கடைபிடித்திட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

அதே வேளையில், வரும் நாடாளுமன்ற மக்கள் அவை பொதுத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் கழகத்தின் வெற்றி ஒன்று தான் என் கண்மணிகளாகிய நீங்கள் எனக்கு தருகின்ற இணையில்லா பரிசாக இருக்கும் என்பதை இப்போதே நீங்கள் உணர்ந்து வெற்றிக் கனி கொய்திட விவேகத்தோடு விரைந்திடுங்கள் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணா நாமம் வாழ்க!, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: