வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

15 ஆயிரம் ரூபாய்க்கு தன்னை விற்ற தந்தையை குத்திக் கொன்ற மகன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள நக்கலப்பட்டியைச் சேர்ந்தவர் ராமன் (38). இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு பாண்டி (16), பால்பாண்டி (9) என்ற இரண்டு மகன்களும், பார்வதி (13) என்ற ஒரு மகளும் உள்ளனர். கிராமத்தில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே இவர்கள் படித்தனர். குழந்தைகள் யாரையும் மேற்கொண்டு படிக்க வைக்க ராமன் விரும்பவில்லை.
அதற்கு பதிலாக சிறிய வயதிலேயே குழந்தைகளை வேலைக்கு செல்லும்படி அனுப்பி, அவர்களை சித்ரவதை செய்து வந்தார். அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தில் மது குடித்து விட்டு உல்லாசமாக ஊரை சுற்றி வந்தார். அதே போல் மனைவியையும் அடித்து சித்ரவதை செய்து வேலைக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
மூத்த மகனான பாண்டியை சிறிய வயதில் இருந்த போது, ஆந்திராவில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டார்.
அந்த பணத்தில் மது குடித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரை சுற்றி வந்தார்.

மேலும் மனைவியோ, பிள்ளைகளோ வேலைக்கு செல்ல மறுத்தால் குத்திக் கொன்று விடுவேன் என்றும் மிரடடினார்.

இதற்காக அவர் எப்போதும் பட்டன் சூரிக்கத்தியை மடியிலேயே வைத்திருந்தார்.
கோயில் கும்பாபிஷேகத்துக்காக பாண்டி, ஆந்திராவில் இருந்து ஊருக்கு வந்தார். எப்போதும் குடி போதையில் இருந்த ராமன், மனைவியை அடிக்கடி அடித்து வந்தார்.

இதைப் பார்த்து வேதனையடைந்த பாண்டி, தந்தையிடம் 50 ரூபாயை கொடுத்து வெளியில் சென்று சாப்பிட்டு வரும்படி கூறினார். ஆனால் அந்தப் பணத்துக்கு மீண்டும் ராமன் மது வாங்கி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, மனைவியை தாக்கினார்.

பின்னர் போதையில் மயங்கி தூங்கி விட்டார். தந்தையின் தொடர் சித்ரவதை தாங்க முடியாமல் தவித்த பாண்டி, அவர் வைத்திருந்த பட்டன் கத்தியையே எடுத்து ராமனை சரமாரியாக ஏழு இடங்களில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் ராமன் அதே இடத்தில் இறந்தார். மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ராமன் உயிருடன் இருப்பதை விட இறந்ததே மேலானது என்று கிராம மக்கள் முடிவு செய்தனர்.
மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் பிணத்தை எரித்து விடவும் முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். இந்நிலையில் தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர்.

இது குறித்து டிஎஸ்பி குமார் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை: