திங்கள், 6 பிப்ரவரி, 2012

லைசென்ஸ்கள் ரத்து:சட்டப் போராட்டத்திற்கு தயாராகும் டெலிகாம் நிறுவனங்கள்

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 122 உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளதை அடுத்து, இதை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன; சட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன. ஆனாலும், "இதனால் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காது' என, சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.


தலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், கடந்த 2008 ஜனவரியில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்தது.இது தொடர்பான வழக்கு, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

முதலீட்டுக்குவந்தது மோசம்:இதன்படி, யுனிநார் (22), லூப் (21), சிஸ்டெமா - ஷ்யாம் (21), எடிசலாட் டி.பி., (15), எஸ் டெல் (6), வீடியோகான் (21), ஐடியா (9), டாடா (3) ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், இந்நிறுவனங்களால் இதுவரை செய்யப்பட்ட முதலீடுகளுக்கு மோசம் வந்துள்ளது. தொலைத்தொடர்பு சேவையை, தொடர்ந்து வழங்க முடியாத சூழலும் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சட்டப் போராட்டம்:இந்த பிரச்னையை சமாளிப்பதற்காக, சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து, மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து, சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சட்ட நிபுணர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. பிரபலமான சட்ட நிபுணர்களிடமும், பிரபல சட்ட ஆலோனை ஏஜன்சிகளிடமும் இந்நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.ஐடியா நிறுவனம், "சுப்ரீம் கோர்ட் உத்தரவை கவனமாக ஆய்வு செய்து வருகிறோம். உரிமம் பெறுவதற்காக செய்த முதலீட்டை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்' என, தெரிவித்துள்ளது. யுனிநார் நிறுவனமும் இதே பதிலை தெரிவித்துள்ளது.

வாய்ப்பு குறைவு:இதுகுறித்து சட்ட நிபுணர்கள் சிலர் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதற்கு குறைந்த அளவே வாய்ப்புகள் உள்ளன. அதுவும் இந்த வழக்கில், உத்தரவை திரும்பப் பெறுவதற்கு மிக மிகக் குறைந்த அளவே வாய்ப்புகள் உள்ளன. பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுவதற்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. புதிதாக நடக்கும் ஏலத்தில் பங்கேற்க அனுமதி கிடைக்காவிட்டாலும், ஏற்கனவே உரிமம் பெற்று, அதனால் நஷ்டம் அடைந்த நிறுவனங்கள் என்ற அடிப்படையில், ஏலத்தில் பங்கேற்க அனுமதி பெற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், ஏலத்தில் அதிகமான தொகையை குறிப்பிட்டு, மீண்டும் உரிமம் பெறுவதன் மூலம், முதலீட்டை பாதுகாத்துக் கொள்ள முடியும்.அடுத்ததாக, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு அரசே ஒரு விலையை நிர்ணயிக்கலாம். ஏற்கனவே இந்த நிறுவனங்கள் செலுத்தியுள்ள தொகைக்கும், புதிதாக நிர்ணயிக்கப்படும் விலைக்கும் உள்ள வேறுபாட்டை கணக்கிட்டு, அந்த தொகையை இந்த நிறுவனங்கள் செலுத்தினால், அந்த நிறுவனங்களுக்கே மீண்டும் உரிமம் அளிக்கலாம்.இவ்வாறு சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

மொபைல் கட்டணம் உயரும்?சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அடுத்து, தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி, கணிசமாகக் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில நிறுவனங்கள், "3ஜி' உரிமம் பெறுவதற்காக அதிக தொகையை செலுத்தியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையால், தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை வைத்து, தொடர்ந்து சேவைகளை வழங்குவது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும். எனவே, மொபைல் போன் சேவைக்காக, வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை, கணிசமாக உயர்த்துவதற்கு இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை: