திங்கள், 6 பிப்ரவரி, 2012

பாரிவேந்தர் பச்சமுத்து ஷங்கருக்கு எச்சரிக்கை . “பாரி,பூரி கக்கூஸ் லாரி”

உச்சகட்ட கோபத்தில் கொந்தளிக்கிறார் ஐ.ஜே.கே.கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்து.
“பாரி,பூரி கக்கூஸ் லாரி” என்று இயக்குநர் ஷங்கர் ’நண்பனில்’ கொளுத்திப் போட்டிருக்கும் வசன வெடி ரொம்பவே வேலை பார்த்துவிட்டது. இருவருக்குள் என்னதான் பிரச்னை? கேள்வியைப் போடுவதற்கு முன்னாலேயே நம்மைப் பார்த்ததும் தன் ஆதங்கத்தை கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்தார் பச்சமுத்து.
“நடிகர்கள்தான் அரசியலுக்கு வர முடியும் என்ற ஒரு எழுதப்படாத சட்டம் தமிழகத்தில் நிலவுகிறது. இது எவ்வளவு பெரிய சாபக்கேடு? படிப்பறிவில் மிகச் சிறந்த ஒருத்தரும் துக்கடா கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகரும் தேர்தல்ல போட்டி போடுறாருன்னு வெச்சுக்குவோம். இறுதியா யாரு ஜெயிப்பாருன்னு நினைக்கிறீங்க? படிச்சவரா? இல்ல. அந்த துக்கடா கதா பாத்திரத்தில் நடிச்ச நடிகர்தான் ஜெயிப்பாரு. இதுதான் தமிழக அரசியலோட நாற்பது ஆண்டுகால நிலைமை. இப்படி மலிவாக கிடைக்கின்ற புகழ் வெளிச்சத்தில் நின்று கொண்டு யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம் என்ற மனோபாவம் இருக்கிறதே இது ரொம்ப ஆபத்தானது’’ என்று கொப்பளித்தவரிடம், ‘உங்களுக்கும் ஷங்கருக்கும் என்ன சண்டை? ஏதாவது முன் விரோதம் இருக்கிறதா?’என்றோம்.

“நிச்சயமா இல்ல. அப்புறம் ஏன் இவர் இப்படி தொடர்ந்து எங்கள் சமூகத்தையும் என்னையும் குறி வைத்துத் தாக்குகிறார்ன்னுதான் நாங்களும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். அவரை நான் இதுவரை நேரில் பார்த்ததுகூட கிடையாது. ஒரு வார்த்தை பேசியதும் இல்லை. இருந்தும் என்னை அசிங்கப்படுத்தினார் என்பது வேறு. என்னை அசிங்கப்படுத்தும் அளவுக்கு அந்தஸ்திலோ அறிவிலோ உயர்ந்தவரில்லை ஷங்கர். இந்த இடியட் எங்கு படித்தார்? எந்தக் கல்லூரியில் அறிவு பெற்றார் என்பதெல்லாம் கேள்விக்குரியது. ஒருமுறை இருமுறையல்ல; தொடர்ந்து தாக்குகிறார். மூளைக் கோளாறானவன்தான் இப்படி நடந்துகொள்வான். இந்த ’நண்பன்’ ஒரு படமா? எதற்கெடுத்தாலும் பேண்ட்டை கழற்றிக் கழற்றி காட்டுவதுதான் நாகரிகமா? ஒரு கல்லூரிப் பேராசிரியர் பேண்ட் ஜிப்பை இழுத்து இழுத்து மூடுகிறார்? பெண்கள் எப்படி இந்தப் படத்தைப் பார்க்க முடியும், சொல்லுங்கள்?

இப்படித்தான் சிவாஜியில் கடையேழு வள்ளல்களில் ஒருவனான பாரி மன்னரின் மகள்கள் அங்கவை, சங்கவையை அசிங்கப்படுத்தினார். பாரி மன்னனின் புகழை எடுத்துப் பேசாத ஒரு தமிழறிஞரை நீங்கள் தமிழ்நாட்டில் காட்ட முடியுமா? மேடை தோறும் மாறிமாறி புகழப்பட்ட மன்னன் அல்லவா பாரி? அவரின் மகள்கள் இவ்வளவு கேவலமாக இருந்தார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்று ஏதாவது உங்களிடம் உண்டா? தமிழை போதிக்கின்ற, தமிழை வைத்து பிழைப்பு நடத்துகின்ற ஒரு பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவர் சொல்கிறார்,’வாங்க வந்து பழகுங்க.பிடிச்சா கட்டிக்கோங்க’ன்னு. ஒரு சமூகத்தின் அடையாளமாக கருதப்படும் மன்னனின் மகளை இவ்வாறுதான் கேவலப்படுத்துவதா? இந்தக் கொடுமையை யார் தட்டிக் கேட்டார்கள்... ஒரு குரல் உயரவில்லையே? அப்புறம் என் சமூகத்தினர் எப்படி கண்பொத்தி வாய்மூடி இருப்பார்கள்?

உங்களிடம் ஷங்கர் தரப்பிலிருந்து பேச்சு நடத்தப்பட்டதாமே?

”நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் பேசினார். அப்புறம் நடிகர் விஜய் பேசினார். நேற்றுகூட ஒரு பத்திரிகையில் விஜய் பேட்டிகொடுத்திருக்கிறார். அவர் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போனபோது அவரது மகன் வெளியில் ஓடி வந்து பேண்ட்டை கழற்றிவிட்டு ‘யூ ஆர் கிரேட் டாடி’என்றானாம். ’எப்படி ரீச் ஆகியிருக்கிறது பாருங்க’ என்கிறார் விஜய். இப்படித்தான் ஒரு இளம் தலைமுறையை வளர்ப்பதா? என்ன கண்றாவி கலாச்சாரம் இது? பாரிவேந்தர் பூரிவேந்தர் என படத்திற்கு வசனம் எழுதியது மதன் கார்க்கியாம். ஒரு பெரும் கவிஞரின் மகன் எழுதும் வசனத்தின் லட்சணம் இது. தமிழ்நாட்டில் கலையின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.’’

நேரடியாக இதன் மூலம் ஷங்கருக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

“ உங்களுக்கு என் மீது என் சமூகத்தின் மீது கோபம் அல்லது வருத்தம் தற்செயலாக வந்திருப்பதாக எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை. நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டிய நேரமிது. காற்று ஒரே திசையில் அடிக்காது. எங்கள் சமுதாயத் தொண்டர்கள் நினைத்தால் உங்களின் நிலைமை உங்களின் தொழிலின் நிலைமை வேறுவிதமாக மாறிவிடும். இதையொரு எச்சரிக்கையாகவே நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்! ஒருமுறைபோல எல்லா முறையும் இருக்காது. நான் நினைத்தால் ஆண்டிற்கு 10 படங்களை மிகச் சாதாரணமாக எடுத்து வெளியிட்டு உங்களை அசிங்கப்படுத்த முடியும்?’’.

- கடற்கரய்
படங்கள்: ஆர்.சண்முகம்
thanks kumudam + hamsanandhini oslo

கருத்துகள் இல்லை: