புதன், 10 ஆகஸ்ட், 2011

ஆண்கள் நிமிர்ந்து நின்று பேச வசதியாக மைக், ஜெயலலிதா

சென்னை: ஆண்களுக்கு அழகே நிமிர்ந்து நின்று பேசுவதுதான்.எனவே உயரமான ஆண் உறுப்பினர்கள் நிமிர்ந்து நின்று பேச வசதியாக சட்டசபையில் மைக்குகளை மாற்ற வேண்டும் என்று சபாநாயகர் ஜெயக்குமாருக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் சூடான விவாதங்கள் மட்டுமல்லாமல் சுவாரஸ்யமான விஷயங்களும் அவ்வப்போது களைகட்டும். அப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நேற்று நடந்தது.
மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நல்ல உயரமானவர். நேற்று அவர் பேசுகையில் மைக் முன்பு குணிந்தபடி பெரும் சிரமப்பட்டு பேசினார். இதைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா டக்கென எழுந்தார்.

ஆண்களுக்கு லட்சணமே நிமிர்ந்தபடி பேசுவதாதன். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போல உயர்ந்த மனிதர்கள் பேசும்போது மைக் முன்பு குணிந்து கொண்டு பேச வேண்டியுள்ளது. இதேநிலைதான் உயரமான மற்றவர்களுக்கும் ஏற்படுகிறது. எனவே ஆண்கள் ஆண்களாகவே பேசும் வகையில் மைக்குகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.அதிமுக உறுப்பினர்கள் மைசைகளைத் தட்டி முதல்வரின் கோரிக்கையை வரவேற்றனர். குறிப்பாக உயரமான உறுப்பினர்கள் படு வேகமாக மேசைகளைத் தட்டியதைக் காண முடிந்தது.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜெயக்குமார், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வருக்கு உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை: