புதன், 10 ஆகஸ்ட், 2011

அதிகாரிகள் தீவிரம் சமச்சீர் புத்தகங்கள் வினியோகம் துவங்கியது

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று மாலை துவங்கியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பொறுத்து, அரசு வழங்கும் உத்தரவின் அடிப்படையில் பாடப் புத்தகங்களை வினியோகிக்க, அதிகாரிகள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் பிரதிநிதிகள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுச்செல்ல, குறிப்பிட்ட மையங்களுக்கு தயாராக வருமாறு, அதிகாரிகள் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி, சென்னையில் நேற்று பல பள்ளிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாடப் புத்தகங்களை வாங்க காத்திருந்தனர். எனினும், மாலை 4 மணி வரை எந்தவித உத்தரவும் வராததால், பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யவில்லை. 4.30 மணிக்கு, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டதும், காத்திருந்த ஒரு சில பள்ளிகளின் பிரதிநிதிகளுக்கு மட்டும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதேபோல், மற்ற இடங்களிலும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜ முருகன் கூறியதாவது: சென்னையில் நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. நான்கு மாவட்டங்களிலும், தலா ஒரு மையத்தில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை (நேற்று) தான், பாடப்புத்தகங்கள் வழங்க அனுமதி கிடைத்தது. அதன்படி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காத்திருந்த பல்வேறு பள்ளிகளின் பிரதிநிதிகளிடம் பாடப்புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டன. அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் ஆகிய அனைத்திற்கும், நாளை பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும். ஒவ்வொரு பள்ளியிலும், அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் குறித்த விவரங்களை ஏற்கனவே நாங்கள் பெற்றிருக்கிறோம். அதனடிப்படையில், பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். வினியோக மையத்தில் இருந்து, பள்ளி பிரதிநிதிகள் பாடப் புத்தகங்களை பெற்றுச்சென்று, அதன்பின் மாணவர்களுக்கு வழங்குவர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, அவர்கள், விலைக்குத் தான் வாங்க வேண்டும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு நாகராஜ முருகன் கூறினார்.
அனைத்துப் பள்ளி பிரதிநிதிகளும், இன்று மதியத்திற்குள் பாடப் புத்தகங்களை பெற்றுச்சென்று, பள்ளி முடிவதற்குள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். எனவே, இன்றைக்குள் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைத்துவிடும். இதன்மூலம், இரண்டு மாதங்களாக நீடித்துவந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

சென்னையில் சமச்சீர் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்படும் மையங்கள் விவரம்

சென்னையில், நான்கு இடங்களில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1. பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி-ராயபுரம் (சென்னை-கிழக்கு)
2. சவுந்திரபாண்டியன் மேல்நிலைப்பள்ளி, அயனாவரம் (சென்னை-வடக்கு)
3. எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி-சேத்துப்பட்டு (சென்னை-தெற்கு)
4. ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை (சென்னை-சென்ட்ரல்)
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் பிரதிநிதிகள், சம்பந்தபட்ட மையத்திற்குச் சென்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: