வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

வரதட்சணை சித்ரவதை 3 மாத கர்ப்பிணியை எரித்து கொன்ற கணவன் கைது


சென்னை : வரதட்சணையாக 15 சவரன் நகை ரூ.50 ஆயிரம் தர மறுத்த கர்ப்பிணி மனைவியை எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மாமியாரையும் கைது செய்ய வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். சென்னை வியாசர்பாடி சத்தியா நகரை சேர்ந்தவர் கிருஷணவேணி (50). வடசென்னை அதிமுக மகளிர் அணி இணை செயலாளர். இவரது மகன் நந்தகுமார் (21). கார் டிரைவர்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி (19) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களது ஒரு வயது குழந்தை இறந்து விட்டது. தற்போது சிவரஞ்சனி 3 மாத கர்ப்பிணி. இந்நிலையில் 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் வரதட்சணையாக பெற்றோரிடம் வாங்கி வரும்படி சிவரஞ்சனிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் கிருஷ்ணவேணி. மறுத்த சிவரஞ்சனியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த 6ம் தேதி வரதட்சணை தொடர்பாக கணவன் & மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணவேணியும் நந்தகுமாரும் சேர்ந்து சிவரஞ்சனியை அடித்து உதைத்துள்ளனர். அதன்பிறகு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது. இதில், உடல் கருகி உயிருக்கு போராடிய சிவரஞ்சனியை அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து எம்.கே,பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்கு பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சிவரஞ்சனி இறந்தார். தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்க மறுத்தனர். சிவரஞ்சனி சாவுக்கு காரணமான கிருஷ்ண வேணியையும் கைது செய்ய வேண்டும். அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். உதவி கமிஷனர் மனோகரன் கைது செய்வதாக உறுதி அளித்தார். இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் பதற்றம் நிலவியது.

கருத்துகள் இல்லை: