புதன், 10 ஆகஸ்ட், 2011

இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று ஒருவரை தவிர. எல்லோருக்கும் தெரிந்திருந்தது

இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஒரே ஒருவரை தவிர. நிஜமாகவே தூங்கிக் கொண்டிருந்தால் & மாநிலம் முழுவதும் எழுந்த குமுறலுக்காக இல்லாவிட்டாலும் &  அருகில் இருப்பவர்களின் குரல் கேட்டு கண் விழித்திருப்பார். தெரிந்திருக்கும். நிற்க. ஒரு தீர்ப்பு ஒட்டு மொத்த மாற்றத்தை ஏற்படுத்தி விடாது. எல்லாவற்றுக்கும் முதல் படி ஒன்றிருக்கிறது. கூச்சமில்லாத லாப வர்த்தகமாகிவிட்ட கல்வித்துறையை பழைய பெருமைக்கு மீட்டுவர தமிழ் மக்கள் எடுத்துவைத்த முதல் அடியாக அமையக்கூடும் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு.

சமச்சீர் கல்வி என்பது வெறும் பாடப்புத்தகங்களில் அடங்கிவிடுவது அல்ல. நர்சரி பள்ளிகள்  முளைக்க தொடங்கிய 1970களிலேயே கல்வியாளர்கள் விடுத்த எச்சரிக்கை நினைவுக்கு வருகிறது. வலுவான கட்டிடம், விசாலமான வகுப்பறை, சுத்தமான கழிவறை, நல்ல காற்றோட்டம், தடையற்ற மின்சாரம், பரந்து விரிந்த விளையாட்டு மைதானம், வசதியான பயிற்சிக்களம், நவீன ஆய்வுக்கூடம், தகுதியான ஆசிரியர், நிறைவான ஊதியம்,  பயனுள்ள பாடத்திட்டம் ஆகியவற்றால் அரசுப் பள்ளிகளை  மேம்படுத்த தவறினால் தனியார் களமிறங்கி கல்வியை கைப்பற்றி விடுவார்கள்; அது நாட்டையே நாளடைவில் சீர்குலைத்துவிடும் என அன்று பெரியவர்கள் உஷார் படுத்தினர்.

குடிநீர், மின்சாரம், சாலைகளை காட்டிலும் அத்தியாவசியமானது கல்வி, சுகாதார துறைகள். போட்டி இருப்பது நல்லது என்ற வாதம் துறையை கபளீகரம் செய்ய விரும்பும் வர்த்தக சக்திகளின் வாய்ஜாலம். பொருளாதாரம் இன்றளவுக்கு வளராத காலத்திலும் தொழில்நுட்ப உயர்கல்விக்கு மட்டுமே ஓரளவு பொருந்தியது அக்கருத்து. ஏற்றத்தாழ்வு இல்லாத தரமான பள்ளிக் கல்வியால் மட்டுமே நல்ல குடிமக்களை உருவாக்க முடியும்.
சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதிப்படுத்தி வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்ற விவாதம் தேவையில்லை. கல்வித்துறையில் பல ஆண்டுகளாக படிந்துவிட்ட அழுக்கை சுத்தம் செய்ய கிடைத்த வாய்ப்பாக கருதி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். அதில் தனியார் துறையின் நேர்மையான பங்களிப்பை வரவேற்கலாம். இரண்டரை மாத தாமதத்துக்காக விடுமுறை நாட்களை குறைத்து மாணவர்களை தண்டிப்பது நியாயமல்ல.

கருத்துகள் இல்லை: