செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

ஜெயலலிதா நாட்டு நலன்கருதி இனியாவது இதுபோன்ற பிரச்சினைகளில் அணுகுமுறை

சென்னை: சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் அ.தி.மு.க. அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பாடம் இந்திய உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது என்று
தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1.5 கோடி மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து விட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களும், உச்ச நீதிமன்ற நீதியரசர்களும் திரும்பத் திரும்பச் சொல்லியும் அவைகளை எல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு தி.மு.க. ஆட்சி அறிமுகப்படுத்தியது என்ற காரணத்திற்காகவும், ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று நீதிமன்றங்களே நாட்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, அந்த தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கூடக் கேளாமல் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்த தமிழக அ.தி.மு.க. அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பாடம் இந்திய உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது.

இதே தீர்ப்பு தி.மு. கழக ஆட்சியிலே உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்திருப்பார் அம்மையார் ஜெயலலிதா. அதைப்போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை. இனியாவது இதுபோன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன்கருதி தன்னுடைய அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

சமச்சீர் கல்விக்கு கிடைத்த இந்த உச்சகட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை: