புதன், 10 ஆகஸ்ட், 2011

எதுவுமே படிக்காத நிலையில் ஜெயாவின் கைங்கரியத்தில் மாணவர் கல்வியில் மகா குழப்பம்

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான தமிழக அரசின் நிலையால் ஏகப்பட்ட குழப்பங்கள் இப்போது அணிவகுத்து நிற்கின்றன.

1. இதுவரை படித்தெல்லாம் இனி கணக்கில் வரப் போவதில்லை. இனிமேல் அரசு தரப்போகும் சமச்சீர் கல்விப் புத்தகத்தைத்தான் படிக்க வேண்டும். அதாவது இனிமேல்தான் முதலிலிருந்து படிக்கப் போகிறார்கள் பிள்ளைகள். இதனால் கடந்த 60 நாள் படிப்பும் அவர்களுக்கு கிட்டத்தட்ட வீண்தான்.

2. 60 நாள் இழப்பால் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு ஆகிய தேர்வுகளை உரிய காலத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் காலாண்டுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் எதுவுமே படிக்காத நிலையில் எதை வைத்து காலாண்டுத் தேர்வை நடத்துவது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளன பள்ளிகள்.

3. கடந்த 60 நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான். இப்போதெல்லாம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 9 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்தவுடனேயே, ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் 10, 12 வகுப்புகளுக்குரிய பாடங்களை நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த அடிப்படையில் இந்த முறையும் அதுபோலவே சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தின் கீழ் பல பள்ளிகளில் பாடங்களை நடத்தி வந்தனர். ஆனால் பழைய பாடத் திட்டமே தொடரும் என்று அரசு திடீரென அறிவித்ததால், அவர்கள் பழைய பாடங்களை நடத்த ஆரம்பித்தார்கள். இப்போது மீண்டும் சமச்சீர் கல்விக்கு மாற வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாறி மாறிப் பாடங்களைப் படித்து தேவையில்லாத டென்ஷனையும், குழப்பத்தையும் சந்தித்ததே மிச்சமாகியுள்ளது.

4. புதிய பாடத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால், போர்ஷன்களை விரைவாக எப்படி முடிப்பது என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், பள்ளிகளும் உள்ளன. மேலும், 2, 3, 4, 5 ஆகிய வகுப்புக் குழந்தைகளுக்கு அவசரம் அவசரமாக பாடத்தை நடத்த முடியாத நிலையும் இருப்பதால் இவர்களுக்கு பாடத்தை நடத்தும் முறை குறித்தும் ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இபப்படிப் பல குழப்பங்கள். மொத்தத்தில் தமிழக அரசு தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ளாத காரணத்தால், தேவையில்லாத சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்களை கடத்தியதால் மாணவ மாணவியர்களுக்கு மனக் குழப்பம், பதட்டம், மன அழுத்தம், விரக்தி ஆகியவை ஏற்பட்டதே மிச்சமாகியுள்ளது.

இனி பாடத்தை வேகம் வேகமாக நடத்த வேண்டிய நிலைக்கு ஆசிரியர்களும், அதை அவசரம் அவசரமாக படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாணாக்கர்களும் தள்ளப்படுவர். சனிக்கிழமைகளில் இனி முழு நேரம் வகுப்புகள் நடத்தப்படும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து அவர்களது மனச்சுமை மேலும் கூடுதலாகும். பள்ளிகளின் விடுமுறை நாட்கள் குறையும், படி படி என்று படித்துத்தள்ள வேண்டிய நிலைக்கு அனைவரும் தள்ளப்படுவர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவருமே பாதிக்கப்படப் போகிறார்கள்.

வேஸ்ட் ஆகிப் போனது 60 நாள்தானே என்று சாதாரணமாக நினைக்க முடியாது. காரணம், 2, 3, 4, 5 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு அதி வேகமாக பாடத்தை நடத்தினால் நிச்சயம் அவர்களால் கிரகிக்க முடியாது. மேலும் சமச்சீர் கல்வித் திட்டம் புதிய பாடத் திட்டம் என்பதால் ஆசிரியர்களும் முதலில் தங்களைத் தெளிவபுடுத்திக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் என்பதில் சந்தேகமில்லை.

காலாண்டுத்தேர்வை முடிக்க வேண்டிய நேரத்தில் முதலிலிருந்து படிக்கப் போகும் தமிழக மாணவ, மாணவியர்கள் நிம்மதியாகப் படிக்கும் மன நிலையில் இல்லாத நிலையை அரசு ஏற்படுத்தி விட்டது. சர்ச்சைக்குரிய பகுதிகளை புத்தகத்திலிருந்து கிழித்தோ அல்லது அவற்றை பாடத் திட்டத்திலிருந்து நீக்கியோ அல்லது இதுபோல ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்து அதை சரி செய்தோ புத்தகங்களைக் கொடுத்து பிள்ளைகளை படிக்க வைத்திருக்கலாம். அடுத்த ஆண்டு கூட திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் உடும்புப் பிடிவாதமாக அரசு நடந்து கொண்டதால் பாதிக்கப்பட்டிருப்பது அப்பாவி மாணவ மாணவிகளும் அவர்களைப் பெற்ற பெற்றோர்களும், பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும்தான்.

எந்த மக்கள் அதிமுகவை மலை போல நம்பி வாக்களித்து ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வந்தார்களோ, அந்த மக்களை அதிமுக அரசு எடுத்த எடுப்பிலேயே புலம்ப வைத்து விட்டது நிச்சயம் வேதனையான விஷயம்தான்.

கருத்துகள் இல்லை: