செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

விடுதலை சிறுத்தைகள் கோவிலுக்குள் நுழையும் போராட்டம்

கல்பாக்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்தினர். அப்போது 2 கார்கள் அடித்து உடைக்கப்பட்டன. இதனால் பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த முகையூர் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த வழிபாடு மற்றும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சிகளில் தலித் இனத்தவர்கள் பங்கேற்க விரும்பினர்.

ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைசெழியன் தலைமையில் தொண்டர்கள் நேற்று காலை முத்தாலம்மன் கோவிலுக்குள் நுழையும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

கட்சியின் நிர்வாகிகள் கலைவடிவன், எழிலரசு, அருள்பிரகாசம், தென்னவன், முகமது அனிபா, பேரறிவாளன் உள்பட ஏராளமானோர் கோவில் வளாகத்தில் திரண்டனர்.
தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அண்ணாதுரை, தாசில்தார் ராமலிங்கம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீ.பாஸ்கரன், துணை சூப்பிரண்டு தணிகைவேல் ஆகியோர் விரைந்து வந்தனர். அதிரடிப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு முத்தாலம்மன் கோவிலுக்குள் சென்று தலித் இனத்தவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பகல் 12 மணிக்கு கோவில் கதவு பூட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து மீண்டும் போராட்டம் நடத்தினர். உடனே அதிகாரிகள் தலையிட்டு கோவில் கதவுகளை மீண்டும் திறந்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

இதற்கிடையில் கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்தியிருந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில கொத்தடிமை ஒழிப்பு துணை செயலாளர் பேரறிவாளன், தொண்டர் அணி துணைசெயலாளர் இளமாறன் ஆகியோரது கார்களை சிலர் அடித்து கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவியது. இதனை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கார்களை சேதப்படுத்தியது தொடர்பாக சிலரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்துகிறார்கள்.

கருத்துகள் இல்லை: