புதன், 28 செப்டம்பர், 2022

கொழும்பில் பயங்கர தீ விபத்து 80 வீடுகள் சேதம் - உடன் நிவாரணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

hirunews.lk : இலங்கை கொழும்பில் பயங்கர தீ விபத்து  80 வீடுகள்  சேதம் - உடன் நிவாரணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு
கிராண்ட்பாஸ் - கஜிமாவத்தை பகுதியில் குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் கடற்படையின் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தினால், உயிர்ச்சேதமோ எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பதுடன் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்
இவர்கள் களனி நதீ விகாரை மற்றும் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிக தங்கவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கஜீமா வத்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பணிப்புரைகளை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இது தொடர்பில் முப்படை தளபதிகள், கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: