புதன், 6 நவம்பர், 2019

திருவள்ளுவர் படம் உருவான கதை .... கே ஆர் வேணுகோபாலன் வரைந்த ஓவியம்

பாண்டியன் சுந்தரம் : இன்று நாம் காணும் திருவள்ளுவர் படத்தை உருவாக்க
40 ஆண்டுகள் ஆகியது; படம் உருவாகி ஆகி விட்டது ஆண்டுகள் அறுபது!
பேருந்துகளில், பள்ளிகளில், அரசு
அலுவலகங்களில் என திருவள்ளுவர் உருவம் எங்கும் வியாபித்திருக்கிறது.
ஆனால், இப்போது நாம் காணும், இந்த திருவள்ளுவரின் உருவத்தை வரைய 40 ஆண்டுகள் ஆகியிருக்கிறது, என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால், அது தான் உண்மை!
ராஜாஜி வசித்த சேலம் மாவட்டம் காமாட்சிப்பட்டி என்ற ஊரில் தான், 17-12-1908-இல் பிறந்தார் கே.ஆர். வேணுகோபால் சர்மா. இவர் முதலில் "சுதேச டிராமா பார்ட்டி" என்ற பெயரில் நாடகங்களை நடத்திவந்தார்.
பம்பாய்க்குச் சென்று, அங்கு பிரபல திரைப்பட இயக்குநரான ஸ்ரீபகவான் தாதவிடம் சினிமாவைக் கற்றுக்கொண்டார். சென்னைக்கு திரும்பி 'கிரீன் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தைத் துவக்கி, நாத விஜயம், தெய்வீகம், மை சன் ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கினார். சில படங்களிலும் நடித்தார்.இவருக்குச் சிறு வயதிலேயே, நோய்த் தாக்கம் இருந்தது. இதனால், வீட்டில் இருந்தபடியே, கல்வி, ஓவியம், இசை, நாட்டியம் என பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தார்.
இவருக்கு மிகவும் பிடித்தது, ஓவியம் வரைவது தான். ராஜாஜியுடன் நட்பாகப் பழகியதால், 1937-ஆம் ஆண்டு, சேலத்திற்கு காந்தி வந்த போது, காந்தியை தத்ரூபமாக வரைந்து, அவருக்குப் பரிசாக ஓவியத்தை வழங்கினார்.அந்தப் படத்தை, காந்தி மேடையிலேயே ஏலம் விட்டார்.
வேணு கோபால் சர்மாவுக்கு தனது 12-ஆவது வயதில் இருந்தே, திருவள்ளுவர் எப்படி இருந்திருப்பார்? என்ற எண்ணம் தோன்றியது. பல நுாற்றுக் கணக்கான ஓவியங்கள் வரைந்தார். எதிலும், அவருக்குப் பிடித்தமான, திருவள்ளுவர் என்று நம்பும்படியான ஓவியம் அமையவில்லை.

இதனைச் சவாலாக எடுத்துக் கொண்டு, 40 ஆண்டுகள் ஆயிரக் கணக்கில் ஓவியங்களை வரைந்து தள்ளினார். ஆனால், எதிலும் அவருக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை.பாவேந்தர் பாரதிதாசன் இவரது நண்பர்.அவரைச் சந்தித்து ஆலோசனை கேட்டார். அவர் சில தமிழ் அமைப்புகளைச் சொல்லி, "அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.அதன் அடிப்படையில் உருவத்தைத் தீட்டுங்கள். உங்களால் நிச்சயம் முடியும்" என்று நம்பிக்கை ஊட்டினார்.
வேணுகோபால் சர்மா நேரம் கிடைத்த போதெல்லாம் வள்ளுவரை வரைந்து பார்த்துக்கொண்டே இருந்தார்.இறுதியில் விலை உயர்ந்த தூரிகைகள், வர்ணங்கள், ஓவியக்கலைக்கு உதவும் நுண்ணிய உபகரணங்களைப் பயன்படுத்தி வள்ளுவருக்கு முழு உருவம் கொடுத்தார். அண்ணா, பக்தவத்சலம், காமராஜ், ஜீவா, கக்கன் என பலரும் வேணுகோபால் சர்மா இல்லத்திற்குச் சென்று வரைந்த திருவள்ளுவர் உருவத்தைக் கண்டு மெய்சிலிர்த்தனர்.
மத்திய, மாநில அரசுகளால் இந்த திருவள்ளுவர் திருவுருவம் அங்கீகரிக்கப்பட்ட ஓவியமாக பின்னர் அறிவிக்கப்பட்டது. 1959-இல் வெளியிடப்பட்ட திருவள்ளுவர் உருவப்படமானது, 1964-மார்ச் 23-இல் தமிழக சட்டசபையில் அன்றைய துணை ஜனாதிபதி ஜாகிர் உசேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1967-இல் ஆட்சிப் பொறுப்பேற்ற மறைந்த முதலமைச்சர் அண்ணா திருவள்ளுவரின் உருவப்படத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் இடம்பெறச் செய்ய அரசாணை பிறப்பித்தார். 40 ஆண்டு காலமாக தனது சிந்தனையால் சர்மா வரைந்த வள்ளுவர் ஓவியம் 60 ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில்,மணி விழாவாக அறிவிக்க வேண்டும் என அவரது இளைய மகன் எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர் வே. ஸ்ரீராம் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
'திருவள்ளுவரை ஈன்றெடுத்த தமிழ்த்தாய்க்கும் உருவம் தர வேண்டும்’ என சாண்டில்யன், தமிழ்வாணன், அறிஞர் அண்ணா மூவரும் வேணுகோபால் சர்மாவிடம் பின்னர் கோரிக்கை வைத்தார்கள். 'தமிழ்த்தாய் எப்படி இருக்க வேண்டும் என ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா அண்ணா?’ என அறிஞர் அண்ணாவிடம் சர்மா கேட்க, 'அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும். உங்களால் முடியும்’ என்று ஊக்கப்படுத்தினார் அண்ணா. நீண்ட நாட்கள் குறிப்புகள் கிடைக்கவே இல்லை. மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய 'எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து...’ என்ற வரிகளில்தான் சர்மாவுக்கு சின்னப் பொறி கிடைத்தது. 'சீரிளமைத் திறம்வியந்து’ என்றால், தமிழ்த்தாய் இளமைத் தோற்றத்தில் இருக்க வேண்டும் என முடிவுசெய்து, 1959-ஆம் ஆண்டு வரையத் தொடங்கி 1979-ஆம் ஆண்டு தமிழ்த்தாய் உருவத்தை வரைந்து முடித்தார். 'இந்தத் தமிழ்த்தாய் ஓவியத்தை இப்படி வரைய என்ன காரணம்?’ என 19 காரணங்களை அடுக்கி நீண்ட விளக்கமும் தனது டைரியில் எழுதி வைத்திருக்கிறார் அவர்.
வேணுகோபால் சர்மா கடைசியாக வரைந்தது தமிழ்த்தாய் ஓவியம். அதன் பிறகு அவருக்கு பக்கவாதம் வந்துவிட்டது. நல்லவேளை அதற்கு முன்பே, அறிஞர் அண்ணா, முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத், தியாகப் பிரம்மம், தங்கமயில் முருகன்... எனப் பல அரிய ஓவியங்களை வரைந்துவிட்டார். இவற்றில் திருவள்ளுவர், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத்... ஆகிய மூன்று ஓவியங்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடம் பெற்று இருக்கின்றன. மீதம் இருக்கும் ஓவியங்களை வரைந்து முடித்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அவற்றை அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் பார்த்தது இல்லை. சர்மா பிறந்த டிசம்பர் மாதத்தில் இந்த ஓவியங்களைக் கண்காட்சியாக வைக்கலாம் என முடிவு எடுத்திருக்கிறார்களாம் குடும்பத்தினர்!
திருவள்ளுவருக்காக தனது இளமை வாழ்வையே துறந்தவர் வேணு கோபால் சர்மா! திருவள்ளுவரின் உருவப் படத்தைத் தனது 58வது வயதில் திருப்தியுடன் நிறைவு செய்த பிறகுதான் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கே.ஆர். வேணுகோபால் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: