ஞாயிறு, 3 நவம்பர், 2019

அச்சுறுத்தும் அணுக்குண்டு!

சுமதி விஜயகுமார் : New Mexico. காலையில் கணவனும் மனைவியும் தங்கள்
வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, திடீரென்று அவர்களின் வீடு கடும் அதிர்விற்குள்ளானது. நிலநடுக்கம் வந்துவிட்டது என்று கணவர் தன் மனைவியை வீட்டை விட்டு வெளியில் வருமாறு கூறிவிட்டு வெளியில் ஓடுகிறார். மனைவி அவரை பின்தொடர்ந்து வெளியில் வர 'இன்று சூரியன் வேறு திசையில் உதித்திருக்கிறது' என்று கூறுகிறார். அதே நேரம் ஒரு சிறிய பெண் தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருக்க,
திடீரென்று கண்கள் கூசிப்போகும் அளவிற்கு ஒரு ஒளி. அவரின் அருகில் அமர்ந்திருந்த அவரது தங்கை 'என்ன நடந்தது, நான் ஒரு வெளிச்சத்தை பார்த்தேன்' என்று கூறிய பொழுது அவரின் குடும்பமே திடுக்கிட்டு அந்த தங்கையை பார்த்தது. ஏனென்றால் அவர் கண் பார்வையற்றவர். அந்த வெளிச்சத்திற்கு காரணமானவர்களை தேடி போனால் ஒவ்வொரு நூலாக பிடித்து கடைசியில் ஹிட்லரிடம் சென்று சேர்கிறது.
J. Robert Oppenheimer. தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். Princeton பல்கலைக்கழகத்தில் Albert Einsteinகு தலைவராக இருந்தவர். உயர்குடியில் பிறந்தவர். இயற்பியலில் பல சாதனைகள் புரிந்தவர். இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மக்களால் ஒரு கதாநாயகனை போல் கொண்டாடப்பட்டவர். அவரை ஒற்றை வரியில் விளக்கவேண்டும் என்றால், அவர் தான் ' Father of atomic bomb'.

ஹிட்லர் யூதர்களை நறவெட்டை ஆடிக்கொண்டிருக்க, அதற்கு துணை போல் ஜப்பானும் கூடவே வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. ஜெர்மனியை தாண்டி தனது ராஜ்யத்தை விஸ்தரிக்க ஹிட்லர் முயற்சி மேற்கொண்டிருந்த பொழுது அது உலக போராய் மாறி போயிருந்தது. Oppenheimer தன் வேளைகளில் மட்டுமே கவனம் செலுத்தி கொண்டிருக்க உலக யுத்தம் அவரையும் அரசியல் பக்கம் திருப்பியது. அவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த யூதர். ஏனோ அவருக்கு கம்யூனிசம் பிடித்திருந்தது. கார்ல் மார்க்ஸின் Das Kapital நூலை ஜெர்மன் மொழியிலேயே முழுவதுமாக படித்துமுடிக்கும் அளவிற்கு கம்யூனிசம் மேல் ஆர்வம் இருந்தது. ஆங்கிலம் தவிர வேறு 5 மொழிகளிலும் தேர்ந்தவராக இருந்தார் Oppenheimer. அதில் ஜெர்மன் மொழி ஒன்று.
Atomic bomb சாத்தியமில்லை என்று Einstein சொல்லி கொண்டிருக்க, உலகிற்கு தெரியாமல் Manhattan மாகாணத்தில் சத்தமில்லாமல் Oppenheimer தலைமையின் கீழ் வேலை துவங்கியது. அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனின் பண மற்றும் பொருள் உதவியுடன் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் $2 பில்லியன் செலவில் , 130000 பேரின் பங்கேற்பில் வேலைகள் நடந்தது. அங்கு பணி புரிந்த விஞ்ஞானிகளின் குடும்பத்திற்கு கூட தெரியாது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் , என்ன செய்கிறார்கள் என்று. எல்லாம் தயாரான பொழுது New Mexicoவில் சோதனை நடத்தப்பட்டது. அதைத்தான் முதலில் பார்த்தோம். அந்த சோதனையின் பொழுது 5 மைலுக்கு அப்பால் நின்றிருந்தவர்களுக்கு கூட அதன் சூட்டை உணர முடிந்தது.
சோதனை வெற்றி பெற்றதில் Oppenheimer மற்றும் அவரது குழுவிற்கு மற்றற்ற மகிழ்ச்சி.
6 ஆகஸ்ட் 1945. 'We knew the world would not be the same; என்று Oppenheimer குறிப்பிட்ட நாள் .அன்றைய விடியலில் ஜப்பான் இருண்டு போகும் என்று உலகம் எதிர்பார்க்கவில்லை. ஒரு சிலரை தவிர.மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித அறிவிப்புமின்றி அமெரிக்காவின் Pearl துறைமுகத்தில் தாக்குதல் நிகழ்த்தி இருந்தது. அதற்கான பதிலடிக்காக மட்டுமல்லாமல் , அதன் அணுகுண்டை சோதிப்பதற்காகவும் அதன் தாக்கங்களை தெரிந்து கொள்வதற்காகவும் , உலகிற்கு இனி தான் தான் ராஜா என்று அறிவித்து கொள்வதற்காகவும். அதனைவிட மிக முக்கியமான காரணம் கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யா மற்றும் சீனாவின் வளர்ச்சி. . ஜப்பானின் பல முக்கிய நகரங்களில் எல்லாம் சாதாரண குண்டுகளை பொழிந்து ஏற்கனவே பாதிப்பில் இருந்ததால், அதுவரை எந்த பாதிப்பும் இல்லாத நகரை தேர்ந்தெடுத்தது. அப்போதுதான் அணுகுண்டின் வீரியம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்று.
உலகின் முதல் அணுகுண்டு Hiroshima நகரில் விழுந்தது. அதன் வீரியம் என்னவென்று விளக்க ஒரு கட்டுரை எல்லாம் போதாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் வெளி கிரகத்தில் இருந்து பார்த்திருந்தாலும் அந்த குண்டு வெடித்தது தெரிந்திருக்கும். அந்த அளவிற்கு வீரியம் வாய்ந்தது. ஜப்பான் நிலைகுலைந்திருக்க அடுத்த மூன்று நாட்களில் Nagasakkiயில் இரண்டாவது குண்டு போடப்பட்டது. ஒன்று uranium குண்டு மற்றொன்று plutonium. 1945ல் தொடர்பு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாததால் சில நாட்கள் களைத்து தான் உலகிற்கு தெரியவந்தது. ஜப்பான் நிபந்தனையற்ற சமரசத்திற்கு வந்தது.
Oppenheimer கதாநாயகன் ஆனார். அவரின் மகழ்ச்சி கொஞ்ச நாட்களுக்கு தான் இருந்தது. ஜப்பானியர்களின் நிலைமை புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பரவ துவங்கின. அணுகுண்டுகள் தயாரிப்பில் தங்களை அர்ப்பணித்து கொண்ட விஞ்ஞானிகளில் பலரும் தாங்கள் எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டோம் என்று உணர்ந்தார்கள். Oppenheimer உட்பட. அணுகுண்டுகள் தயாரிப்பில் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார். உலக நாடுகள் செவி சாய்ப்பதாய் இல்லை. ஹிரோஷிமாவில் வெடித்த முதல் அணுகுண்டை அடுத்து ஒரே வருடத்தில் ஸ்டாலின் ரஷ்யாவில் தனது முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தினார். அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது.
அடுத்த ஓராண்டில் ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது அமெரிக்கா. அது ஹிரோஷிமாவில் வெடித்த குண்டை விட (மூச்சை இழுத்து பிடித்து கொள்ளுங்கள்) 1000 மடங்கு வீரியம் வாய்ந்தது. ஆமாம் 1000 மடங்கு. அதனை தொடர்ந்து ஒரே வருடத்தில் ரஷ்யாவும் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நிகழ்த்தி இருந்தது. Oppenheimerன் மேல் அதிருப்தியில் இருந்த அமெரிக்க அரசு அவர் ரஷ்யாவிற்கு உளவுபார்ப்பதாக சந்தேகித்தது. Oppenheimerன் கம்யூனிச சித்தாந்த ஆர்வமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. அதன் பிறகு Oppenheimer தான் இறக்கும் தருவாய் வரையில் அமெரிக்காவின் சந்தேக பார்வையில் இருந்து தப்பவேயில்லை. அதன் பிறகு நடந்த எந்த சோதனைகளிலும் அவர் அனுமதிக்கபடவேயில்லை.
ஹிட்லரின் மனிதத்தன்மையற்ற செயலின் மிச்ச சொச்சம் தான் இந்த அணுகுண்டுகள் என்று சொல்ல முடியாது என்றாலும் , ஹிட்லர் இல்லையென்றால் அதன் ஆராய்ச்சி தாமதிக்க பட்டிருக்கலாம். ஹிரோஷிமா , நாகசாகி மக்கள் பேரழிவை சந்திக்காமல் இருந்திருக்கலாம். ISRO சிவன் கட்டுரையில் நம் நாட்டிற்கு ராக்கெட் தேவையில்லாத ஒன்று என்று குறிப்பிட்ட பொழுது ஒருவர் நான் உபயோகிக்கும் அலைபேசி அந்த அறிவியலில் வந்ததுதான் என்று. ஒருவேளை என் அலைபேசி கண்டுபிடித்ததற்கு பதில் மலக்குழியிலும் ஆழ்துளையிலும் விழும் குழந்தைகளையம் மனிதர்களையும் காப்பாற்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அறிவியலை தாராளமாக வரவேற்கலாம். 20 ஆண்டுகளுக்கு முன்புவரை மனிதர்கள் அலைபேசி இல்லாமல் தான் வாழ்ந்தார்கள்.
பல அறிவார்ந்த, மக்கள் நலன் கருதி ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் இன்றளவும் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் உழைப்பு அனைத்தும் வல்லரசுகளின் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த படுகிறது. பொது மக்களின் தேவை அனைத்தும் இரண்டாம் பட்சம் தான்.
குழியில் இருந்து நீட்டப்படும் கைகளுக்கு விரைவில் அறிவியல் கை கொடுக்கும் என்று நம்புவோம்

கருத்துகள் இல்லை: