புதன், 6 நவம்பர், 2019

வள்ளுவருக்கு காவி: பாஜகவை முந்திக் கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை!

வள்ளுவருக்கு காவி: பாஜகவை முந்திக் கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை!மின்னம்பலம் : திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜகவின் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட படம் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசுகிறார்கள், இது கண்டிக்கத் தக்கது என்று திமுக, மதிமுக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்க அதிமுக அரசின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவோ, ‘திருவள்ளுவர் ஒரு இந்துதான். அதனால் அவருக்கு காவி உடை பொருத்தமானதுதான்’ என்று பதில் அளித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வள்ளுவர் சிலைக்கு தமிழர் அல்லாதோர் சாணம்பூசிவிட்டுப் போக, இன்று அதே வள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு போர்த்தி ருத்ராட்சம் அணிவித்துக் கைதாகியிருக்கிறார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.
அந்த சிலையை சுற்றி வேலி அமைத்து போலீஸார் பாதுகாத்து வருகிறார்கள்.
இந்த பரபரப்புக்கு இடையே மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஒரு புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார். திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதில் பாஜகவுக்கு முன்னோடியாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைதான் செயல்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ஜவாஹிருல்லா.

”அய்யன் திருவள்ளுவருக்கு முதலில் காவி உடை அணிவித்தது தமிழக பள்ளிக் கல்வித் துறை தான். 2019ல் தமிழக அரசு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள 12ம் வகுப்பிற்கான பிரெஞ்சு மொழி பாடநூலின் 59ம் பக்கத்தில் அய்யன் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்த படத்தை வெளியிட்டுள்ளார்கள். குருவை மிஞ்சிய சீடர்கள்” என்று அதிமுகவினரைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார் ஜவாஹிருல்லா.
பிரெஞ்சு மொழிப் பாடத்தில் இந்த ’காவி வள்ளுவர்’ இடம்பெற்றதால் வெகுஜன கவனத்துக்கு வராமல் போய்விட்டது. அதையே பாஜக எடுத்துப் போட்டவுடன் அனைவரது கவனத்துக்கும் வந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: