வியாழன், 7 நவம்பர், 2019

தமிழ்நாட்டில் நிலவிய கடும் பஞ்சங்கள் .. சாப்பிட்டாச்சா என்ற கேள்வி பிறந்த கதை இது

பாண்டியன் சுந்தரம் : நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது
"சாப்பிட்டாச்சா?" என்று இன்று கேட்கிறோமே, இது எப்போது துவங்கியது தெரியுமா?
தமிழகத்தில் பல்வேறு பஞ்சங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் முக்கியமானது 1876 ஆம் ஆண்டின் தாது வருஷப் பஞ்சம். இன்னொரு பஞ்சம்1896இல் தமிழகத்தைத் தாக்கியது. இந்தப் பஞ்சங்களுக்கு முக்கியக் காரணம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை கொண்ட ஆட்சி முறையே. கிழக்கிந்தியக் கம்பெனிதான் சென்னை நகரை உருவாக்கியதென்பது நாம் அறிந்ததே. அதன் ஆட்சியில் 1640 இல் துவங்கி 1907 வரை சுமார் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை உணவுப் பஞ்சங்கள் தாக்கின.
துவாதசப் பஞ்சம், தாதுப் பஞ்சம், குண்டூர்ப் பஞ்சம், ஒரிஸ்ஸா பஞ்சம் என்று பஞ்சங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இந்தப் பஞ்சங்கள் காவு வாங்கின.

சிப்பாய்ப் புரட்சிக்குப் பின் சென்னை மாகாணம் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது. கடுமையான நிலவரிவிதிப்பு, விளைந்த பயிர்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தல் என உணவு உற்பத்தி பிரிட்டிஷ் ஆட்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது.

தக்காணப் பீடபூமிப் பகுதிகளான இன்றைய தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய பகுதிகளின் மக்கள் தாது வருஷப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டனர்.
வறட்சி ஏற்பட்டபோது மக்கள் விதை நெல்லைச் சமைத்துச் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. ஆயினும் கூட தானிய ஏற்றுமதியை ஆங்கிலேயர்கள் நிறுத்தவில்லை. கப்பல் கப்பலாக கோதுமையும் பருத்தியும் உணவுப் பொருட்களும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தன.
பஞ்சத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தானியங்களின் சிறு வணிகத்தை முற்றிலும் தடைசெய்து, ஏகபோக விற்பனை உரிமையைத் தனதாக்கிக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. வரி செலுத்த முடியாதவர்களின் ஆடுகள், மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தத்தளித்தனர். விவசாயம் பொய்த்துப் போக, உள்ளூர் சந்தைகளில் தானியங்களின் வரத்து முற்றிலுமாக நின்று போனது.
பெருமுதலாளிகள் ஆங்கிலேயரின் உதவியுடன் வடமாகாணங்களில் இருந்து தொடர் வண்டிகளிலும், பர்மாவிலிருந்து கப்பல்களிலும் தானியங்களைக் கொண்டு வந்து இறக்கினர். ஆனால் அவற்றைப் பதுக்கி கள்ளச்சந்தையில் மூன்று, நான்கு மடங்கு விலையில் விற்றுக் கொள்ளை அடித்தனர்.
பஞ்சகாலத்தில் மக்கள் வேலை வாய்ப்பினை முழுதாக இழந்தனர். வருமானமற்ற நிலையில் நகைகள், பாத்திரங்கள், ஆடுகள், மாடுகள், துணிகள், வீட்டு கதவுகள், ஜன்னல்கள் என்று அனைத்தையும் விற்று உணவு உண்டனர். பணம் கரைந்ததும் நாடோடி வாழ்க்கை வாழும் நிலைக்குப் பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டனர்.
வேலை பெறுவதற்காக மக்கள் கிராமங்களைக் காலி செய்து நடைப் பயணமாக பெரு நகரங்களை நோக்கிச் சென்றனர். கொடிய வெப்பத்தில் உணவும் நீரும் இன்றி நெடு நாட்கள் நடந்ததால் வயதானவர்களும், குழந்தைகளும் பாதி வழியிலேயே ஆங்காங்கே விழுந்து இறந்தனர்.
‘கீழே கிடந்த ஓர் எலும்புத்துண்டை நாய் கவ்விக்கொண்டு ஓடுவதை மக்கள் காண்கிறார்கள். உடனே அந்த நாயைத் துரத்திக் கொன்று ஒரு துண்டு எலும்புக்காக தங்களுக்குள் அடித்துக்கொண்டார்கள்’ என்று அன்றைய நிலையை பதிவு செய்த ஓர் அறிக்கை கூறுகிறது.
மக்கள் எறும்புப் புற்றுகளைத் தேடிச் சென்று அதிலிருந்து தானியங்களை எடுத்து உண்பதைக் கண்டதாக அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மெக்குகே கூறி இருக்கிறார்.
ஊர்வன, பறப்பன என அனைத்தையும் மக்கள் உண்ணத் துவங்கினர். வயிற்றைப் புண்ணாக்கி எரிச்சல் ஏற்படுத்தும் காட்டுக் கிழங்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை. பழக்கமில்லாத உணவினாலும், சில நச்சுள்ள காய், கொட்டை, கிழங்குகளை உண்டதாலும் பலர் நோயுற்று இறந்தனர்.
பசியால் மக்கள் எலும்பும் தோலுமாகி கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்தனர். எப்படியாவது உயிர் பிழைத்தாக வேண்டும் என்று நினைத்தவர்கள் இலங்கை, பிஜி, பர்மா, தென்னாப்பிரிக்கா என்று உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் கொத்தடிமை முறையில் சேவகத்துக்குப் போனார்கள்.
இப்பஞ்சம் தாக்கிய வருடங்களில் சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 3லட்சத்துக்கும் அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.
இந்தப் பஞ்சத்தில் மடிந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஆயினும்,இந்தப் பஞ்சம் பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர் டேவிட் ஆர்னால்ட் கொடுக்கும் தகவல் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 35 லட்சம் பேர்.
பசியால் வாடிய மக்களில் சிலர் வெள்ளைக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களின் தானியக் கிடங்குகளைச் சூறையாடி தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். சந்தைகளில் பூட்டியிருந்த கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன.
பசியின் கொடுமை தாளாமல் சிறுவர்களும் பெரியவர்களும் பல இடங்களில் வன்முறையுடன் கூடிய கொள்ளைகளில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது பல இடங்களில் ஆங்கிலேய அரசிற்கு பெரும் சிக்கலானது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் லைட்டன் பிறப்பித்த உத்தரவின் பேரில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் பஞ்ச நிவாரண நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டன.ஆங்காங்கே வேலைத் திட்டங்களைச் செயல்படுத்த முன்வந்தனர். பல இடங்களில் தண்டவாளம் அமைக்கும் பணிகளையும் சாலைகள் அமைக்கும் பணிகளையும் ஏற்படுத்தி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முயன்றனர். வேலை செய்தவர்களுக்குக் கூலியாக ஒரு வேளை உணவு வழங்கப்பட்டது. கடற்கரையில் ஏற்றுமதி ஆகும் தானியங்கள் கீழே கொட்டினால் அதை சேகரித்துத் தின்ன பலர் போட்டி போட்டனர்.
இன்றும் சென்னையின் ஒரு சில இடங்கள் பஞ்சங்களை நினைவு கூறும் அடையாளங்களாகத் திகழ்வதைக் காணலாம். பக்கிங்ஹாம் கால்வாய் ஒரு முக்கிய அடையாளம். இந்தக் கால்வாய், தாது வருடப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே வெட்டப்பட்டது.பல ஆண்டுகள் இக்கால்வாய் போக்குவரவுக்குப் பயன்பட்டது. வீடுகளின்பெருக்கத்தாலும், தொழிற்சாலைகளாலும் இந்தக் கால்வாய் இன்று சாக்கடையாகச் சுருங்கி விட்டது.
நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது ‘சாப்பிட்டாச்சா’ என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த வழக்கம் ஆரம்பித்தது பஞ்ச காலத்தில்தான் என்பது நினைவில் கொள்ளத்தக்கது!

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இது போன்ற பழையநிகழ்வுகளை இன்றைய மனிதர்கள் மற்றும் வருங்கால மக்கள் தெரிந்து உணர அரிய பதிப்பு! நன்றி

பெயரில்லா சொன்னது…

காந்தி ராமலிங்கம் .பஞ்சத்தின் கொடுமையை உண்மைவரலாராக பதித்தமைக்கு மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

நன்றிகள் கோடி .பஞ்சம் என்ற கொடிய பேயின் தன்மை மற்றும் அன்றைய காலட்டத்தில் மானுட, விலங்குகளின் அவலநிலையையும் விளக்கி யுள்ள அரிய பதிப்பு நன்றி -- காந்தி ராமலிங்கம் @ஆயக்குடி

Suja suyambu சொன்னது…

17 முறை பஞ்சம் உருவானதை தெரிவிக்கும் நூலாதாரத்தைப் பற்றிக் குறிப்பிடுங்கள் 🍁