வெள்ளி, 1 நவம்பர், 2019

ஐஎஸ்ஐஎஸ்: மலேசிய காவல்துறை அதிர்ச்சி தகவல்.. தென்கிழக்கு ஆசியாவை குறி வைக்கிறது

அபுபக்கர்BBC ::   ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி இறந்துவிட்டாலும், அந்த அமைப்பு தொடர்ந்து தீவிரமாகச் செயல்படும் என நம்புவதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, மலேசிய போலிசாரும் பாதுகாப்புப் படையினரும் உச்சபட்ச விழிப்பு நிலையில் இருப்பதாகவும், ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் நீடிப்பதாகவும் மலேசிய காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் டத்தோ அயோப் கான் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஎஸ் அமைப்பின் வேகம் இனி சற்றே குறையக் கூடும் என்றாலும், தென் கிழக்கு ஆசியாவில் தங்களுக்கான ஒரு தளத்தை அமைப்பதில் அவர்கள் இன்னும் தீவிரமாகச் செயல்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
ஐ.எஸ் சித்தாந்தம் முற்றிலுமாக முடக்கப்படும் வரை ஆபத்து நீடிக்கும்:
கடந்த 2017இல், சிரியாவில் வீழ்ச்சி கண்ட பிறகு, தென்கிழக்கு ஆசியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டதை மலேசிய போலீசார் முன்பே அறிந்திருப்பதாகக் குறிப்பிட்ட அயோப் கான், அந்த அமைப்பு தெற்கு ஃபிலிப்பின்சில் காலூன்ற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

சுரபயாவிலும், தெற்கு ஃபிலிப்பின்சிலும் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை ஐ.எஸ் அமைப்பின் எதிர்காலத் திட்டங்களுக்கான சான்றுகளாகக் கருதலாம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் தங்களுடைய புலனாய்வுத் தகவல்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தீவிரவாத தாக்குதல்களைத் தவிர்க்கவும் தடுக்கவும் முடியும் என்று அயோப் கான் குறிப்பிட்டார்.
“அபுபக்கர் அல்-பாக்தாதி உயிரிழந்து விட்டாலும், ஐ.எஸ் அமைப்பு தொடர்ந்து செயல்படும் என்றே கருத வேண்டியுள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தலைமையிடம் இருந்து இனி உத்தரவுகள் வராமல் போகலாம். ஆனால் அந்த அமைப்பின் சித்தாந்தங்களைப் பின்பற்றும் தீவிர போக்குடைய நபர்களால் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட வாய்ப்புள்ளது.
“எனவே அந்த சித்தாந்தம் முடக்கப்படும் வரை ஐ.எஸ் மற்றும் இதர தீவிரவாதக் குழுக்களால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் நீடிக்கவே செய்யும். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகும், அல்கய்தா அமைப்பால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் நீடித்தது,” என்று டத்தோ அயோப் கான் சுட்டிக் காட்டினார்.
ஐ.எஸ் அமைப்பு தொடர்பான காணொளிகள் மற்றும் போதனைகள், சமூக வலைத்தளங்கள், மற்ற தகவல் பரிமாற்றச் செயலிகள் மூலம் பரவுகின்றனவா? என மலேசிய புலனாய்வு முகமைகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது தீவிரவாதிகள் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதாக தெரிவித்தார்.

ஐஸ் அமைப்பு புதிய வியூகங்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது

இதற்கிடையே, தலைவரை இழந்துள்ள ஐ.எஸ் அமைப்பினர், புதிய வியூகங்களுடன் மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிப்பார்கள் என்கிறார் மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் அரசியல் துறை விரிவுரையாளரான டாக்டர் அஹமட் எல்-முஹமதி.
அபுபக்கர் அல்-பாக்தாதியின் மரணம் அந்த அமைப்புக்கு பெரும் இழப்பு தான் என்று குறிப்பிடும் அவர், இனி புதிதாக ஆட்களைச் சேர்ப்பதில் ஐ.எஸ் அமைப்பு கவனம் செலுத்த வாய்ப்புள்ளது என்கிறார்.
“எனவே அந்த வட்டாரத்தைச் சேர்ந்த நாடுகள் தங்களது பாதுகாப்பு முகமைகளை விழிப்பு நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அவர்கள் தற்போது உள்ளதைக் காட்டிலும் மேலும் ஒரு படி அபாயகரமான அமைப்பாக மாறாவிட்டாலும், ஆட்களைச் சேர்ப்பதிலும், தங்களது நடவடிக்கைகளைத் திட்டமிடுவதிலும் சாமர்த்தியமாக செயல்பட வாய்ப்புண்டு,” என்கிறார் அஹமட் எல்-முஹமதி.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் நீண்ட போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

ஐ.எஸ் அமைப்பு தற்போது தலைவரை இழந்துவிட்ட நிலையில், தங்களது பகுதிகளில் அந்த அமைப்பினர் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல்களில் ஈடுபடக் கூடும் என மலேசியா, இந்தோனீசியா, ஃபிலிப்பின்ஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
ஐ.எஸ் சித்தாந்தத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்நாடுகள் நீண்ட காலப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள் பாதுகாப்புத் துறை நிபுணர்கள்.
இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வதாகச் சொல்கிறார் ஃபிலிப்பின்ஸ் தற்காப்புத் துறைச் செயலர் டெல்ஃபின் லொரென்சனா (Delfin Lorenzana).
“அபுபக்கர் அல்-பாக்தாதியின் மரணம் ஐ.எஸ் அமைப்பை நிச்சயம் தடுமாறச் செய்யும். எனினும் அந்த அமைப்பின் அச்சுறுத்தல் நீடிக்கும்,” என்கிறார் டெல்ஃபின்.
கடந்த காலங்களில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இணையம் வழி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது ஐ.எஸ் அமைப்பு. இதன் மூலம் இஸ்லாமிய இளையர்கள் பலர் அந்த அமைப்பின்பால் கவரப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்கல்வி பெறாதவர்கள் எனக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஃபிலிப்பின்சின் பிரச்சினைக்குரிய மைண்டனாவோ பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தான் ஐ.எஸ் அமைப்பில் ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
“அபுபக்கர் அல்-பாக்தாதியின் மரணம் ஐ.எஸ் அமைப்புக்கு மிகப் பெரிய அடி தான். எனினும் அந்த அமைப்பின் வீச்சும் ஆழமும் பரவலாக உள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது அந்த அமைப்புக்கு ஏற்பட்டிருப்பது தற்காலிகப் பின்னடைவு தான்,” என்கிறார் டெல்ஃபின்.

400க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளது மலேசியா:

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது ஐ.எஸ் அமைப்பு நீண்ட காலமாகவே தன் பார்வையைப் பதித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்கா தொடங்கி, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் ஊடுருவி உள்ள இந்த அமைப்பு, தற்போது மலேசியா போன்ற நாடுகளிலும் ஆதரவாளர்களைப் பெற திட்டமிடும் எனக் கூறப்படுகிறது.


மலேசியாபடத்தின் காப்புரிமை Getty Images
கடந்த ஆண்டு ஃபிலிப்பின்சில் நிகழ்த்தப்பட்ட நான்கு தற்கொலைத் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதை பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். மேலும், அந்நாட்டின் மாராவி நகரை ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.
கடந்த 2017ஆம் ஆண்டு மாராவி நகர் முற்றுகையில், மலேசியா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த பலர், ஃபிலிப்பின்ஸ் படைகளுக்கு எதிராக போராடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விழித்துக் கொண்ட மலேசிய அரசு, தீவிரவாத குழுக்களுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 400க்கும் மேற்பட்டவர்களை தடுத்து வைத்துள்ளது.
“ஐ.எஸ் அமைப்பின் தலைவர் யார் என்பது கவலைக்குரிய விஷயம் அல்ல. மாறாக அந்த அமைப்பின் போதனைகளால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்தே கவலைப்பட வேண்டியுள்ளது.
ஐ.எஸ் அமைப்பின் தலைவர் குறித்து தற்போது வந்திருப்பது நல்ல செய்தி தான். எனினும் அந்த அமைப்பின் சித்தாந்தம் எந்தளவு பரவியுள்ளது என்பதை ஆராய்வதே முக்கியம்.
இத்தகைய போதனைகளால் சுய தீவிரவாத தன்மையுடன் பலர் தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இப்போதும் கூட ஐ.எஸ் அமைப்பின் போதனைகள் இணையம் வழி பரப்பப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முந்தைய ஐ.எஸ் அமைப்பின் பிரசுரங்கள், இதழ்கள் ஆகியவை மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன,” என்று எச்சரிக்கிறார் டத்தோ அயோப் கான்.
இந்தக் கூற்றை உறுதி செய்வது போல் அல் பாக்தாதியின் மறைவையடுத்து, ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
“இஸ்லாமிய ஜிகாத் எனப்படும் புனிதப்போர் தனி நபரை சார்ந்து இருக்காது. அது எப்போதுமே உயர்ந்து நிற்கும்,” என்றும், “ஜிகாத் என்றும் நிற்காது” என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.
தீவிரவாதம் பத்து தலை அசுரனைப் போன்றது என்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர்.
இந்நிலையில், அல் பாக்தாதியின் மரணம் என்பது எதையும் முடிவுக்கு கொண்டு வந்துவிடாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.


ஸ்காட் மாரிசன்படத்தின் காப்புரிமை Getty Images
“இது பத்து தலை கொண்ட அசுரனைப் போன்றது. ஒரு தலையை வெட்டினால், மற்றொரு தலை எழுந்து நிற்கும்,” என்று அவர் கூறியுள்ளார்.
உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நாடான இந்தோனீசியாவில் தீவிரவாதக் குழுக்கள் மீண்டும் எழுச்சி பெறுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தீவிரவாதத்துக்கு எதிரான சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்துள்ள அந்நாட்டு அரசு, நூற்றுக்கணக்கானோரை சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்துள்ளது.
ஆயிரக்கணக்கான இந்தோனீசிய இளைஞர்கள் ஐ.எஸ்ஐ.எஸ் அமைப்பின் பால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 500 பேர் சிரியாவில் இயங்கும் அந்த அமைப்பில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐ.எஸ் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தங்களது புலனாய்வு முகமைகள் தயாராக உள்ளதாக இந்தோனீசியா தெரிவித்துள்ளது.
“இது ஒரு போர். எனவே பதில் தாக்குதல் என்பது வழக்கமான ஒன்று தான். நாட்டின் பாதுகாப்பு என்று வரும் பட்சத்தில் நிச்சயம் அதை உறுதிபடுத்துவோம்,” என்று இந்தோனீசிய புலனாய்வு முகமையின் செய்தித் தொடர்பாளர் வாவான் புர்வான்டோ (Wawan Purwanto) தெரிவித்துள்ளார்.

எல்டிடிஈ விவகாரம்: மலேசியாவில் 12 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு

ஐ.எஸ் அமைப்பால் அச்சுறுத்தல் நீடிக்கிறது எனக் கூறியுள்ள மலேசியா, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தயக்கமின்றி மேற்கொண்டு வருவதாகச் சொல்கிறது.
இதன் எதிரொலியாக தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 12 பேரை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது.
அவர்களில் 10 பேர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதானவர்களில் இருவர் மலேசியாவின் இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
மலேசிய அரசின் இந்நடவடிக்கைக்கு சில தரப்பினர் கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பு முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த அமைப்புடன் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டி பலரைக் கைது செய்வது சரியல்ல என அதிருப்தியாளர்கள் தரப்பு தெரிவிக்கிறது.
எனினும் நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என மலேசிய காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: