வியாழன், 31 அக்டோபர், 2019

பிரேமலதா சுஜித் அடிதடி .. விஜயகாந்த் குடும்பத்தில் அதிகார போட்டி .. சுஜித் போர்க்கொடி!

Mahalaxmi : அக்கா – தம்பிக்குள்ளேயே அடிதடி… விழி பிதுங்கும் விஜயகாந்த்… பரிதாப தொண்டர்கள்…
சினிமாவில் எத்தனையோ மயிற்கூச்செரியும் சண்டைக் காட்சிகளை நிகழ்த்திக் காட்டியவர் விஜயகாந்த்.
அப்படிப்பட்டவர் இன்று தன் கண்முன்னே குடும்பத்திற்குள் நடக்கும் ஆக்ரோஷ மோதலைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இயல்பாக செயல்பட முடியாத அளவிற்கு விஜயகாந்த் உடல்நலம் என்றைக்குப் பாதிக்கப்பட்டதோ அன்று முதல் குடும்பத்திலும், கட்சியிலும் மனைவி பிரேமலதாவின் ஆதிக்கம் உச்சத்திற்கு போனது.
2016ல் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற விஜயகாந்தின் விருப்பத்தையும் மீறி, அவரை மக்கள் நலக் கூட்டணிக்குள் திணித்ததில் பிரேமாவுக்கு முக்கிய பங்கு உண்டு. அதுபோலவே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கைகோர்க்கும் முடிவையும் பிரேமாவே தன்னிச்சையாக எடுத்தார்.
அண்மையில் நடைபெற்ற நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வரை இதே நிலைதான்!

கூட்டணி ’பேரங்கள்’, அதையொட்டிய ’ஆதாயங்கள்’ தொடர்பான எந்தவொரு தகவலையும் கணவருக்கு பிரேமா தெரிவிக்கவில்லையாம். கணவருக்கே தெரிவிக்காதபோது கட்சி நிர்வாகிகளுக்கு எப்படி தெரிவித்திருப்பார்!
தன்னை மையமாக வைத்து மிகப் பெரிய அரசியல் வியாபாரம் நடப்பதை விஜயகாந்த் புரிந்துகொண்டாலும் அதைத் தட்டிக் கேட்கும் நிலையில் அவர் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய சோகம்.
சமீபத்தில் தன்னை தனிமையில் சந்தித்த ஆரம்பகால நண்பரும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான அந்த வேலூர் புள்ளியிடம் விஜயகாந்த் தட்டுத்தடுமாறி தனது ஆதங்கத்தைக் கொட்ட, அந்த சமயத்தில் பிரேமா அங்கு எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
அப்புறமென்ன! கேப்டனை இனி யாரும் தனியாக சந்திக்கக் கூடாது என தடை போட்டுவிட்டார் சகதர்மிணி.
இது ஒருபுறமிருக்கட்டும்!
பிரேமலதாவின் அத்தனை திரைமறைவு நடவடிக்கைகளிலும் இதுவரை அவருடன் கைகோர்த்திருந்த தம்பி சுதீஷ், இப்போது சகோதரிக்கு எதிராக வெகுண்டு எழுந்திருப்பது, முற்றிலும் எதிர்பாராதத் திருப்பம்.
விஜயகாந்தின் அரசியல் வாரிசுகளாக பிரேமாவும், அடுத்ததாக சுதீஷுமே இதுவரை முன்னிறுத்தப்பட்டு வந்தனர். இந்தநிலையில் ஒரு திடீர் திருப்பமாக மகன் விஜய பிரபாகரனுக்கு பிரேமா என்றைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தாரோ அன்றைக்குத் தொடங்கிவிட்டது அக்காள்-தம்பி யுத்தம்.
தேமுதிக சார்பில் இப்போது எந்தவொரு நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் அங்கே விஜய பிரபாகரன்தான் பங்கேற்கிறார். ஒரு மரியாதைக்காக கூட சுதீஷுடம் தகவல் சொல்லப்படுவதில்லையாம்.
இதனால் கோபத்தின் உச்சத்தில் இருக்கும் சுதீஷ், அக்கா பிரேமாவுக்கு மிக நெருக்கமான பெண் தோழியை சமீபத்தில் போனில் பிடித்து வாங்கு வாங்கு என வாங்கியிருக்கிறார்.
‘’ கிட்டத்தட்ட 30 வருஷங்கள் ஒரு கொத்தடிமை மாதிரி அக்காளுக்கும், அத்தானுக்கும் வேலை செஞ்சிருக்கிறேன். இதனால சினிமாவில் நடிக்கணும் என்பது மாதிரியான என்னோட ஆசைகளை மூட்டைகட்டி வெச்சேன். கட்சிக்காகவும், குடும்பத்திற்காகவும் காலம் பூரா உழைச்ச என்னை ஓரங்கட்டிவிட்டு, அரசியல் என்றால் என்னண்ணே தெரியாத மகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எந்த வகையில் நியாயம்! உங்க பிரெண்டோட எல்லா ’டீலிங்கும்’ எனக்குத் தெரியும். என்னை அவமதித்தால்…எல்லோருமே அசிங்கப்பட வேண்டியிருக்கும்’’ என்கிற சுதீஷின் கொந்தளிப்பை அந்த பெண் தோழி பிரேமாவிடம் அப்படியே பாஸ் செய்திருக்கிறார்.
‘’ அவன் கிடக்கிறான்…..பய. என்னோட இன்றைய ஸ்டேட்டசுக்கு அவனெல்லாம் ஒரு ஆளா!’’ சிம்பிளாக பதில் சொல்லியிருக்கிறார் பிரேமா.
நடப்பவற்றை எல்லாம் அரைகுறையாக தெரிந்துவரும் தேமுதிக நிர்வாகிகளோ, ‘’ஏற்கனவே கழுதை தேஞ்சி கட்டெறும்பான நிலைமையில் கட்சி இருக்குது. இந்த லட்சணத்தில் இவங்க இப்படி அடிச்சிக்கிட்டாங்கண்ணா….சுத்தம்’’ என சோக கீதம் பாடுகிறார்கள்....
சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கடா

கருத்துகள் இல்லை: