வியாழன், 6 ஜூன், 2019

அ.தி.மு.க-வில் இணைந்த அ.ம.மு.க முக்கியப் புள்ளி பாப்புலர் முத்தையா

மரியாதை இல்லாததால் விலகிய பாப்புலர் முத்தையா மரியாதை இல்லாததால் விலகிய பாப்புலர் முத்தையா எஸ்.மகேஷ் - vikatan : நெல்லை அ.ம.மு.க. மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, தினகரனிடமிருந்து விலகியதற்கு சில முக்கிய காரணங்களை நம்மிடம் தெரிவித்தார். மாவட்டச் செயலாளருக்கு தகவல் தெரிவிக்காமல் நெல்லைக்குள் பொதுச் செயலாளர் தினகரன் வந்ததாகவும், மரியாதை என்பதே கட்சியில் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள், அ.தி.மு.க-வில் தொடர்ந்து இணைந்துவருகின்றனர். நெல்லை மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக்  கழகம் சார்பில் போட்டியிட்டவர் முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன். தேர்தலில் தோல்வியடைந்த கையோடு அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். இவருடன் அ.ம.மு.க-வின் நெல்லை வடக்கு மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் முக்கிய நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்து அ.தி.மு.க-வில்  இணைந்தனர். இவர்கள் இணைவதற்கு சில நாள்களுக்கு முன் அ.ம.மு.க அமைப்புச் செயலாளராக இருந்த அண்ணாமலை அ.தி.மு.க-வில் இணைந்தார். நெல்லை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரில் பலர் அதிருப்தியில் இருந்துவருகின்றனர். இதனால் அதிருப்தியிலிருக்கும் நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் சேருவது தொடர்கதையாகிவருகிறது. இதே நிலை நீடித்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூடாரம் நெல்லையில் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க-வில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளிடம் பேசினோம். “அ.தி.மு.க.வுக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சசிகலாவின் ஒப்புதலோடு டி.டி.வி. தினகரன் ஏற்படுத்தினார். துணைப் பொதுச் செயலாளராக இருந்த அவர், திடீரென பொதுச் செயலாளரானார். அவரை நம்பி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டோம். எங்களின் பணத்தை கட்சிக்காக செலவழித்தோம். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தைப் பெற்றுள்ளோம்.

நெல்லை மக்களவைத் தொகுதியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஞானஅருள்மணி மாற்றப்பட்டு அம்மா பேரவை இணைச் செயலாளர் மைக்கேல் ராயப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மைக்கேல் ராயப்பனுக்கு 62,209 ஓட்டுகள் கிடைத்தன. தமிழகத்தில் 11 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மண்டல பொறுப்பாளர்களின் செயல்பாடுகளால் அ.ம.மு.க-வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால்தான் தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க-வில் நாங்கள் சேர்ந்துள்ளோம். சமீபத்தில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தினகரன், `இந்தக் கட்சியிலிருந்து யார் சென்றாலும் எனக்குக் கவலையில்லை’ என்ற ரீதியில் பேசினார். இப்படிப்பட்ட சூழலில் அந்தக் கட்சியில் இனியும் இருந்தால் எங்களுக்கு மரியாதை இருக்காது. கட்சியின் தலைமையில் உள்ள சிலரால் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளோம்” என்றனர்.
பாப்புலர் முத்தையாவிடம் பேசினோம். “எதை வேண்டும் என்றாலும் இழக்கலாம். மரியாதையை இழக்க முடியுமா. அதனால்தான் அ.ம.மு.க-விலிருந்து விலகி தாய்க் கழகமான அ.தி.மு.க-வில் இணைந்துள்ளேன். மண்டலப் பொறுப்பாளர்கள் சொல்லும் தவறான தகவல்களைக் கேட்கும் தினகரன், அதை நம்பி மாவட்டச் செயலாளர்களை மரியாதை குறைவாக நடத்துகிறார். தென்காசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு தினகரன் வந்திருந்தார். மாவட்டச் செயலாளர் என்ற முறையில் என்னிடம் தொகுதி நிலவரம் குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், மண்டல பொறுப்பாளர்களிடம் மணிக்கணிக்கில் பேசினார். தினகரனைச் சந்திக்கக்கூட மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் மண்டல பொறுப்பு என்ற பதவி வந்தபிறகு மாவட்டச் செயலாளர்களுக்கும் பொதுச் செயலாளருக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்துவருகின்றனர் மாவட்டச் செயலாளர்கள். இதனால் மாவட்டச் செயலாளர்கள் தொலைத் தொடர்புக்கு வெளியில் சென்றுவிட்டனர். அ.தி.மு.க-வில் இணைந்த எங்களை வெற்றிவேல், பச்சோந்தி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து அ.தி.மு.க-வுக்கு வந்த வெற்றிவேலை என்ன சொல்வது. நாங்கள் தாய்க் கழகத்தில்தான் சேர்ந்துள்ளோம். அ.தி.மு.க-வின் அணிதான் அ.ம.மு.க. அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என்றுதான் தினகரன் கூறினார். வெற்றிவேல் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையல்ல.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்சி குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவார். ஆனால், தினகரன், சில மாவட்டச் செயலாளர்களுடன் சமீபகாலமாக கலந்து ஆலோசிப்பதில்லை. மண்டல பொறுப்பாளர்களிடம்தான் பேசி முடிவெடுக்கிறார். கட்சித் தலைமை அலுவலகத்தில் பெங்களூரு புகழேந்தி பேசும்போது மண்டல பொறுப்பாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது என்று சூசகமாக கூறினார். ஆனால், அவரை பேச தினகரன் அனுமதிக்கவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மீதான நம்பிக்கை தினகரனுக்கு இல்லை. எங்களுடன் தினகரன் பேசியிருந்தால் நிலவரத்தைச் சொல்லியிருப்போம்.

ஓட்டப்பிடாராம் தேர்தல் பிரசாரத்துக்காக நெல்லை வந்த பொதுச் செயலாளர் தினகரன், மாவட்டச் செயலாளருக்குகூட தகவல் தெரிவிக்கவில்லை. கடந்த ஓராண்டாக ஒரு சில மாவட்டச் செயலாளர்களைத் தவிர மற்ற மாவட்டச் செயலாளர்களிடம் தினகரன் பேசுவதில்லை. இப்படியொரு கட்சி அனுபவத்தை என்னுடைய அரசியல் வாழ்க்கையில் பார்த்ததில்லை” என்றார்.
இதுகுறித்து அ.ம.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தேர்தலில் சரியாக பணியாற்றாத மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தினகரன் அறிவித்திருந்தார். இதற்கு பயந்துபோன மாவட்ட நிர்வாகிகள் வேறு கட்சியில் சேர்ந்துள்ளனர். ஜெயலலிதா பாணியில் தினகரன் கட்சியை நடத்துகிறார். மண்டல பொறுப்பாளர்கள் உட்பட யார் தவறு செய்தாலும் ஜெயலலிதாவைப் போல பாரபட்சமின்றி தினகரன் நடவடிக்கை எடுத்துவருகிறார். தற்போது, அ.தி.மு.க-வில் இணைந்துள்ளவர்கள் ஏற்கெனவே அந்தக் கட்சி நிர்வாகிகளுடன் கைகோத்து தேர்தலில் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டனர். அவர்கள் மீது தினகரன் நடவடிக்கை எடுப்பதற்குள் அவர்களே கட்சியிலிருந்து விலகிவிட்டனர். உண்மையான அ.ம.மு.க தொண்டர்களுக்கு கட்சியில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுவருகிறது” என்றார்.
vikatan.com

கருத்துகள் இல்லை: