செவ்வாய், 4 ஜூன், 2019

கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ் - தற்காத்துக்கொள்வது எப்படி ?


தந்தி டிவி  :நிபா வைரஸால் கேரளாவில் கடந்த ஆண்டு 17 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிபா வைரஸ் என்றால் என்ன ? அந்த வைரஸ் எங்கிருந்து வந்தது ? அதன் அறிகுறிகள் என்ன ? அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி ? என்பது குறித்து செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.... முதன் முதலில் 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியாவின் ஈப்போவின் பகுதியில் உள்ள  பன்றி பண்ணையில்தான் நிபா வைரஸ் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ்  சுங்கை நிபா'  என்ற இடத்திலிருந்து  ஒருவரின் உடலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த வைரஸ்  நிபா என்று அழைக்கப்பட்டது.
இது மலேசியாவில் மட்டுமின்றி அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்களாதேசையும் சில இந்தியப் பகுதிகளையும் பாதிக்க ஆரம்பித்தது. இந்தியாவில் 2001-ம் ஆண்டு சிலிகுரியிலும் 2007-ம் ஆண்டு நாடியாவிலும் நிபா வைரஸால் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதையடுத்து நிபா வைரஸால் இந்தியாவில் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் கடந்த ஆண்டு  கேரளாவில் நிபா தனது கோரத்தாண்டவத்தை காட்டியது.
கடந்த ஆண்டில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் ஒரு செவிலியர் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
 பழந்தின்னி வௌவால்களால் மூலம் நிபா வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது.

ஆனால், நம்மைத் தாக்கும் நிபா வைரஸால் இதைப் பரப்பும் வௌவாலுக்கு எந்த ஆபத்தும் வராது.  இந்த வௌவால் கடித்த பழத்தை உண்டால் நாமும் இந்த நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோம். அதுமட்டுமின்றி நிபா வைரஸ் உள்ள  வௌவால்கள் கழிவுகள் மூலமாகவும் எச்சில் மற்றும் சிறுநீர் மூலமும் நிபா வைரஸ் பரவுகிறது. ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டால் கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி, மூளை வீக்கம், உடல் சோர்வு, சுவாசப் பிரச்சனைகள், மனக்குழப்பம் சுயநினைவில்லாமல் போதல் உள்ளிட்ட  பிரச்சனைகள் தென்படும். கடைசியாக நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்  மூளை காய்ச்சல் ஏற்பட்டு மரணிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார். நிபா வைரஸிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் விலங்குகள் மற்றும் பறவைகள் கடித்த பழங்களை உண்ணக்கூடாது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின்னர் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது முகமூடி மற்றும் கையுறை அணிய வேண்டும். பழந்தின்னி வவ்வால்கள் அதிகமுள்ள பகுதிகளில்  வசிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: