புதன், 5 ஜூன், 2019

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்?

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்?மின்னம்பலம் : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கூடங்குளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அணுமின் நிலையம் செயல்பட ஆரம்பித்தது. 1000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் அங்கு செயல்பட்டு வருகின்றன. ஆனால், அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் அணுஉலைக் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற கேள்வி தொடர்ந்து நீடித்துவந்தது.
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன்முதலாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படவுள்ளது. இதை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10ஆம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (ஜூன் 4) கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, “கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே Away From Reactor வசதியைக் கட்டுவதற்குப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேமித்துவைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் "ஆழ்நிலை கருவூலம்" (Deep Geological Repository) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில் AFR போன்ற தற்காலிக வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கும் நம்மை ஆழ்த்தும் விஷயமாகும்” என்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, “கூடங்குளத்தில் நடக்கும் இந்த விவகாரங்கள் குறித்து மாநில அரசு துளியும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உலகம் முழுவதும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைக்க தொழில்நுட்பத்தை எந்த நாடுகளும் கண்டுபிடிக்க முடியவில்லை, அதுபெரிய சவாலாக உள்ளது. இந்த நிலையில் சோதனை எலிகளாக தமிழ் மக்களை மாற்றும் இந்த விபரீதமான விஷயத்துக்கு, கூடங்குளத்தில் AFR அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும், மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிட வேண்டும் வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அதன் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகள்தான் அதிகம். அணுஉலை கழிவுகளைக் கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்று கடந்த ஆண்டே வெளிப்படையாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பூவுலகின் நண்பர்கள், “மத்திய அரசும் தமிழக அரசும் இனியும் காலந்தாழ்த்தாமல், பாதுகாப்பற்ற, பேராபத்தை விளைவிக்கும் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: