வெள்ளி, 7 ஜூன், 2019

தமிழர்களை காவியை வைத்தே கைப்பற்ற குவியும் சாமியார்கள்!

டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர  குவியும் சாமியார்கள்!மின்னம்பலம் :
அலுவலக வைஃபை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைன் காட்டியது. கொஞ்ச நேரத்தில் மெசேஜ் வந்து விழுந்தது
.“தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முறைப்படி நடந்தால் 2021 ஆம் ஆண்டு நடக்க வேண்டும். ஆனால் அதற்குள் அரசியல் அதிரடி மாற்றங்கள் ஏதேனும் நடந்தால் 2020 ஆம் ஆண்டிலேயே கூட சட்டமன்றத் தேர்தல் வரலாம். இதை ஒட்டி தமிழ்நாட்டை மையப்படுத்தி பாஜக தனது புது வியூகத்தை வகுக்கத் தொடங்கிவிட்டது. தென்னிந்தியாவில் இப்போது பாஜக காலூன்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது தமிழகத்தில்தான். தமிழகத்துக்காகவென பிரத்யேகமாக சில திட்டங்களை தீட்டி வருகிறார்கள் பாஜகவினர்.
தமிழ்நாட்டின் அடுத்த சட்டமன்றத்தில் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலராவது இடம்பெற வேண்டும் என்ற கணக்கில் ஆன்மிகத்தை மையப்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சியெடுக்கிறது பாஜக. எதிர்க்கட்சிகளெல்லாம் காவி என்றே பாஜகவை விமர்சித்துக் கொண்டிருக்க, அந்த காவியை வைத்தே தமிழகத்தில் தனது தளத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது பாஜக. அதில் முக்கியமான திட்டமாக வீடு தேடி ஆன்மீகம், நதிகளுக்கு ஆரத்தி என்ற இரு அம்சத் திட்டங்களை இப்போது வகுத்து முடித்திருக்கிறார்கள்.

நதிகளுக்கு ஆரத்தி என்றால், நதிகளை வரவேற்பது என்று பொருள். அண்மையில் காவிரி புஷ்கரம், தாமிரபரணி புஷ்கரம் என நதியை இந்து சமயத்தோடு தொடர்புபடுத்திக் கொண்டாடியதைப் போல தமிழகத்தில் இருக்கும் அத்தனை நதிகளுக்கும் ஆரத்தி விழா கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக பழனியில் இருக்கும் சண்முகா நதிக்கும், மதுரையில் வைகை நதிக்கும் ஆரத்தி விழா கொண்டாட பல்வேறு ஆன்மிக அமைப்புகளையும் திரட்டிப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். இதன் மூலம் தமிழகத்தில் இருக்கும் நதிகளையும் தூய்மைப்படுத்தலாம், அதேநேரம் நதிகளை இந்து மதத்தோடு தொடர்புபடுத்துவதன் மூலம் கட்சியையும் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கலாம் என்பதே பாஜகவின் திட்டம்.
நதிகளுக்கான ஆரத்தியை அடுத்து பாஜகவின் முக்கியமான திட்டம், வீடு தேடி ஆன்மீகம். தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு வீடாக லோக்கல் பாஜக, ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் சென்று அந்தந்த குடும்பத்தினருடன் உரையாடி குடும்பத்தில் என்னென்ன பிரச்சினைகள் என்று கேட்க வேண்டும். அதைத் தீர்த்து வைக்கும் வகையில் வட இந்தியாவில் இருந்து சக்தி பெற்ற சாமியார்களை அழைத்து வந்து ஊருக்குப் பொதுவான இடத்தில் பூஜை செய்ய வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் பின் காசி, ரிஷிகேஷ், ஹரித்துவார், அயோத்தி போன்ற இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சாமியார்களை தமிழகத்துக்கு அழைத்து வந்து ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு பூஜைகள் நடத்துவது என்பதுதான் பாஜகவின் திட்டம். இதற்காக இப்போதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கள ஊழியர்கள் தயாராகிவிட்டார்கள்.
தமிழகத்தின் ஒவ்வொரு ஊராக சென்று வட இந்திய சாமியார்களை சிறப்பு பூஜைகள் செய்ய வைத்தல் இதன் மூலம் ஆங்காங்கே இந்து ஓட்டு வங்கியை ஏற்படுத்துதல், இதன் அடுத்த கட்டமாக அந்த சாமியார்களை வீடு வீடாக சென்று பூஜை செய்ய வைத்தல் ஆகியவைதான் பாஜகவின் படிப்படியான திட்டங்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போதே இந்த திட்டத்தை தமிழகத்தில் முதற்கட்டமாக எங்கெங்கு நடத்துவது என்ற ஆய்வை பாஜகவினர் நடத்தி முடித்துவிட்டனர். 5 இடங்களில் மட்டுமே பாஜகவினர் போட்டியிட்ட நிலையில் மாநிலம் முழுதும் உள்ள பாஜக நிர்வாகிகள் அந்த ஐந்து தொகுதிகளில் மட்டுமே குவிந்து தேர்தல் வேலை பார்க்க திட்டமிட்டனர். ஆனால் அகில இந்திய பாஜக தலைமை அவ்வாறு செய்ய வேண்டாம், அப்படி செய்தால் அந்த ஐந்து தொகுதிகளில் மட்டுமே நமது கவனம் குவியும். அப்படி செய்யாமல் தமிழகம் முழுதும் அந்தந்த தொகுதி நிர்வாகிகள் அந்ததந்த தொகுதியிலேயே வேலை செய்ய வேண்டும். அங்கே அதிமுக போட்டியிட்டாலும், தேமுதிக போட்டியிட்டாலும், பாமக போட்டியிட்டாலும் பாஜக கொடியைத் தூக்கிக் கொண்டு செல்லுங்கள். கிராமங்களில் பாஜகவுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதைக் கண்டறியுங்கள் என உத்தரவிட்டது தலைமை. அதன்படியே கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும் பாஜகவினர் தாமரைக் கொடிகளைப் பிடித்துக்கொண்டு தங்கள் கட்சியை மக்களிடம் அடையாளப்படுத்தும் வேலையிலும் ஈடுபட்டனர்.
அதன் மூலம் தமிழகத்தில் பாஜகவுக்கான சாதகமான பகுதிகள் என ஒரு பட்டியல் தயார் செய்யப்பட்டு, அந்த பகுதிகளில் எல்லாம் வட இந்திய சாமியார்களை களமிறக்க இருக்கிறது பாஜக. இதை எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது. அப்படி எதிர்த்தால் கடவுள் நம்பிக்கையை எதிர்ப்பது போல் ஆகிவிடும், அது மக்களிடம் எடுபடாது என்று பெரிய கணக்குப் போட்டு வைத்திருக்கிறது பாஜக.
எனவே விரைவில் தமிழகத்தை நோக்கி பாஜகவுக்காக வட இந்திய சாமியார்கள் படையெடுக்கத் தயாராக இருக்கிறார்கள். வட இந்திய தொழிலாளர்கள் எப்படி தமிழகத்தில் கிராமம் நகரம் பாராமல் எங்கும் நுழைந்துவிட்டார்களோ அதேபோல விரைவில் தமிழகம் முழுதும் வட இந்திய சாமியார்கள் குவிய இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: