ஞாயிறு, 2 ஜூன், 2019

ஆட்சிக் கவிழ்ப்பு: அட்வான்ஸ் கொடுத்த திமுக

ஆட்சிக் கவிழ்ப்பு: அட்வான்ஸ் கொடுத்த திமுகமின்னம்பலம் : நடந்து முடிந்த சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுக ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று அரசின் மெஜாரிட்டியை மயிரிழையில் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிக இடங்களைப் பெற்ற திமுக எப்படியாவது அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது என்ற திட்டத்தைக் கையில் எடுத்தது.
இதற்காக அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் சிலர் தத்தமது பகுதிகளில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவிரித்து கொண்டிருந்ததையும் சில நாட்களுக்கு முன் திடீரென அதற்கு ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டதையும் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வந்தோம்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் பேரம் கனிந்துகொண்டிருந்த வேளையில் திமுக தலைவர் இப்படி ஸ்பீடு பிரேக் போட்டு விட்டார் இன்று மாவட்டச் செயலாளர்கள் சிலர் இன்னமும் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் நின்று வென்ற செந்தில் பாலாஜி, சபரீசனுடன் தனக்கு இருக்கும் பிரத்யேக தொடர்புகள் மூலம் சில செய்திகளை ஸ்டாலினுக்குக் கொண்டு சேர்த்துள்ளார்.

“இந்த ஆட்சியை இப்போதே கவிழ்க்காமல் விட்டால் எதிர்காலத்தில் திமுகவுக்குத் தான் நெருக்கடி அதிகமாகும். முழு பதவிக் காலமும் நீடித்தால் இன்னும் அதிக கெட்ட பெயரைச் சம்பாதிக்கும் என்று தலைவர் கருதுகிறார். ஆனால், கெட்ட பெயரைவிட கோடி கோடியாக இன்னும் அதிகம் சம்பாதித்து விடுவார்கள். அதை வைத்து சட்டமன்றப் பொதுத் தேர்தலில் இப்போது கொட்டிய பணத்தை விட இன்னும் அதி வேகமாக கரன்சி மழை பொழிவார்கள். அதை எதிர்கொள்ள இன்னும் கூடுதலாக நாம் ஆற்றலைச் செலவு செய்ய வேண்டும்.
எனவே, இப்போதே ஆட்சியைத் தவிர்ப்பதுதான் சரியானதாக இருக்கும். இந்த மொத்த பொறுப்பையும் என்னிடம் கொடுங்கள். நான் அதிமுகவிலிருந்து கணிசமான எம்.எல்.ஏ.க்களை கச்சிதமாக இங்கே கொண்டு வருகிறேன். அதற்கான ஆட்கள் என்னிடம் தயாராக இருக்கிறார்கள்” என்று சபரி வழியாக ஸ்டாலினுக்குத் தெரியப்படுத்தியுள்ளார் செந்தில் பாலாஜி.
இந்த முயற்சிக்கு கிரீன் சிக்னல் கிடைத்தவுடன் உற்சாகமான செந்தில் பாலாஜி தரப்பு, கடந்த சில நாட்களுக்குள் மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு, திமுக அணிக்கு வருவதற்காக, அட்வான்ஸாக சில கோடிகளைக் கொடுத்துவிட்டதாக ஒரு தகவல் திமுகவினரையும், அதிமுகவினரையும் கிறுகிறுக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அந்த எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுவந்த ஆபரேஷனில் ஈடுபட்டவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில அதிமுக எம்.எல்.ஏ.க்களும் செந்தில் பாலாஜியின் வலையில் விழத் தயாராக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு இதில் ஏன் இவ்வளவு ஆர்வம் என்று விசாரித்தால், ‘செபா எப்போதுமே ஒரு கணக்கோடுதான் செயல்படுவார். புதிய ஆட்சியில் பொதுப்பணித் துறைக்கு அமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காகவே இந்த ’கட்சிப் பணி’யை ஆற்றுகிறார்’ என்கிறார்கள் கரூர் வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை: