புதன், 5 ஜூன், 2019

ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 1242 MBBS இடங்களில் மண்....

Palanivel Manickam : OBC (BC+MBC) களுக்கு இனிப்பான செய்தி... ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 1242 MBBS இடங்களில் மண்..
நீட் தேர்வுக்காக அனைத்து மாநிலங்களிலும் இருந்து மத்திய தொகுப்பிற்கு பெறப்படும் 4600 எம்பிபிஎஸ் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு கிடைக்கவேண்டிய 27% சதவிகித 1242 இடங்கள் கிடைக்காதாம்.
அதே நேரத்தில், சில மாதங்கள் முன் கொண்டுவரப்பட உயர்சாதி (ஏழைகளுக்கான??) 10% சதவீத ஒதுக்கீடு இடங்கள் கொடுக்கப்படுமாம்!
அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. 
இந்தியா முழுவதும் ஏறத்தாழ 4600 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் அகில இந்தியத் தொகுப்பில் உள்ளன.
பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இந்த இடங்களில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை.
பல முறை இது குறித்த கோரிக்கைகளை முன்வைத்த பிறகும் ,மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய 1242 மருத்துவ இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கவில்லை.
இந்த 1242 மருத்துவ இடங்களிலும் அதிக அளவில் முன்னேறிய வகுப்பினரே சேர்ந்து வருகின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானது.

இந்நிலையில் முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடை நடப்பு கல்வியாண்டிலேயே வழங்கிட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ,நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
இது மேலும் இதர பிற்படுத்தப் பட்டப் பிரிவினரை மிகக் கடுமையாக பாதிக்கும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல், முன்னேறிய வகுப்பில் உள்ள ,பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடை வழங்குவது, இதர பிற்படுத்தப் பட்டோருக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும்.
-- சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்//

கருத்துகள் இல்லை: