திங்கள், 22 அக்டோபர், 2018

சபரிமலை இன்று கோயில் நடை சாத்தப்படுகிறது!

சபரிமலைvikatan.com -sathya-gopalan : இந்த மாத பூஜைக்காகத் திறக்கப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, இன்று சாத்தப்படுகிறது.
ஐப்பசி மாதம் வழிபாட்டுக்காகக் கடந்த 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு நடை திறக்கப்பட்டது முதல் இன்று வரை பம்பை - சந்நிதானம் பகுதி ஒரே பரப்பாகவே இருந்தது. 
'அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம்' என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே பதற்றத்துக்குக் காரணம். நடை திறக்கப்பட்ட முதல் நாள் லக்னோவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சுகாசினி ராஜ், பம்பையிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை ஏறினார்.

மரக்கூட்டம் பகுதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, `பக்தர்கள் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை' எனத் திரும்பிச் சென்றார். இவரைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆந்திரப் பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் கொச்சி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா ஆகிய இருவரும் சந்நிதானத்துக்கு 500 மீட்டர் வரை சென்று, போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் சபரிமலைக்கு சென்ற போதுதான், உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. அதன்பிறகு பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்களை அனுமதிக்க முடியாது, உண்மையான பக்தர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என கேரள அரசு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து பல பெண்கள் சபரிமலைக்குச் செல்வதும், அங்கு போராட்டக்காரர்களால் தடுக்கப்படுவதுமாக இருந்ததால், கோயில் திறக்கப்பட்டிருந்த இந்த ஐந்து நாளும் சபரிமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த மாதம் பூஜைகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட உள்ளது. தொடர் போராட்டங்களால் சூழப்பட்டிருந்த சபரிமலை தற்போது, சற்று அமைதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: