செவ்வாய், 23 அக்டோபர், 2018

பட்டாசுகள் தயாரிப்பு விற்பனைக்கு தடை இல்லை.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்புமாலைமலர்:  நாடு முழுவதும்
பட்டாசுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. புதுடெல்லி: தீபாவளி என்றாலே பட்டாசுக்குதான் பிரதான பங்களிப்பு உண்டு. பட்டாசு இல்லாத தீபாவளியை நினைத்து பார்க்கவே இயலாது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காற்றில் மாசு அதிகரிப்பதாக கூறி பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியில் மிகப்பெரிய அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று டெல்லியில் பட்டாசுகள் வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. கடந்த ஆண்டும் அக்டோபர் மாதம் 9-ந்தேதி டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தற்காலிக தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. பட்டாசு தயாரிப்பாளர்கள், “2 நாட்கள் மட்டுமாவது பட்டாசு விற்க அனுமதிக்க வேண்டும்" என்று விடுத்த கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.


இதனால் டெல்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை நீடித்தது.

இந்த நிலையில் காற்று மாசு நாடு முழுவதும் இருப்பதால் இந்தியா முழுவதும் பட்டாசு தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த அர்ஜுன்கோபால், ஆரவ் பண்டாரி, ஜோயோ ரா பாசீன் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பட்டாசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், காற்று மாசு காரணமாக மக்களுக்கு கடுமையான நோய்கள் ஏற்படுவதாக சுட்டி காட்டினார்.

இதை சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் மறுத்தார். அவர் வாதாடுகையில், “காற்று மாசுபடுவதற்கும் அதன் மூலம் நோய் பரவுவதற்கும் பட்டாசு தயாரிப்பாளர்கள் காரணம் அல்ல. காற்று வீசும் திசை மற்றும் அப்போதைய தட்பவெட்ப சூழ்நிலை காரணமாகவே காற்று மாசு ஏற்படுகிறது. எனவே பட்டாசை முழுமையாக தடை செய்வதற்கு பதில் அதன் விற்பனையை ஒழுங்குப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், “நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் சுகாதாரத்தையும், பட்டாசு உற்பத்தியாளர்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. எனவே இருவருக்கும் சமமான அளவில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றனர்.

நாடு முழுவதும் 25 சதவீதம் குழந்தைகள் காற்று மாசு காரணமாக சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினார்கள்.

எனவே மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் எந்த அளவுக்கு பட்டாசு சத்தம் மற்றும் மாசு ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தலாம் என்பதை பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதை ஏற்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி நிறைவு பெற்றன. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியானது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூசண் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விவரம் வருமாறு:-

நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க இயலாது. டெல்லியில் இதுவரை பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடை இன்று முதல் நீக்கப்படுகிறது.

என்றாலும் பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வர இந்த கோர்ட்டு விரும்புகிறது. அதற்கேற்ப பட்டாசு விற்பனையை ஒழுங்குப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும்.


தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையே 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம்.

குறைந்த சக்தி கொண்ட ஒலி எழுப்பும் பட்டாசுகளையே மக்கள் வெடிக்க வேண்டும்.

நாடு முழுவதும் பட்டாசு விற்பனை செய்வதற்கு உரிய லைசென்சு பெறப்பட வேண்டும். லைசென்சு பெற்றவர்கள் மட்டுமே பட்டாசுகளை கடைகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

அங்கீகாரம் இல்லாமல் மற்ற கடைக்காரர்கள் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. அப்படி யாராவது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டாசு தயாரிப்பதற்கு சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை தயாரிப்பாளர்கள் கடை பிடிக்க வேண்டும். அதிகமாக சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது.

அதுபோல அதிகமாசு ஏற்படுத்தும் பட்டாசுகளும் விற்பனை செய்யப்பட கூடாது. அதிக மாசு, அதிக சத்தம் கொண்ட பட்டாசுகள் விற்பனையானால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பட்டாசுகள் டீலர்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். ஆன்லைனில் பட்டாசு விற்பனையை ஏற்க இயலாது. எனவே ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

இந்த தீர்ப்பு மூலம் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகளவில் புதிய ரக பட்டாசுகள் வர வாய்ப்பு உள்ளது.

அதுபோல ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதற்கு கடைக்காரர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: