சனி, 27 அக்டோபர், 2018

விபத்தில் சிறுமிக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு .. மேல்முறையீடு ரூ.52 லட்சம் .. உயர் நீதிமன்றம் உத்தரவு.. இன்சுரன்ஸ் கம்பனி அதிர்ச்சி

tamilthehindu :சாலை விபத்தில் காலை இழந்த சிறுமிக்கு ரூ. 19 லட்சம் இழப்பீடு
வழங்க உத்தரவிட்ட கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்துக்கு வந்த இன்ஷுரன்ஸ் நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 52 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு திருப்பூரில் சாலையோரம் சென்று கொண்டிருந்த 2-ம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுமி மீது தனியார் பேருந்து ஏறிச் சென்றதில், அவர் தன் வலது காலை இழந்து விட்டார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்கும்படி, திருப்பூர் விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து 19 லட்ச ரூபாயை வழங்கும் உத்தரவை உத்தரவை பரிசீலிக்க கோரி ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வாகன ஓட்டுனர்கள், அஜாக்கிரதையாக, வேகமாக, பொறுப்பில்லாமல் வாகனங்களை ஓட்டுவதால் இந்தியாவில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளதாக வேதனை நீதிபதிகள் விசாரணையில் வேதனை தெரிவித்தனர்.
மேலும், காலை இழந்து வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை, 19 லட்சம் ரூபாயில் இருந்து, 52 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், அத்தொகையை வட்டியுடன் சேர்த்து நான்கு வார காலத்திற்குள் டெபாசிட் செய்ய காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், இந்த பணம், சிறுமிக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கி விடாது என வேதனை தெரிவித்தனர். அதிக வேகமாக செல்வதாலும், அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்குவதாலும் மூன்றாம் நபர் பாதிக்கப்படுவதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ரூ.19 லட்சம் இழப்பீடு என்பதையே அதிகம் என மேல் முறையீட்டிற்கு வந்த காப்பீட்டு நிறுவனத்திற்கு மும்மடங்குக்கு ஈடான தொகையை வழங்க உத்தரவிட்டு உயர் நீதிமன்றம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை: