வியாழன், 25 அக்டோபர், 2018

ஸ்டாலின் :20 தொகுதிகளுக்கும் உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும்!

20 தொகுதிகளுக்கும் உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும்!மின்னம்பலம் : திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இன்று (அக்டோபர் 25) மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டம் காலை தொடங்கியது. இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தது.
கூட்டம் முடிந்ததும் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நடந்தது பற்றி விளக்கிய ஸ்டாலினிடம், உயர் நீதிமன்றத் தீர்ப்பு பற்றி செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
“நாங்கள் இந்தத் தீர்ப்பில் எதையும் எதிர்பார்க்கவில்லை, எது பற்றியும் கவலைப்படவில்லை. ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், ஜனநாயக நெறிமுறைகள் போற்றப்பட வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை” என்று கூறிய ஸ்டாலின் தொடர்ந்து,

“இன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பொறுத்தவரையில் அதிமுகவில் உள்ள ஓர் அணிக்குச் சாதகமா, இன்னொரு அணிக்கு பாதகமா என்பதுதான் அவர்களுக்கு உள்ள பிரச்னை. இதுபற்றி திமுக கவலைப்படவில்லை.
இருந்தாலும் ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட முடியாத நிலை இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே அந்த இரு தொகுதிகள் மட்டுமல்ல, இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 18 தொகுதிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை இப்போது உள்ளது. எனவே 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.
காரணம், எப்போது தேர்தல் நடந்தாலும் மக்கள் திமுகவுக்கு ஆதரவு தரக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். திமுகவும் எப்போது வேண்டுமானாலும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறது” என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை: