புதன், 24 அக்டோபர், 2018

தகுதி நீக்கத் தீர்ப்பு.. சதாசிவத்தை வாங்கிய எடப்பாடி .. மகிழ்ச்சி ?

தகுதி நீக்கத் தீர்ப்பு: எடப்பாடிக்கு நம்பிக்கை தந்த சதாசிவம்மின்னம்பலம் : தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையில்... தினகரன், திமுக, முதல்வர் என்று மூன்று தரப்பினரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
18 பேரையும் குற்றாலத்துக்கு அனுப்பியுள்ள தினகரன், அவர்களோடு தொடர்ந்து தொடர்பில் உள்ளார். தீர்ப்பைப் பொறுத்து அடுத்த கட்டத்தை முடிவு செய்வதற்காக முக்கியமான ஆலோசனையில் இருக்கிறார்.
திமுகவைப் பொறுத்தவரையில் இந்தத் தீர்ப்பினை அடுத்து சட்டமன்றத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் கூட வரலாம் என்பது வரை கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில நாட்களாகவே இது தொடர்பாக பலரிடமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
அந்த வகையில் கடந்த 20ஆம் தேதி சேலத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்று சேலத்துக்கு வருகை தந்த கேரளா ஆளுநர் சதாசிவத்தை வரவேற்றார். பின் இருவரும் கொஞ்ச நேரம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது இந்தத் தீர்ப்பு விவகாரம் பற்றி முதல்வர் கேட்க, “என்னோட அனுபவத்துல சொல்றேன்... இந்த வழக்குல உங்க ஆட்சிக்குப் பாதிப்பா எந்தத் தீர்ப்பும் வராதுன்னு எனக்குத் தோணுது. அதனால கவலைப்படாம இருங்க. அநேகமாக வர்ற நாடாளுமன்றத் தேர்தலோட இந்தத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கும் தேர்தல் வரலாம். அதை எதிர்கொள்ளத் தயாரா இருங்க” என்று சதாசிவம் கூற, இதைக் கேட்டு மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறாராம் முதல்வர்.
ஏற்கெனவே முதல்வரைச் சந்தித்த சதாசிவத்தின் மகனும்கூட இதே மாதிரியே சில விஷயங்களைச் சொல்லியிருந்ததால், நம்பிக்கையோடுதான் இருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் ஆளும்தரப்பு வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை: