சனி, 27 அக்டோபர், 2018

ரஜினியை சமாதானம் செய்ய முயன்ற சபரீசன்?

ரஜினியை சமாதானம் செய்ய முயன்ற சபரீசன்
minnambalam :ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்காத நிலையிலேயே, அவரைக் குறிவைத்து விமர்சன ராக்கெட்டுகளை ஏவ ஆரம்பித்துள்ளது திமுக. நேற்று (அக்டோபர் 26) வெளிவந்த திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலியில், சிலந்தி என்ற புனைப்பெயரில் ரஜினியைத் தாக்கி எழுதப்பட்ட விஷயம்தான் நேற்று இரவு தொலைக்காட்சி விவாதங்கள் வரை முக்கியப் பங்கு வகித்தன.
இந்நிலையில் முரசொலியில் வந்த ரஜினியைப் பற்றிய இந்த விமர்சனம் கட்சியின் தலைவர் ஸ்டாலினை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், இதனால் ஸ்டாலின் சார்பில் நேற்று ஒரு தூதர் ரஜினியிடம் பேச முயன்றார் என்ற தகவல்தான் அரசியல் அரங்கில் அடுத்த கட்ட பரபரப்பை தோற்றுவிக்கப் போகிறது.

தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், இது திமுகவை பாதிக்கும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது. இதற்கிடையே திமுக தலைமை, கட்சி மேடைகளில் ரஜினியை விமர்சிக்குமாறு நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து திமுக மேடைகளில் கமலை விட ரஜினி கடுமையாகத் தாக்கப்பட்டு வருகிறார்.
இதற்கு வலு சேர்க்கும் வகையில்தான், முரசொலியில், ‘ ஹூ ஈஸ் தி பிளாக் ஷூப் மே.... மே.... மே....’ எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையில், ரஜினி அறிக்கையின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்டு அதற்கு அப்பாவி ரசிகன் பதில் சொல்வது போல விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

இதைப் படித்து ரஜினி ரொம்பவே கோபமாகியிருக்கிறார். ‘நான் ஆக்கபூர்வமான அரசியல் செய்யணும்னு முடிவோடு இருக்கேன். யாரையும் திட்டுவதோ விமர்சனம் செய்வதோ என் பாலிசி கிடையாது. சமீபத்துல கூட கலைஞர் உருவப் படம் திறக்கும் நிகழ்ச்சியில நான் கலந்துக்கிட்டுப் பேசினேன். ஆனா திமுக ஏன் என்னைச் சீண்டுது?’ என்று நேற்று காலை தனக்கு நெருக்கமான திமுக பிரமுகர்கள் சிலரிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் ரஜினி.
இந்தத் தகவல் ஸ்டாலினுக்குப் போயிருக்கிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் ரஜினியின் வீட்டுக்கு ஒரு போன் வந்திருக்கிறது. போனை எடுத்தவரிடம், ‘நான் சபரீசன் பேசுறேன். சார் இருக்காங்களா?’ என்று கேட்டிருக்கிறார். ஆனால் , ‘சார் வீட்டில் இல்லை’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்களாம்
ரஜினிக்கு போன் செய்தது ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் தான். ஆனால் ரஜினி இந்த சமாதானத்தை விரும்பாத நிலையில்தான் அவரது அழைப்புக்கு ரஜினி செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: