வியாழன், 25 அக்டோபர், 2018

ஓட்டை மாற்றிப் போட்ட ஓபிஎஸ் எம்எல்ஏ; நாங்கள் கிடையாதா?- தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்

tamilthehindu :ஓட்டை மாற்றிப் போட்ட ஓபிஎஸ் இன்று எம்எல்ஏ. மாற்றாத நாங்கள் (18 பேர்) எம்எல்ஏ கிடையாதா என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரும், அமமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ''தீர்ப்பின் முழு விவரம் எனக்குத் தெரியவில்லை. சாராம்சத்தைத் தெரிந்துகொண்டு எனது கருத்தைச் சொல்கிறேன். 18 சட்டப் பேரவை உறுப்பினர்களும் எந்தத் தவறையும் செய்யவில்லை. ஓட்டை மாற்றிப் போடவில்லை. கொறடாவின் உத்தரவை மீறவில்லை.
ஆளுநரைச் சந்தித்து, முதல்வரை மாற்றவேண்டும் என்று மனு கொடுத்தது தவறாம். இதுகுறித்த வழக்கில் ஒவ்வொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பை அளித்திருக்கிறார்கள். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. சிரிப்பதா இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை.
நீதித்துறையும் பத்திரிகைத் துறையும் நேர்மையாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அது மக்களின் எண்ணம். அது எப்படி இருக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை.

ஓட்டை மாற்றிப் போட்ட ஓபிஎஸ் இன்று எம்எல்ஏ. ஓட்டை மாற்றாத நாங்கள் (18 பேர்) எம்எல்ஏ இல்லையா? தேர்தலா, மேல்முறையீடா என்பதை பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளரைச் சந்தித்த பின் முடிவு செய்வோம். மக்கள் மன்றத்தில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்'' என்றார் தங்க தமிழ்ச்செல்வன்

கருத்துகள் இல்லை: