ஞாயிறு, 7 அக்டோபர், 2018

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி - தீர்ப்புக்கு எதிராக சென்னை, டெல்லி, பெங்களூருவில் பக்தர்கள் போராட்டம்

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி - தீர்ப்புக்கு எதிராக சென்னை, டெல்லி, பெங்களூருவில் பக்தர்கள் போராட்டம்மாலைமலர் : சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரளான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் சென்னை, பெங்களூருவிலும் போராட்டம் நடைபெற்றது. புதுடெல்லி : சபரிமலைக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கிடையே, இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது. நாடு முழுவதும் பெரும்பாலானவர்கள் இந்த தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆங்காங்கே சிலர் தீர்ப்புக்கு எதிராக தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ’ஐய்யப்ப நம ஜப யாத்ரா’ எனும் ஐய்யப்ப பக்தர்கள் அமைப்பு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தீர்ப்புக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளை நிற சேலை அணிந்த திரளான பெண்கள் தீர்ப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.


இதைப்போன்று, பெங்களூருவிலும் பெரும்பாலான மக்கள் ‘சபரிமலையை காப்பாற்றுங்கள்’ எனும் பதாகைகளை ஏந்தி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை நுங்கம்பாக்கம் - மகாபலிபுரம் சாலையிலும் தீர்ப்புக்கு எதிராக பெரும்பாலானவர்கள் கையில் தீபங்களுடன் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது

கருத்துகள் இல்லை: