செவ்வாய், 9 அக்டோபர், 2018

ஓட்டுனர் விஜயகுமார் .. பிரேக் இல்லை ஷட்டர் இல்லை .. பேசியது குற்றமா? பழிவாங்க படுகிறார்

பராமரிப்பு இல்லை புலம்பும் விஜயகுமார் tamil.oneindia.com - emavandhana.:சென்னை: அப்படி என்ன கேட்டுவிட்டார் விஜயகுமார், "பிரேக் இல்லை... ஷட்டர் இல்லை... பஸ்ஸுக்குள்ள ஒழுகுது.. தொப்பலா நனையறேன்.. ஓட்டவே முடியல" என்ற ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்! இதுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார் டிரைவர் விஜயகுமார்!
கனமழை ஜோ..வென பெய்கிறது... அதில் நின்றபடி பேசுகிறார் விஜயகுமார், "நான் பழனி கிளை அரசு பஸ் டிரைவர் விஜயகுமார். திருச்சி ரோடுதான் எனக்கு பஸ் ரூட். காலைல 7 மணிக்கு திருச்சியிலிருந்து பழனிக்கு பஸ் ஓட்டிட்டு வந்தேன். மழையில் நனைஞ்சுட்டுதான் வண்டி ஓட்டினேன். என் பக்கத்தில ஷட்டர் இல்லை.
 இதனால் தொப்பலா நனைஞ்சுபோய் 4 மணி நேரமாக பஸ் ஓட்டிட்டு வர்றேன். எனக்கு காய்ச்சல் வந்து படுத்துக்கிட்டா யார் பொறுப்பு? இப்படிப்பட்ட பராமரிப்பு இல்லாத பஸ்களைதான் ஓட்ட தர்றாங்க. பிரேக் பிடிப்பதில்லை, ஷட்டர் இல்லை, பஸ் முழுசும் ஒழுகுது... இப்படி பஸ்ஸை கொடுத்து ஓட்டச்சொல்றாங்க. ஆனாலும் வண்டியை நிறுத்தவே இல்லை. எல்லாரையும் இப்பக்கூட பத்திரமா இறக்கிவிட்டுட்டுதான் நிக்கறேன்." என்று மழை வேகத்தை விட அதிகமாகவே கொட்டி தீர்த்தார் விஜயகுமார்!!
;
இந்த வாட்ஸ் அப் வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து ஆத்திரமடைந்த அதிகாரிகள் டிரைவர் விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்து விட்டார்கள். விஜயகுமார் இப்படி பேசியதில் தவறு இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. பொதுவாகவே அரசு பஸ்கள் போதிய பராமரிப்புகள் செய்யப்படுவதில்லை.


துணிச்சலுக்கு பாராட்டு

பயணிகளின் பாதுகாப்பு

துணிச்சலுக்கு பாராட்டு

மேற்கூரைகள் பிய்ந்து தொங்குவதும், சில சமயம் பிச்சிக்கிட்டு பறக்கிறதும், மேற்கூரை ஓட்டைக்குள் மழை தண்ணீர் ஊத்துவதும் மக்கள் அனுபவித்த ஒன்றுதான். இதனைதான் விஜயகுமார் கேட்டிருக்கிறார். வெறும் ஊதிய உயர்வு, ஸ்டிரைக் என்று முழக்கமிடும் போக்குவரத்து ஊழியர்களிடையே தனித்து தெரிகிறார் விஜயகுமார். முதலில் இந்த துணிச்சலுக்கே அவரை பாராட்ட வேண்டும்.



பயணிகளின் பாதுகாப்பு

விஜயகுமார் கேட்டது சம்பளமோ, ஊதிய உயர்வோ, பரிசோ, வெகுமதியோ, லஞ்சமோ அல்ல. தரமான பஸ்... பயணிகளுக்கு பாதுகாப்பான பஸ்... இதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? தரமற்ற பஸ்களால் விபத்துகள் ஏற்பட்டு வருவதை மறுக்க முடியுமா? எனவே பயணிகளின் நுகர்வோர் உரிமை மட்டுமல்ல விலைமதிப்பில்லாத உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் தற்போதைய யதார்த்த நிலைமை.



தவறுதான் என்ன?

விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் என்ன அர்த்தம்? என்று புரியவில்லை. ஒருவேளை அனைத்து பஸ்களும் தமிழகத்தில் தரமானதாகத்தான் உள்ளதா? அல்லது ஒரு அரசு ஊழியர் தன் ஆதங்கத்தை வெளிப்படையாக சொல்லக்கூடாதா? இந்த சஸ்பெண்ட்டை எப்படி எடுத்து கொள்வது என தெரியவில்லை. இருந்தாலும், விஜயகுமார் நியாயத்தையும் உண்மையையும் பேசியதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அவரை எப்படி சஸ்பெண்ட் செய்யலாம் என போர்க்கொடியும் தூக்கியுள்ளன.



புலம்பும் விஜயகுமார்

அதுவும் இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே முதல்முறையாக வீடியோவில் விஜயகுமார் குறைகளை அடுக்கவில்லை. பலமுறை இதுதொடர்பாக புகார் கொடுத்தும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்கிறார். இப்படி நிர்வாகம் கண்டுக்கவில்லை என்பதை அருகில் இருப்பவரிடம் புலம்பும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.



கருத்துகள் இல்லை: