வியாழன், 5 அக்டோபர், 2017

மதவெறி வீழ்த்தி நல்லிணக்கம் காக்கும் படை - தமிழக மக்கள் ஒற்றுமை மேடை

நக்கீரன் : மக்களை வேறுபடுத்தி பிரிக்கும் மதவெறியை வீழ்த்தவும், வேற்றுமையில் ஒற் றுமை வளர்க்கும் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கவும் களமிறங்கிச் செயல்படுவதற்காக ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ உதயமானது.
<">மதவெறியை வீழ்த்தி, நல்லிணக் கத்தை உயர்த்திப் பிடிக்கும் படையாக இது பரிணமிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.ஆர்எஸ்எஸ்-பாஜக பின்புலத்தோடு இந்தியாவின் பன்முகப் பண்பாட்டைச் சீர்குலைக்கவும், மக்களை மதவாத அடிப்படையில் பிரித்தாளவும் பல்வேறு முயற்சிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. மாற்றுக் கருத்துகளையும் மக்கள் நல்லிணக்கச் சிந்தனைகளையும் பரப்புகிறவர்கள் மீது கொலை உள்ளிட்ட வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் இது பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.இந்தச் சூழலில் பல்வேறு துறைகளையும் தளங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்த இயக்கமாக ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ உருவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘சென்னை மக்கள் மேடை’ அமைப்பும் தொடங்கப்பட்டது.


<">இந்த விழாவில் சிஐடியு தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ, சவுந்தரராசன் உரையாற்றுகையில்,<">“மக்களிடையே வினையாற்றும் விரிந்த மேடையாய் இதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இதில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் இருக்கிறது,” என்றார். மதவெறியால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவது தொழிலாளர் வாழ்க்கைதான். தமிழகத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 40 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இப்படி தங்கள் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்தில் வேலைக்குச் சென்றவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களைப் பாதுகாப்பதற்கு என்று ஒரு சட்டமும் இல்லை. மற்ற நாடுகளில் வேலைக்குச் சென்றவர்கள், இப்போது அந்த வேலைகளை இழந்து நாடு திரும்புகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் தொழிலாளர் ஊதியம் அதிகரிக்கவில்லை. இங்கிலாந்தில் ஊதியத்தின் உண்மை மதிப்பு உயரவில்லை. அமெரிக்க இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், அவர்கள் முதலாளித்துவத்தால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது, முதலாளித்துவம் தொடரக்கூடாது என்றும் சோசலிசமே மாற்று என்றும் கருத்துக் கூறியிருக்கிறார்கள். சோசலிசத்தை எப்படி அடைவது என்பதில் மாறுபட்ட அணுகுமுறை இருக்கலாம், ஆனால் முதலாளித்துவம் தீர்வல்ல என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

ஏமாற்றத்துக்கு உள்ளாகும் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு எழுவதைத் தடுக்க, பல நாடுகளிலும் பல மாறுபட்ட வழிகள் கையாளப்படுகின்றன. இந்தியாவில் வகுப்புவாதம் பயன் படுத்தப்படுகிறது. பொய்களால் ஆட்சியைப் பிடித்தவர்கள் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் தோல்வியடைந்திருக்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகிறார்கள். 2019 தேர்தலில் மோடி பெயரைச் சொல்லி மட்டுமே வாக்குகளைப் பெற்றுவிட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தங்களோடு இணைந்துள்ள தொழிலாளியும் விவசாயியும் போராடுவதை பாஜக சங்கங்களால் தடுக்க முடியவில்லை என்று கூறிய சவுந்தரராசன், “பிற்போக்குத்தனங்களை வெட்டிச் சாய்க்கவும், மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கவும் இந்த மேடை இனி உருவாக்க வேண்டியது ஒரு படை” என்றார்.

கறுப்பு பழுப்பு  ;எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பேசுகையில் ஒரு வெளிநாட்டுச் சிறுகதையைச் சொன்னார்.
ஒரு நாட்டின் மன்னனுக்கு ஏனோ கறுப்புப் பூனைகளைப் பிடிக்காமல் போய்விடுகிறது. குடிமக்கள் தங்களிடம் உள்ளதைக் கொன்றுவிட ஆணையிடுகிறான் ஒரு மன்னன். எல்லோரும் அப்படியே செய்கிறார்கள். பின்னர் கறுப்பு நாய்களைக் கொல்ல ஆணையிடுகிறான். நாய் வளர்ப்போர் அதிகம் என்பதால், இந்த ஆணையால் மக்கள் சங்கடப்படுகிறார்கள். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தங்களிடம் கறுப்பு நாய் இருந்தாலும் அது பழுப்பு நாய்தான் என்று சான்று அட்டை பெறுகிறார்கள் மக்கள்.

பின்னர் மன்னன் பழுப்பு நாய்களையும் கொல்ல ஆணையிடுகிறான். ஏன் இப்படியெல்லாம் மன்னன் செய்கிறான் என்று சிலர் கேட்கிறார்கள். முதலில் கறுப்புப் பூனைகளைக் கொல்ல ஆணையிட்டபோதே இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்ற பதில் வருகிறது. இந்தியாவின் இன்றைய நடப்புகள் இந்தக் கதை போலவே இருக்கின்றன,” என்றார் அவர்.“இன்று போல் முன்னெப்போதுமே மதவெறி கிளப்பப்பட்டதில்லை. படித்த - நடுத்தர வர்க்க மக்களைக் குறிவைத்தே மதவெறி பரப்பப்படுகிறது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்களிடம் ஒரு வலிமையான ஆயுதம் இருக்கிறது. அ

அதுதான் ‘சொல்’. அந்த ஆயுதத்தோடு உண்மையின் பக்கம் நிற்பவர்கள் மீது ஆதிக்கவாதிகளுக்குக் கோபம் வருகிறது,” என்றார். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்புவதிலும் பகையுணர்வை வளர்ப்பதிலும் அரசாங்கமே ஈடுபடுகிறது. இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இந்த உணவை உண்ணக்கூடாது என்று கட்டளையிடும் அரசை எந்த நாடும் சகித்துக் கொள்ளாது. இந்தியா சகித்துக்கொள்கிறது. மக்கள் ஒன்றுபட வேண்டும், எதிர்க்க வேண்டும், ஓரணியாய்ப் போராட வேண்டும் என்று கூறிய அவர், “எல்லாக் கல்வி நிலையங்களிலும் இந்த மேடை உருவாக்கப்பட வேண்டும்,” என்றார்.

மறுக்கும் உரிமைஇசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, “கர்நாடக இசை எல்லோரிடமும் போக வேண்டும். ஆனால் எல்லோருக்கும் அதுதான் பிடிக்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன். இது எனக்குப் பிடிக்கவில்லை என்று மறுக்கிற உரிமை குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்,” என்றார். கர்நாடக சங்கீதம் மட்டுமே இந்திய இசை என்பது பெரிய வன்முறை. மிகப் பரந்த இந்தியக் கலைகளில் கர்நாடக இசை ஒரு சிறிய புள்ளி, அவ்வளவுதான்.

கர்நாடக சங்கீதத்தைத் தமிழிலும் பாடத்தொடங்கியபோது, அது பற்றி பெரியாரின் கருத்தைக் கேட்டார்கள். தெலுங்கு அல்லது சமஸ்கிருதத்தில் பாடிய பக்திப்பாடல்களை இப்போது தமிழிலும் பாடுகிறீர்கள், அதிலே என்ன வேறுபாடு இருக்கிறது என்று திருப்பிக் கேட்டார் அவர். மக்களுக்குப் புரியும் மொழியில் அவர்களுக்குத் தேவையானது சென்றடைய வேண்டும் என்பதே முக்கியம். கர்நாடக சங்கீதம் பற்றிப் பேசப்படுகிறது என்றால் பறை பற்றியும் பேசப்பட வேண்டும்.
கர்நாடக சங்கீதம் பாடப்படும் மியூசிக் அகடமியில் கானா பாடலும் ஒலிக்க வேண்டும். அதுதான் இந்தியக் கலாச்சாரம். என்றார் அவர்.இந்தியக் கலாச்சாரத்துக்கு இரண்டாயிரம் வருடப் பெருமை இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளட்டும். ஆனால், இந்தியா 1947ல் உருவான ஒரு புதிய நாடு என்பதுதான் வரலாறு. அதன் ஒரே விதி அரசமைப்பு சாசனம் மட்டுமே. இது பற்றிய சிந்தனை இல்லாதவர்களிடமும் பேசுகிறவர்களாக இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்றும் கிருஷ்ணா கூறினார்.

ஒரே வழி“நீண்ட காலமாக ஒரே ஒருவர் பேசுவதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சியில், மேடையில், மன்கி பாத் நிகழ்ச்சியில், கைப்பேசி ‘ஆப்ஸ்’ வடிவில் என அவருடைய பேச்சுதான். பிரதமர் பேசுகிறார் என்றால் இப்போதெல்லாம் ஒரு பதற்றம் தொற்றிக்கொள்கிறது,” என்று தனது உரையைத் தொடங்கினார் ‘ஃபிரண்ட்லைன்’ பத்திரிகை ஆசிரியர் விஜயசங்கர்.அதிகார வர்க்கம் காவிமயமாக்கப்பட்டிருக்கிறது. கடவுளையே தட்டிக்கேட்கிற நக்கீரப் பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள், அனுசரித்துப் போக விரும்புகிற தருமிப் பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள்.

சகோதரத்துவத்தைப் பிரிக்க சிலர் வந்திருக்கிறார்கள் என்பதால், சகோதரத்துவத்தைக் காக்க, சகோதரர்களே என்று விளித்துப் பேசுவது அவசியமாகியிருக்கிறது என்றார் அவர்.மதத்திற்கு இன்னும் ஏதோவொரு தேவை இருக்கிறது. ஆகவேதான் கார்ல் மார்க்ஸ், மதம் நொறுங்கிய மனங்களுக்கு ஆறுதல் என்றார். பிரச்சனையை அது தீர்ப்பதில்லை, ஆனால் வலி மறக்கச் செய்கிற அபினாக இருக்கிறது. ஆகவே அறிவியல் பார்வையை வளர்ப்பது தேவைப்படுகிறது. கல்புர்கி, கவுரி லங்கேஷ் கொலைகளில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் ஒரே மாதிரி இருப்பதாக தடயவியலாளர்கள் கூறுகிறார்கள்.

ஒரே மாதிரியான என்பதில் ஒரு அரசியல் தத்துவம் இருக்கிறது. மக்களைப் பிரிப்பதன்றி அவர்களுக்கு வேறு வழியில்லை, ஒன்று சேர்வதன்றி நமக்கு வேறு வழியில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.கலை நிகழ்வுகள்முன்னதாக கரிசல் குயில் கிருஷ்ணசாமி, கரிசல் குயில் கருணாநிதி ஆகியோர் மதவெறிக்கு எதிரான, மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல்களைப் பாடினர்.

மையம்’ குழுவினரின் தப்பாட்டம் அரங்கத்தை அதிரவைத்தது. தற்போதைய அரசியல் நிலைமைகளுக்குப் பொருத்தமாகப் புதுப்பிக்கப்பட்டு, பிரளயன் இயக்கத்தில் சென்னை கலைக்குழுவினர் வழங்கிய ‘இடம்’ நாடகம், இந்த மேடை புறப்பாட்டிற்கான முன்னறிவிப்பு போல, நாட்டின் பன்முகப் பண்பாட்டுப் பாதுகாப்பைக் கலை வடிவில் வலியுறுத்தியது.ராஜா அண்ணாமலை மன்றம் நிரம்பி வழிய நடைபெற்ற இந்த விழாவில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் பிரிவாக ‘சென்னை மக்கள் மேடை’ அமைப்பும் தொடங்கப்பட்டது. கவிஞர் இரா.தெ. முத்து நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். எம். ராமகிருஷ்ணன் வரவேற்க, ஜி. செல்வா நன்றியுரைத்தார்.

உழைப்பாளிகள், நேர்மையாளர்களுக்கு மதவெறி கொள்ள நேரமில்லை: கோபால்கிருஷ்ண காந்தி
வறுமை, வேலையின்மை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் அப்பட்டமாகத் தோல்வியடைந்துவிட்டதால் மதஅடிப் படைவாதத்தைக் கிளப்பி மக்களின் ஆவேசத்தைத் திசை திருப்புகிற முயற்சி முறியடிக்கப்பட வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்தார்.தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, அதன் ஒரு பிரிவான சென்னை மக்கள் மேடை தொடக்கவிழா செவ்வாயன்று (அக்.3) சென்னையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்புரையாற்றிய காந்தியின் பேரன் கோபால் கிருஷ்ண காந்தி, “இந்திய மக்கள் பரம ஏழைகள். கடும்உழைப்பாளிகள். நேர்மையானவர்கள். அவர்களின் வறுமையைப் பயன்படுத்திப் பணத்தாலோ வன்முறையாலோ அடிப்பது மகா பாவம். ஏழைகளுக்கு வன்முறை பற்றிய பயம் இருக்கிறது. வன்முறையையும் பண பலத்தையும் முறியடித் தாக வேண்டும்.” என்றார்.

ஏழைகள் எப்போது பார்த்தாலும் பயத்திலேயே இருந்துவிடமாட்டார்கள். இந்திய மக்களை முட்டாள்களாக நினைத்து ஒற்றுமையைச் சீர்குலைக்க நினைப்பவர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உழைப்பாளிகளாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அறிவார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மதவெறியோடு இருப்பதற்கு நேரமுமில்லை, தேவையுமில்லை, காரணமுமில்லை. அவர்கள் தன்னியல்பிலேயே மதச்சார்பற்றவர்கள் என்றார் அவர்.;

;ஆணுக்கு முன்னால் நிற்பவர்கள் பெண்கள். இந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பவர்கள் பெண்கள். வறுமையை ஒழிக்க ஒரே வழி ஒற்றுமைதான் என்று கூறிய அவர், “மத அடிப்படைவாதிகள் எல்லாச் சமயங்களிலும் இருக்கிறார்கள். வறுமை உள்ளிட்ட பிரச்சனைகளோடு இருக்கும் மக்களை மதவெறியின் பக்கம் தள்ள முயல்கிறவர்கள் அவர்கள். அந்த அடிப் படைவாதிகள் மேலோட்டமாக ஒருவர்க்கொருவர் எதிரிகள் போலத் தெரியும். உண்மையில் அவர்கள், மக்களைப் பிரித்துவைப்பதில் நண்பர்கள்தான். நாம் பயங்கரவாதத்தை, மத அடிப்படைவாதத்தை, மக்கள் மத அடிப்படையில் பிரிக்கப்படுவதை எதிர்த்து ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்,” என்றார்.

;சித்தி - கத்தி: அருணன்  விழாவுக்குத் தலைமை தாங்கிய, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் அருணன், “நாம் எல்லோருமே காந்தியின் பேரர்கள்தான். காந்தியை கோட்ஸே சுட்டுக்கொன்றது ஏன்?
காந்தியின் குற்றம் மக்கள் ஒற்றுமைக்காக, அதுவும் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்ததுதான். இன்று காந்தியின் பேரர்களும் இருக்கிறோம். கோட்ஸேயின் பேரர்களும் இருக்கிறார்கள். அவர்களை வீழ்த்த ஒரே வழி மக்கள் ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்பதே,” என்றார்.புண்ணிய பாரதத்தில் உணவு விவகாரத்தில் 30 பேர் கொலை செய்யப் பட்டார்கள். இப்படியெல்லாம் நடக்குமென்று யாரேனும் நினைத்ததுண்டா? இதைச் சாப்பிடு, இதைச் சாப்பிடாதே என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை. நாட்டின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதுதான் இந்திய அரசமைப்பு சாசனம் என்றார் அவர்.

ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக் கும் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், தமிழகத்தின் உண்மை வரலாற்றுக் கான தடயங்கள் கீழடியில் கிடைத்தபோது, அந்த ஆராய்ச்சியை பலப்படுத்துவதற்கு மாறாக, மண்ணள்ளிப் போட மத்திய அரசு முயல்கிறது. தாஜ்மகால் இந்துக் கலாச்சாரப்படி கட்டப்பட்டதல்ல என்று கூறி அதை சுற்றுலாத் தலப் பட்டியலிலிருந்து நீக்குகிறது உ.பி. மாநில பாஜக அரசு. அப்படியானால், தில்லி செங்கோட்டை கூட இந்துக் கலாச் சாரப்படி கட்டப்பட்டதில்லை, அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் செங்கோட் டையில் கொடியேற்றி உரையாற்ற மாட்டேன் என்பாரா பிரதமர்?
நாடாளுமன்றம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்துவர்களால் கட்டப்பட்டது என்பதால், பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இனி நுழையாமல் இருப்பார் களா என்றும் அவர் கேட்டார்.அரச மரத்துப் பிள்ளையார் வேறு, ஆர்எஸ்எஸ் பிள்ளையார் வேறு. அரசமரத்துக்குக் கீழே அமர்ந்துள்ள பிள்ளையார் சித்தி விநாயகர். ஆர்எஸ்எஸ் பிடியில் இருப்பவர் கத்தி விநாயகர். அரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயிலே மண்ணு என்று சொன்ன பாரம் பரியம் உள்ள தமிழ் மண்ணில் மக்கள் ஒற்றுமையை இந்த மேடை உயர்த்திப் பிடிக்கும் என்று அருணன் கூறினார்.

மேடையின் நோக்கம்:  க.உதயகுமா

மற்றொரு ஒருங்கிணைப்பாளரான க. உதயகுமார், மேடை உருவாக்கப்படுவதன் நோக்கத்தைப் பற்றிக் கூறினார். ‘‘ஜனநாயக மரபுகள் ஒழிக்கப்படுகின்றன. கூட்டாட்சிக் கோட்பாடு தகர்க்கப்படுகிறது. நாட்டின் இயல்பான பன்முகத்தன்மை சீர்குலைக்கப் பட்டு, ஒற்றைத் தன்மை புகுத்தப்படுகிறது. ஜனநாயகம் - மதச்சார்பின்மை - சோஷலிசம் என்ற அரசமைப்பு சாசனத்தின் லட்சியங்களை ஒழிக்கத் துடிக்கும் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டும்’’ என்றார் அவர்.

மதவெறி சக்திகளின் கையிலிருந்து தேசத்தை மீட்பதற்கு மக்களிடையே கருத்துகளைச் சொல்வதும், மதவெறி நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதுணையாக இருப்பதும், அனைத்து வழிகளிலும் ஒருமைப்பாட்டு உணர்வை முன்னெடுத்துச் செல்வதும் ஒற்றுமை மேடையின் மையமான நோக்கங்கள் என்று குறிப்பிட்ட உதயகுமார், கலை உலகம், ஊடகம், தொழில் என பல்வேறு துறையினரும் இணைந்துள்ள அரசியல் சார்பற்ற இந்த அமைப்பின் நோக்கம் நிறைவேற அனைத்துத் தரப்பினரும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், செயல்பாட்டுக் குழு, பொதுக்குழுவை முறைப்படி அறிவித்தார் மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத்

கருத்துகள் இல்லை: