புதன், 4 அக்டோபர், 2017

டோல்கேட் கொள்ளை: போராட அழைக்கும் பாலபாரதி

மின்னம்பலம் : தமிழகத்தில் உள்ள டோல்கேட்களில் முறையில்லாமல் வழிப்பறி செய்வதுபோல் கொள்ளையடிக்கும் கும்பலைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும் என்று அழைக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ,வும், சி.பி.ஐ.எம். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான பாலபாரதி.

டோல்கேட் கொள்ளை: போராட அழைக்கும் பாலபாரதிகடந்த,அக்டோபர் 2ந் தேதி, தோழர் பாலபாரதி, கட்சிப் பணியாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து, தர்மபுரி வரும்போது காலை 10.00 மணியளவில் வெள்ளக்கல் தொப்பூர் டோல்கேட்டில் அவரது வாகனத்தை நிறுத்தியிருக்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. என்பதற்கானஅடையாள அட்டையை காண்பித்தும் விடாமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர் டோல்கேட் ஊழியர்கள்.
வாக்குவாதத்துக்குப் பிறகும் முக்கால் மணி நேரம் பாலபாரதியைக் காக்க வைத்ததால், அவர் சட்டென சாலையில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்.
உடனே இந்தத் தகவல் தர்மபுரி மாவட்டத் தோழர்களுக்குத் தெரியவர... அவர்களும் பாலபாரதிக்கு ஆதரவாக ஒன்று திரள ஆரம்பித்தனர்.
தகவல் அறிந்த மாவட்ட காவல் துறை, டோல்கேட் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டுஎச்சரித்து முன்னாள் எம்.எல்.ஏ, வாகனத்தை உடனே விடச்சொல்லியுள்ளார்கள்.
நாம் தோழர் பாலபாரதி அவர்களைத் தொடர்புகொண்டு மின்னம்பலம் சார்பாகப் பேசினோம்.

’’எனக்கு மட்டும் அல்ல, அரசு ஊழியர்களும் , காவல்துறையினரும் காரில் செல்லும்போது அடையாள அட்டையை காண்பித்தாலும், உள்ளே இருக்கிறாரா, கொஞ்சம் முகத்தை காட்டச்சொல்லுங்கள் என்றுகேவலப்படுத்துகிறார்கள். பத்திரிகையாளர்களும் அன்றாடம் வரி செலுத்திட்டுதான் போகவேண்டியிருக்கிறது. டோல்கேட் அடாவடியால் பாதிக்கப்படுபவர்களுக்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
டோல்கேட்கள் மாநில அரசின்கட்டுப்பாட்டிலே இல்லை. வசூல்செய்வதற்கு காலக்கெடு நிர்ணயம் செய்யவில்லை, கொள்ளையடிக்கும் ஆர்வத்தை சாலை மேம்பாட்டில் காட்டுவதில்லை. டோல்கேட்டில் நிரந்தரமான தொழிலாளியில்லை, கட்டணம் வசூலிப்பதில் ஒழுங்குமுறையில்லை, கொள்ளையோ கொள்ளையடிக்கிறார்கள்,ஆட்சியாளர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துவருகிறார்கள்.
டோல் என்ற போர்வையில் குண்டர்களைவைத்து வழிப்பறிசெய்வதுபோல் இஷ்டம்போல் கொள்ளையடிப்பதும், நியாயத்தைக் கேட்பவர்களை தாக்கி அச்சுறுத்துவதுமாகச் செயல்படுகிறார்கள். உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் ஒரு வாரபத்திரிகை நிருபர் கடுமையாக தாக்கப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து டோல்கேட்களிலும் அராஜகம்தான்.
35 முதல் 50 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு டோல்கேட்போட்டுத் தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தில் கொள்ளையோ கொள்ளையடிக்கிறார்களே...இவர்களுக்கு காலக்கெடு இல்லையா, இந்த அராஜங்களை மாநில அரசு கேட்பதில்லையே ஏன்?
ஆண்டுக்கு சுமார் 2 ½ கோடி வாகனங்களுக்குத் தமிழக டோல்கேட்களில் சுமார் 200 கோடி அளவில் வசூல் செய்கிறார்கள்.
நான் கேட்கிறேன் டோல்கேட் எதற்கு? புதிய வாகனத்தை ஆர்.டி.ஓ, அலுவலகத்தில் பதிவு செய்யும்போது டூ வீலருக்கு 8% சதவீதம் சாலை வரி செலுத்தவேண்டும், கார் பதிவுசெய்தால் 10 லட்சத்துக்குக் குறைவான விலையுள்ள வாகனங்களுக்கு 10% சதவீதம் சாலை வரி செலுத்தவேண்டும், 10 லட்சத்துக்கு அதிகமான வாகனங்களுக்கு 15% சதவீதம் சாலை வரி, அதில்லாமல் ரோடு சேப்டி வரி ரூ1500 பிடுங்குகிறார்கள். உதாரணமாக ஒரு கார் இன்வாய்ஸ் 10 லட்சம் என்றால், ரூ 1 லட்சம் சாலைவரியும், ரோடு சேப்டி வரி ரூ1500 செலுத்தவேண்டும்.
மக்கள் சிந்திக்கவேண்டும். தனியார்காரன் சாலைபோட்டு வசூலிக்கும்போது, ஆர்.டி.ஓ, அலுவலகம் ஏன் சாலை வரி, ரோடு சேப்டி வரி, பசுமை வரி என்று வசூலிக்கவேண்டும்?
டோல்கேட்களுக்கு முடிவுகட்டத் தமிழகத்தில் அனைத்துக்கட்சியும் ஒன்று சேர்ந்துபோராடவேண்டும், அனைத்துக் கட்சிவரவில்லை என்றால், டோல்கேட்டில் வரி செலுத்தும் வாகன உரிமையாளர்களையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்’’ என்று எச்சரிக்கைக் குரலில் கூறினார் பாலபாரதி.

கருத்துகள் இல்லை: