புதன், 4 அக்டோபர், 2017

நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் பொருத்தப்பட்டது

tamilthehindu : சசிகலாவின் கணவரும் 'புதிய பார்வை' இதழின் ஆசிரியருமான நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனைக்குச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ''நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார். அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா. இவரின் கணவர் ம.நடராஜன் (74). இவர் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. அத்துடன் அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதற்கிடையே, உறவினர் எஸ்.சங்கர் என்பவர் தன்னுடைய ஒரு பகுதி கல்லீரலையும், இ.கலாவதி என்பவர் தன்னுடைய ஒரு சிறுநீரகத்தையும் அவருக்கு தானமாக கொடுக்க முன்வந்தனர். ஆவணங்களைச் சரிபார்த்து, அவர்கள் உறவினர்கள் என்பதை உறுதி செய்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ), நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரின் உறுப்புகளை நடராஜனுக்கு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ''மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் யாருக்கு பொருத்தப்பட உள்ளது என்பதை சொல்வது சட்டப்படி தவறானது'' என்றனர்.
கணவர் நடராஜனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா இன்று (புதன்கிழமை) மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: