புதன், 4 அக்டோபர், 2017

அமைச்சர் செல்லூர் ராஜூ ஆர் எஸ் எஸ் அணிவகுப்பை தொடக்கி வைக்கிறார் ,, மதுரை

மின்னம்பலம் : மதுரையில் வரும் 8ஆம் தேதி நடக்கும் ஆர்.எஸ்.எஸ். பேரணியை அமைச்சர் தொடங்கிவைப்பதா என்று எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் வருகின்ற 8ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியைக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கிவைக்கிறார்.
1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துவங்கப்பட்டது. எனவே, ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தில் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்திவருகிறது. கடந்த 6 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின், நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றுத் தற்போது ஊர்வலம் நடத்தப்பட்டுவருகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காக்கி வண்ண அரைக்கால் சட்டை அணிந்து அணி வகுப்பு நடத்துவதுதான் நீண்ட கால நடைமுறை. பேரணியில் செல்பவர்கள் அரைக்கால் சட்டை அணியக் கூடாது. முழுக்கால் சட்டை அணிந்துதான் செல்ல வேண்டும். கையில் லத்தி போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. காவல் துறை விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். எந்த விதமான சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அனுமதி வழங்கினார். அதன்பின், கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜயதசமி விழாவை முன்னிட்டு இரண்டு இடங்களில் ஆா்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது.
திருப்பத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மாவட்டத் தலைவர் (ஜில்லா சங்க சாலக்) ராமசாமி தலைமை வகித்தார். ஊர்வலம் தபால் நிலையம் அருகில் துவங்கி நகரின் முக்கிய வீதிகளில் சென்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது மதுரையில் வரும் 8ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. இதை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கிவைக்கிறார். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அமைச்சர் தொடங்கிவைப்பதற்கு கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் கூட்டாகக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு பலமுறை காவல்துறை அனுமதி மறுத்தது. அப்போது நீதிமன்றத்திற்கு சென்று, நீதிபதிகள் பல நிபந்தனைகளை விதித்தப் பிறகே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு அனுமதி கிடைத்தது.
அம்மா வழியில் ஆட்சி செய்வதாக கூறும் முதல்வர் எடப்படியார் ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு நிபந்தனைகள் இன்றி அனுமதி வழங்கி இருப்பதும், அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கிவைப்பதும், அதிமுகவின் கொள்கைகளுக்கும், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், சமூகநீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா அம்மா ஆகியோருக்கும் செய்யும் துரோகமாகும்.
தமிழ்நாடு அமைதிப் பூங்கா எனப் பெயர் பெற்ற பூமி. இங்கே சாதி, மத வேற்றுமைகளை தாண்டி, தமிழர்கள் சமூக நீதியால் இணைக்கப்பட்டு அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்துவருகிறார்கள். அந்த அமைதியிலும், ஒற்றுமையிலும் மண் அள்ளிப் போட வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என அந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: