வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஜல்லிகட்டு .. பிக் பாஸ் ஜூலி ,,, மிகப்பெரும் நட்சத்திரம் உருவாகிறது?

நக்கீரன் : 'பிக்பாஸ்' போதையிலிருந்து அதன் பார்வையாளர்கள்  மெல்ல மீண்டுவருகிறார்கள்.  நிகழ்ச்சி நடந்த நூறு நாட்களிலும் தொடர்ந்து அதிகமாகப் பேசப்பட்டவர்கள் இருவர். ஒருவர், ஓவியா. ஓவியா ஆர்மி, ஆரவுடன் காதல், கொக்கு நெட்டைக் கொக்கு என அவரது சேட்டைகள் பேசப்பட, இன்னொரு பக்கம்  ஓவியாவுக்கு துரோகம், போராட்டமெல்லாம் நடிப்பு, மாடர்ன் மாற்றம் என மக்களால் அதிகம் பேசப்பட்டவர், சரியாகச் சென்னால்  திட்டப்பட்டவர்  ஜூலி. திடீரென புகழப்பட்டு, அதே வேகத்தில் இகழப்பட்டு, இப்பொழுது இரண்டுக்கும் ஓய்வு விட்டு இருக்கும் ஜூலியிடம் பேசினோம்...'ஜல்லிக்கட்டு', 'பிக் பாஸ்' இது எல்லாவற்றுக்கும் முன்னர், ஜூலி யார்?<">என் பேரு மரிய ஜூலியானா. என்னைத் தெரியாதவங்க இருக்க முடியாது. நான் பிறந்தது சென்னையில தான். பேரு வச்சது ஊர்ல. திரும்ப ஸ்கூல் சேக்குறதுக்கு சென்னை வந்துட்டோம். செயின்ட் டாமினிக்ஸ் ஸ்கூல்ல தான் படிச்சேன்.  டாக்டராகணும்னு ஆசைப்பட்டேன். குடும்ப சூழ்நிலைனால, ராமச்சந்திரா பல்கலைக்கழகத்துல நர்சிங் படிச்சேன்.

முடிச்சுட்டு வெளிநாடு போக முயற்சி பண்ணி, ஒரு இடத்துல பணம் நிறைய குடுத்து, பணத்தையெல்லாம் இழந்தேன். ஏமாற்றத்துல துவண்டு போனாலும், அடுத்த நாளே இன்னொரு ஹாஸ்பிடல்ல போய் வேலைக்கு முயற்சி பண்ணேன். வேற யாரும் அவ்வளவு சீக்கிரம் எழுந்து நிப்பாங்களான்றது சந்தேகம் தான், நான் நின்னேன். அதுக்கப்புறம் ஜல்லிக்கட்டுப் போராட்டம்...பிக் பாஸ்... அடுத்து என் வாழ்க்கைல என்ன நடக்கக் காத்திருக்குனு எனக்கே தெரியாது... (சிரிக்கிறார்)

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஜூலி எப்படி வந்தார் ?

என் ஆர்வம், தமிழ் மேல பற்று தான் காரணம். பொண்ணுங்க எங்க இருக்காங்கனு பாத்து, போய் கூட நின்னேன். அங்க, என்னோட குரல், சத்தம், தைரியம் நல்லா இருக்குனு, 'அக்கா நீங்க வாங்க'னு   முன்னாடி நிக்க சொன்னாங்க. முழுமையா நின்னேன். போராட்டம் ஜெயிச்சது எனக்கு பெரிய சந்தோஷம். ஆனா, அப்போ  பல அரசியல்வாதிகள் என்னை மிரட்டுனாங்க. 'கொன்னுடுவே'ன்னு சொன்னாங்க...'இருக்குற இடமே தெரியாம போய்டுவ'னு சொன்னாங்க. அதுக்கெல்லாம் நான் பயப்படல, அதுதான் உண்மையான ஜூலி. பிக்பாஸ் ஒரு 'ஷோ'.  ஆனா, மக்கள் அதைப் புரிஞ்சுக்கல.                     

அப்போ, பிக்பாஸ் பொய்யா ?

நான் அப்படி சொல்ல வரல. ஒரு 'ஷோ'ல எல்லோருமே ஜெயிக்கிறதுக்கு என்ன தேவையோ அப்படிதான் நடந்துப்பாங்க. முழுசா உண்மையா இருக்க மாட்டாங்க. அதுவுமில்லாம, வெளியில மக்களுக்கு என்ன காட்றாங்கனு எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்கும்போது, 'இது தான் நீ, இது தான் உன் உண்மையான குணம்'னு நிறைய பேர் சொல்லுறது எனக்கு கஷ்டமா இருக்கு. என் உண்மையான குணத்தைப் பார்க்க என் வீட்டுக்கு வந்து பாருங்க. 'ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல எனக்குக் கிடைச்ச பெயரை, அன்பை இழந்துட்டேனோ'னு எனக்கு வருத்தமா இருக்கு.




'பிக்பாஸ்' - உங்களுக்குக் கொடுத்தது என்ன, உங்களிடம் பறித்தது என்ன ?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல என்னை 'வீரத்தமிழச்சி'னு மட்டும் எல்லாருக்கும் தெரியும். பிக்பாஸ்ல தான் என் பேரு ஜூலினு எல்லோருக்கும் தெரிஞ்சது. அம்பது படம் நடிச்சும், வெளியே பெயரே தெரியாதவங்க இருப்பாங்க. ஆனா, இன்னைக்கு, திட்டுறதுக்குனாலும், பாராட்டுறதுனாலும், என் பேரு ஜூலினு எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு. அது பிக்பாஸ் எனக்குக் கொடுத்தது.

எனக்கு நிறைய நல்ல பேர் இருந்துச்சு. தினமும் ஒரு மணிநேரம் மட்டும் காட்டப்படுகிற விஷயங்களை வச்சு, இப்போ அந்த நல்ல பெயரெல்லாம் போயிருச்சோனு தோணுது.

உங்களுக்கு ஏற்பட்ட எதிர்மறை பிம்பத்தை நீங்களும், உங்க குடும்பமும் எப்படி எடுத்துக்கிட்டீங்க, கடந்து வரப் போறீங்க?

இப்போ 'பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே'ல நான் மேடையேறியதுதான் இதையெல்லாம் நான் கடந்து வந்ததுடைய முதல் படி. அப்பா அம்மா, நிச்சயம் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பாங்க. நான் உள்ள இருந்தபோது, வெளிய நடந்தது எனக்குத் தெரியாது. ஆனால், எங்கப்பா 'உள்ள என்ன நடந்ததுன்னு உனக்கு மட்டும் தான் தெரியும், அந்த ஒரு மணிநேரம் காட்சி என் பொண்ணு கிடையாது'னு சொன்னார். அது போதும் எனக்கு.

கமலஹாசன் பற்றி?

கல்லூரியில் படிக்கும்போது, மேடையில் அமர்ந்திருந்த அவரை தூரத்தில் இருந்து பார்த்த நான், அவர் அருகிலிருந்து பேச வாய்ப்புக் கிடைத்தது பெரிய பாக்கியம். நிகழ்ச்சியில எல்லார்கிட்டயும் எப்படி மரியாதையா நடந்துக்கிட்டாரோ, அதே மரியாதையை சாதாரண பெண்ணான எனக்கும் கொடுத்தார். ஆனால், சில விஷயங்களில் ஒரு சார்பாக நடந்துகொண்டாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. 




நீங்கள் பேசியதைக் குறும்படம் போட்டுக் காண்பித்தது போல, ஆரவ் சினேகன் பற்றிப் பேசியதையும் குறும்படம் போட்டுக் காண்பித்தார் கமல். ஆனால், அது உங்கள் அளவுக்கு  பெரிதாகப் பேசப்படவில்லையே?     

உண்மை தான்... 'ஷார்ட் டிரஸ்' போட்டவங்கள புகழ்ந்துவிட்டு, நாம 'ஷார்ட் டிரஸ்' போட்டா திட்டுறாங்க. 'இது உனக்குத் தேவையா?'னு கேக்குறாங்க. சாதாரண பின்னணியிலிருந்து வந்த பொண்ணு நடிகையா, ஆங்க்கரா ஃபேமஸ் ஆகக்கூடாதா?  இதே பார்வை தான் எல்லா விஷயத்திலும் இருக்கு. வெளிய வந்தவுடன்  பரணி அண்ணன் கிட்ட நான் போயி மன்னிப்பு கேட்டேன். உள்ள இருந்தப்போ அவருக்கு ஏன் 'சப்போர்ட்' பண்ண முடிலன்னு எனக்குதான் தெரியும். ஓவியாக்கு ஏன் சப்போர்ட் பண்ணலன்னு கேக்குறாங்க. முதல் மூணு வாரம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும். மக்களில் ஒருத்தியா என்னைப் பாக்காம விட்டுட்டாங்க. 'நம்மில் ஒருத்தியான  ஒரு சாதாரண பொண்ணு போய் அங்க இத்தனை நாள் இருந்துருக்காளே'னு மக்கள் நினைக்கணும். ஆனா, என் மேல தான் அதிக கெட்ட பெயர், என்னைத் தான் அதிகமா 'ட்ரோல்' பண்றாங்க. ஏன்னா, எனக்கு பின்புலம் இல்ல...நான் யார்னாலயும் இந்த இடத்துக்கு வரல.. 

உங்களைப் பற்றி வந்த 'மீம்ஸ்' எல்லாம் பாத்தீங்களா?

என்னைப் பற்றி 'மீம்ஸ்' போட்டவங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. நல்ல மீம்ஸ் போட்டவங்களுக்கு நன்றிகள், என்னைத் திட்டி மீம்ஸ் போட்டவங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள். நீங்க தான் பிக் பாஸ் முடிஞ்சு இத்தனை நாளாகியும் என்னை மக்களுக்கு நினைவுபடுத்திக்கிட்டே இருக்கீங்க. நிறைய பேர் என்கிட்டயே சொன்னாங்க, 'உங்களைப் பத்தி மீம்ஸ், வீடியோஸ் போட்டு எங்க பேஜ்க்கு நிறைய பேர் வந்தாங்க, பணம்லாம் சம்பாரிச்சோம்'ன்னு. என்னால இது நடந்தது சந்தோஷம். அதே நேரம், நானும் மனுஷிதான். எனக்கும் இதயம் இருக்கு, அதைக் காயப்படுத்தினா வலிக்கும். கொஞ்சம் பாத்து செய்ங்க. இப்பவும் பல பிரச்ச்சனைகள், போராட்டங்கள் நாட்டில நடந்துக்கிட்டுருக்கு. அனால், இப்படிப்பட்ட விஷயங்களால மக்கள் என்னைப் பழைய ஜூலியா பாக்கல. மக்கள் ஏத்துக்கிட்டா, நான் மீண்டும் களத்துல இறங்கத் தயார்.

சந்திப்பு : வினோத், பாலாஜி
தொகுப்பு : வசந்த்                                 


கருத்துகள் இல்லை: