ஞாயிறு, 1 அக்டோபர், 2017

கலைஞர் பெயர் நீக்கம் திட்டமிட்டு நடந்திருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி,, சிவாஜி மணிமண்டபம் ,

நக்கீரன் : தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
;எதற்கும் லாயக்கற்ற வகையில் நடக்கும் இந்த ஆட்சியில் அவர்களுடைய பதவிகளை, அதிகாரங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும், கமிஷன் வாங்கவும், கொள்ளையடிக்கவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இன்னல்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ;அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் வரிப் பணமான அரசுப் பணத்தை, நியாயமாக அவரது பெயருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் செலவழித்திருந்தால் நான் வரவேற்றிருப்பேன். ஆனால், உட்கட்சி விவகாரங்கள், எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வது போன்ற செயல்களுக்குதான் அந்தப் பணம் செலவழிக்கப்படுகிறது. அதேசமயம், நீதிமன்றமே மாணவர்களையெல்லாம் அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவரக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், நேற்றைக்கு அதையும் மீறி மாணவர்கள், பள்ளிப் பேருந்துகளில் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட காட்சிகளைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதை நாம் பார்த்தோம்.
இந்த நிலையில்தான் இந்த ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது.



செய்தியாளர்: புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று நினைக்கிறீர்களா? மு.க.ஸ்டாலின்: இந்த ஆட்சி நீடிப்பதற்கு, நிலைப்பதற்கு எந்தவகையிலும் வாய்ப்பே இல்லை. செய்தியாளர்: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின்: ஏற்கனவே இருந்த பொறுப்பு ஆளுநர் போல் இல்லாமல், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் அவர்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையை நன்றாகப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் தன்னுடைய கடமையை ஆற்றுவார் என்ற நம்பிக்கையோடு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறோம், வரவேற்கிறோம். செய்தியாளர்: ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் அவர்களுடைய மணிமண்டபத்தில் வைக்கப்படவிருக்கிற கல்வெட்டில் தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயர் நீக்கப்பட்டிருக்கிறதே?

மு.க.ஸ்டாலின்: நடிகர் திலகம் அவர்களின் சிலை கடற்கரை சாலையில் இருந்து ஏன் அகற்றப்பட்டது என்பதை இதிலிருந்து நீங்கள் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். அந்த சிலையின் கல்வெட்டில், அதை திறந்துவைத்த தலைவர் கலைஞர் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. இப்போது எடப்பாடியின் கண்களையும், அதிமுக ஆட்சியாளர்களின் கண்களையும் உறுத்தியிருக்கிறது. எனவே திட்டமிட்டு, இதுகுறித்து நீதிமன்றத்தில் கூட வாதாடாமல், அங்கிருந்து சிலையை அப்புறப்படுத்துவதில் இந்த ஆட்சி முனைப்பாக இருந்தது. அந்தச் சிலையை கொண்டுபோய் மணிமண்டபத்தில் வைக்கின்றபோது, தலைவர் கலைஞர் அவர்களின் பெயரை நீக்கிவிட்டு, ஜெயலலிதாவின் பெயர் அதில் பொறிக்கப்பட வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இவையெல்லாம் நடந்திருக்கிறது.

செய்தியாளர்: எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக ஆட்சியை ‘மைனாரிட்டி ஆட்சி’ என்கிறார், ஆனால், திமுக ஆட்சிதான் ‘மைனாரிட்டி ஆட்சி’ என்று முதலமைச்சர் கூறியுள்ளாரே?

மு.க.ஸ்டாலின்: 2006 முதல் 2011 வரை தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் ‘மைனாரிட்டி’ ஆட்சியாகதான் இருந்தது. ஆனால், காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவோடு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியை நடத்தியிருக்கிறோம். ஆனால், இப்போது இருக்கும் மைனாரிட்டி ஆட்சி என்பது, மெஜாரிட்டியாக இருந்த அவர்களது கட்சியே உடைந்து ‘மைனாரிட்டி’ ஆகியிருக்கிறது. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க உத்திரவிட வேண்டுமென கவர்னரிடத்தில் சென்று மனுக்களை தரும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால், அப்போது திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற நிலைகள் ஏற்படவில்லை, அதனால் மைனாரிட்டி என்ற நிலையும் வரவில்லை.

ஐந்து வருடம் ஆட்சியை சிறப்பாக நடத்திக் காட்டியவர் கலைஞர் அவர்கள். ஆனால், இன்றைக்கு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அந்த ஆட்சியைக் கூட தக்கவைத்துக் கொள்ளமுடியாத அளவில், இந்த ஆட்சி திரிசங்கு சொர்க்க நிலையில் இருப்பதுதான் உண்மை. செய்தியாளர்கள்: அமைச்சர்கள் அனைவரும்,

ஸ்டாலின் தன்னை முதலமைச்சர் என்று நினைத்து செயல்படுகிறார்’, என்று விமர்சனம் செய்கின்றனரே?
மு.க.ஸ்டாலின்: அவர்களைப் போல கற்பனை செய்து, கனவில் மிதப்பதல்ல. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, நான் மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம். இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: