வெள்ளி, 20 அக்டோபர், 2017

முரசொலியில் கலைஞர்: தொண்டர்கள் உற்சாகம்! ...கலைஞரின் அந்தக் குரல்’ மீண்டும் ஒலிக்கும்.

 மின்னம்பலம் : திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு நேற்றைய தினம் முரசொலி பவள விழா கண்காட்சியைப் பார்வையிட கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சென்னையில் இல்லாத நாள்களைத் தவிர, தினமும் அண்ணா அறிவாலயத்துக்கும் முரசொலி அலுவலகத்துக்கும் சென்று அன்றாட பணிகளைக் கவனிப்பார். இந்த வழக்கம் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.


இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘ஒவ்வாமை’ காரணமாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்த கருணாநிதி வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வந்தார். தொடர்ந்து நவம்பர் மாதம் ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர், சிகிச்சை முடிந்தபிறகு கிட்டத்தட்ட 10 மாதங்களாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
அவரின் புகைப்படம் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வந்தது. அந்தப் புகைப்படங்கள் அவர் நல்ல உடல்நலத்தோடு இருப்பதையும் வெளிப்படுத்தியது.

இதற்கிடையே திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, திமுக சார்பில் முரசொலி பவளவிழா கடந்த ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. முரசொலி கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கருணாநிதி பங்கேற்பார் என்று தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் அவரால் விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு முறை கருணாநிதி முரசொலி பவள விழா கண்காட்சியைப் பார்வையிட வரவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமானார்கள். ஆனால், கலைஞர் வரவில்லை என்ற செய்தி அறிந்தவுடன் ஏமாற்றமடைந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக நேற்றைய தினம் (அக்டோபர் 19) மாலை 7 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி முரசொலி பவள விழா கண்காட்சியைப் பார்வையிட அழைத்து வரப்பட்டார். கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு முதன்முறையாக கலைஞர் ஒரு பொதுவெளிக்கு தற்போதுதான் அழைத்து வரப்பட்டுள்ளார். அவருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், முரசொலி செல்வம் ஆகியோரும், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு என திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் உடன் வந்தனர். முன்கூட்டியே தெரிவித்தால் கூட்டம் அதிகமாகிவிடும் என்பதால், கலைஞர் முரசொலி அலுவலகம் வரும் தகவல் முன்னதாக தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கண்காட்சி அரங்கினுள் ஒவ்வொரு பகுதியாக அழைத்துச்சென்று, அந்த பகுதியிலும் இடம்பெற்றுள்ளவை குறித்தும் கலைஞருக்கு, ஸ்டாலின் விளக்கம் அளித்துக்கொண்டே வந்தார். அதற்குப் பதிலாக கலைஞர் தனது பதிலை புன்முறுவல் மூலம் தந்தார். சுமார் ஒரு மணிநேரம் முரசொலி கண்காட்சியைச் சுற்றிப்பார்த்த கருணாநிதி 8 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார். அவரின் வருகையை அடுத்து கோடம்பாக்கம் பாலம் முழுவதும் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்தனர். அவர்களைப் பார்த்து கையசைத்த கருணாநிதி, மீண்டும் கோபாலபுரம் இல்லத்துக்குக் காரில் புறப்பட்டுச் சென்றார்.

உடல்நலக் குறைவால் ஓராண்டு காலமாக வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வரும் கலைஞரால், சுவாசத்துக்காக தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டிரக்கியாஸ்டமி குழாயினால், சந்திப்பவர்களிடம் பேச முடியவில்லையே தவிர, சந்திக்க வருபவர்களில் நெருக்கமானவர்களைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டு கையைப் பிடித்துக்கொள்கிறார். ஆசி பெறுவதற்காக அவரை சந்திப்பவர்களின் தலையில் கையை வைத்து ஆசீர்வாதமும் செய்கிறார். இந்த நிலையில் அவருக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள குழாயை அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே முரசொலி பவள விழாவில் வைகோ கூறியது போல, ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்னும் கலைஞரின் குரல் மீண்டும் எப்போது ஒலிக்கும் என்று திமுக தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட கருணாநிதி, அதன்பிறகு பெரிய நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. காவேரி மருத்துவமனையைத் தவிர வேறெந்த பொதுவெளிக்கும் செல்லவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு தற்போது முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட வந்துள்ளார். இது தமிழகம் முழுவதுமுள்ள திமுக தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் ‘அன்பு உடன்பிறப்புகளுக்கு’ என்று கலைஞர் எழுதும் கடிதத்தை எதிர்நோக்கி திமுகவின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் காத்துள்ளனர்.
வைகோ கூறியது போல ‘கலைஞரின் அந்தக் குரல்’ மீண்டும் ஒலிக்கும்.

கருத்துகள் இல்லை: