வெள்ளி, 20 அக்டோபர், 2017

இந்து–முஸ்லிம் காதல் திருமணம் செல்லும் கேரள ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

தினத்தந்தி :கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஒரு இந்து மத இளம்பெண், கடந்த மே 16–ந் தேதி, வீட்டை விட்டு வெளியேறி, தன் காதலரான முஸ்லிம் வாலிபரை திருமணம் செய்து கொண்டார். கொச்சி,  அப்பெண்ணின் பெற்றோரின் புகாரின்பேரில்,
இருவரையும் அரியானா மாநிலத்தில் போலீசார் பிடித்து அழைத்து வந்தனர். அப்பெண்ணை பெற்றோருடன் செல்ல கீழ்கோர்ட்டு அனுமதித்தது. மகளின் மனதை மாற்றுவதற்காக, அவரை ஒரு யோகா மையத்தில் பெற்றோர் சேர்த்தனர்.
முஸ்லிம் வாலிபர் தாக்கல் செய்த ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனுவின்பேரில், ஒரு தனி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அப்பெண், பெற்றோருடன் செல்வதாக கூறினார். ஆனால், 4 நாட்களில் அவர் ‘பல்டி’ அடித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.சிதம்பரேஷ், சதீஷ் நினான் ஆகியோர் அடங்கிய கேரள ஐகோர்ட்டு அமர்வு, இவர்களின் திருமணம் செல்லும் என்று நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–
தனது முடிவில் உறுதியாக நின்ற பெண்ணின் துணிச்சலை பாராட்டுகிறோம். திசை திருப்பும் மனுக்களால் நீதியை சீர்குலைக்க முயன்ற பெற்றோருக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். ஒருவர், தான் விரும்பிய மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அரசியல் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அந்த உரிமையை யாராலும் பறிக்க முடியாது.
எனவே, இந்த திருமணம் செல்லும். திருமணம், பதிவு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு மதத்தினர் திருமணம் செய்து கொள்ளும்போதெல்லாம், அதற்கு மதச்சாயம் பூசி, மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது வேதனை அளிக்கிறது. எல்லா மதமாற்ற திருமணங்களையும் தவறாக பார்க்க தேவை இல்லை.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை: