சனி, 21 அக்டோபர், 2017

மெர்சல் படத்துக்கு பாஜக இலவச விளம்பரம் கொடுக்கிறதா ? தமிழிசை பேட்டி!

tamilthehindu : தமிழகத்தில் நிலவும் டெங்கு காய்ச்சல் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி சலசலக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது மெர்சல் பிரச்சினை. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பணமதிப்பு நீக்கம் குறித்த சர்ச்சைக் கருத்துகள் மெர்சல் படத்தில் இடம்பெற்றிருப்பதாக பாஜகவினர் படபடத்துக் கொண்டிருக்கின்றனர். கருத்து சுதந்திரத்தை பாஜக ஒடுக்க நினைக்கிறது என அரசியல் தலைவர்களும் தமிழ்த் திரையுலகினரும் கூறிவருகின்றனர்.
இத்தகைய சூழலில் 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழகத்தில் சுட்டிக்காட்ட எத்தனையோ பிரச்சினைகள் நிலவும்போது மெர்சல் சர்ச்சையைக் கையில் எடுத்து அப்படத்துக்கு பாஜக இலவசமாக விளம்பரம் செய்வதாகக் கூறப்படுகிறதே?
மெர்சலுக்கு நாங்கள் இலவசமாக விளம்பரம் செய்வதாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு திரைப்படத்தின் பின்னால் கடைநிலை ஊழியரின் உழைப்புகூட இருக்கிறது. சாலிகிராமத்தில் வசிப்பதால் சினிமா துறை கடைநிலை ஊழியர்களின் நிலவரம் எனக்குத் தெரியும்.
மெர்சல் படத்தையே நாங்கள் எதிர்க்கவில்லை. அது எங்கள் இலக்கும் அல்ல. அதேவேளையில் இலவச விளம்பரமாகிவிடும் என்பதற்காக மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள தவறான தகவல்களை சுட்டிக்காட்டாமல் இருந்தால் நான் கடமை தவறியதாகிவிடும்.
அதுதவிர மெர்சல் பிரச்சினையை மட்டுமே நாங்கள் பேசவில்லை. இன்று தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் டெங்கு பிரச்சினை குறித்து நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் காலை டெங்கு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டுவிட்டுதான் நான் எனது மற்ற அலுவல்களைச் செய்கிறேன். டெங்கு பிரச்சினை குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்திடம் எடுத்துரைத்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டுதான் இருக்கிறோம்.
மத்திய அரசின் திட்டங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையா?
நிச்சயமாக இல்லை. யார் வேண்டுமானாலும் விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால், விமர்சனம் என்ற பெயரில் தவறான தகவல்களைப் பரப்பக்கூடாது என்பதையே நான் மீண்டும் மீண்டும் கூறிவருகிறேன். ஜிஎஸ்டி போன்ற மிகமிக நல்லதொரு திட்டத்துக்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் வியர்வையையும் ரத்தத்தையும் நான் அறிவேன். நிபுணர்கள், வல்லுநர்களின் பலகட்ட ஆலோசனைக்குப் பின்னர் மிகவும் நேர்த்தியாக அமல்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தைப் பற்றி பொத்தாம் பொதுவாக கருத்து சொல்லிவிட்டுப் போவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கும் பாமர மக்களுக்கு ஜிஎஸ்டி தொடர்பாக தவறான புரிதலே சென்றடையும். அதன் காரணமாகவே அதை எதிர்க்கிறோம்.
ஜிஎஸ்டி விமர்சிக்கக்கூடாது என நெருக்குவதால் பாஜக தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே?
ஜிஎஸ்டி ஒரு வெற்றித் திட்டம். அதன் மூலம் பலரும் பயன் பெறுகின்றனர். பல தரப்பினராலும் பாராட்டப்படும் ஒரு திட்டம் எப்படி தோல்வியடைந்ததாகக் கருதப்படும். கருத்து சொல்ல வேண்டுமே என்பதற்காக சிலர் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்.
தமிழகத்தில் காலூன்ற முயலும் வேளையில், விஜய் போன்ற ரசிகர் பட்டாளத்தை பெருமளவில் வைத்துள்ள நடிகரை எதிர்ப்பதன் மூலம் கணிசமான வாக்கு வங்கியையும் பாஜக இழக்கும் வாய்ப்பும் இருப்பதாகக் கூறப்படுகிறதே?
நாங்கள் விஜய்யை எதிர்க்கவில்லையே. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் பேசலாம் என்றுதானே சொல்கிறோம். தவறான ஒரு கருத்தைப் பரப்பும் கருவியாக இருக்கக்கூடாது என்கிறோம். எங்களது ஆக்கபூர்வமான விமர்சனத்தைக் கூட தவறாக புரிந்து கொள்ளும் பக்குவத்தில் விஜய் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஒருவேளை அவர்கள் எங்களை அப்படி நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ரஜினி, கமல் - இவர்கள் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து?
ஜனநாயக நாட்டில், ரஜினி, கமல் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யாராக இருந்தாலும் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். ட்விட்டரிலும் இணையதளத்திலும் அல்ல.
ரஜினிகாந்த் மீதான பாஜக நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறதா?
ரஜினி, கமல் மட்டுமல்ல எங்கள் கொள்கையை ஒத்துப்போகும் யாரையும் அரவணைக்க பிரதமர் மோடி தயாராகவே இருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்ப்பைப் பெற்றுள்ளன. அதனால் ரஜினி, கமல் வந்துதான் தமிழகத்தில் பாஜக கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற நிலைமை இல்லை. அவர்கள் வந்தால் வரவேற்ப்போம் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
பாஜக அச்சத்தில் மெர்சலை விமர்சிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளார் குஷ்பு கூறியிருக்கிறாரே?
நாங்கள் எதைக் கண்டும் அச்சம் கொள்ளும் அவசியமில்லை. அதனால் குஷ்பு விமர்சனத்துக்கு பதில் சொல்ல விருப்பமில்லை.
கருத்து சுதந்திரம் - பாஜகவின் வரையறைதான் என்ன?
நாங்கள் எந்த வரையறையும் வைக்கவில்லை. எங்களைப் போல் சுதந்திரம் அளிப்பவர் யாரும் இல்லை. அதன் காரணமாகவே, மத்திய அரசின் இயந்திரமான மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர்கூட மெர்சல் படத்தை மறு தணிக்கை செய்ய முடியாது என்ற கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க முடிகிறது.
பாஜக ஒரு விஷயத்தை எதிர்க்கிறது எனத் தெரிந்தும் பாஜக ஆட்சியின் கீழ் இருக்கும் தணிக்கைத் துறை அதிகாரி அதை மறுத்துப் பேசுகிறார். இது ஒன்றேபோதும் நாங்கள் எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறோம் என்பதை விளக்க.
பராசக்தி இப்போது வெளியாகி இருந்தால் பாஜக என்ன செய்யும்? என ப.சிதம்பரம் ட்வீட் செய்திருக்கிறார். உங்கள் கருத்து?
நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியவர்களே இவர்கள்தான். ஜனநாயகத்தின் கழுத்தெலும்பு முறிக்கப்பட்டதும் இவர்கள் காலத்தில்தான். ஃபேஸ்புக் விமர்சனத்துக்காக கல்லூரி மாணவிகள் என்றுகூட பார்க்காமல் வழக்கைப் பாய்ச்சி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கியதை சிதம்பரம் மறந்துவிட்டார் போல. அரசியல் நேர்மறையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவும் அரசியலும் பிண்ணிப் பிணைந்தது. அதை பிரிக்க நினைப்பதே ஆபத்தானது; மக்கள் உணர்வுகளில் கைவைக்கும் செயல் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால், மத்திய அரசின் திட்டம் விமர்சிக்கப்பட்டதற்காக மெர்சலுக்கு பாஜகவால் காட்டப்படும் எதிர்ப்பின் வீரியம் தமிழ் மக்களின் உணர்வுகளை பதம் பார்ப்பதாகிவிடாதா?
தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக அரசியல் ரீதியான தவறான விமர்சனங்களை சினிமாத் துறை முன்வைத்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர் ஒரு படத்தை பற்றி விமர்சனம் செய்தால் எப்படி இருக்குமோ அத்தகைய ஆதங்கமே ஜிஎஸ்டி குறித்த தவறான புரிதலை மெர்சல் திரைப்படம் பரப்புவதால் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
சமூக வலைதளங்கள் விமர்சனக் களங்களாக மாறிவிட்ட சூழலில் உங்கள் மீது குவியும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால், தனிநபர் மீதான தாக்குதல்களை ஊக்குவிக்கக் கூடாது. என்னைப் பற்றி தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடுவோரைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். நான் ஒரு மருத்துவர், அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர், தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர், பெண் அரசியல்வாதி இவையெல்லாம் அந்த விமர்சகர்களுக்குத் தெரியவில்லை. என்னுடைய உருவத்தை வைத்தே விமர்சிக்க முடிகிறது. அப்படியென்றால் அவர்களுக்கு நேர்மறையான விஷயங்கள் எதுவுமே கண்ணில் படவில்லை என்றே அர்த்தம். அத்தகையவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்.
எங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் மோடி பார்த்துக் கொள்வார் என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறாரே? அப்படி என்னதான் பாஜக - அதிமுக இடையே இருக்கிறது. இது தேர்தல் கூட்டணியாகக்கூட எதிர்காலத்தில் பிரதிபலிக்குமா?
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒட்டுமொத்த இந்தியர்களின் கருத்தையே பிரதிபலித்திருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எந்தப் பிரச்சினை வந்தாலும் மோடி பார்த்துக்கொள்வார். அத்தகைய நம்பிக்கையையே நாங்கள் விதைத்திருக்கிறோம். மற்றபடி அதிமுகவுடனான கூட்டணி என்றெல்லாம் இப்போதைக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை

கருத்துகள் இல்லை: