புதன், 18 அக்டோபர், 2017

கமலஹாசன் : பணமதிப்பு இழப்பை தவறு என்று ஒப்புகொள்ளும் பிரதமருக்கு எனது சலாம் காத்திருக்கிறது ! Too late too little

விகடன் :நமது நிருபர் : ”மத்திய அரசு, மாநில அரசு என்ற பாகுபாடில்லாமல், இந்தியாவின் அற்புதப் பன்முகத்தன்மை பாதிக்கப்படும் போதெல்லாம் என் குரல் எழும் என்பதே உண்மை. ஆனால், என்பால் பிழை இருப்பின் பகிரங்கமாக மன்னிப்பு கோரவும் நான் தயங்கியதில்லை” என பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி, கறுப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையாக, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டார். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், இந்த நடவடிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது தான் அவசரப்பட்டுவிட்டதாகவும் அதற்காக இப்போது மன்னிப்புக் கேட்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.   சாயம் வெளுத்த கமல்   டவுசர் கழண்ட மோடிக்கு கொடுக்கும் ஒத்தடம்
இதுகுறித்து ஆனந்த விகடனில் கமல் எழுதிவரும் 'என்னுள் மையம்கொண்ட புயல்' தொடரில் கமல் குறிப்பிடும்போது, “பணமதிப்பு நீக்கம் (demonetisation) பற்றி மாண்புமிகு பிரதமர் மோடி அறிவித்தபோது, கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்படவேண்டும் என்று ட்விட்டரில் என் கருத்தை வெளியிட்டேன். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்கான ஒரு வழி என்ற முறையில், முழு ஆதரவையும் அத்திட்டத்துக்குத் தருவது மட்டுமன்று, அதனால் விளையும் சிறு இடைஞ்சல்களையும் மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றே நான் நினைத்தேன். ஆனால், என் சகாக்கள் பலரும்,  பொருளாதாரக் கல்வி பெற்ற சிலரும் அலைபேசியில் கூப்பிட்டு, என் ஆதரவுக்கு எதிராகத் தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

கொஞ்சநாள் கழித்து, டீமானிடைசேஷனை நடைமுறைப்படுத்திய விதம் பிழையானது; ஆனால், யோசனை நல்ல யோசனைதான் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். அதற்கும் பிற்பாடு, பொருளாதார வல்லுநர்களின் விமர்சனக்குரல்கள் வலுத்தன. சரி, சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக்கொண்டேன்.

தற்போது, `யோசனையே கபடமானது’ என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது. திட்டத்துக்குப் பாராட்டு சொன்னதில் சற்றே அவசரப்பட்டுவிட்டதற்காக, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம்பிடிக்காமல் தவற்றை ஒப்புக்கொண்டால், பிரதமருக்கு என்னுடைய இன்னொரு சலாம் காத்திருக்கிறது. தவறுகளைத் திருத்தி ஆவன செய்வதும், முக்கியமாக அதை ஒப்புக்கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம்” என்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: